Monday, July 27, 2015

ஆட்டம் - சு. வேணுகோபால்




"பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்ற பழமொழி, படைப்பாளிகளுக்கு குறிப்பாக எழுத்தாளர்களுக்கு பொருந்தவே பொருந்தாது என்பதை மிகத் தீவிரமாக நம்புகிறவன் நான், ஏனெனில் முதல் முறை சறுக்கி, பின் வீறு கொண்ட எழுந்த பலரின் எழுத்துக்களை வாசித்திருக்கிறேன். ஒரு கதையில் சொதப்பினாலும் மறு கதையின் மூலம் வாசகனின் ஆதர்சனாக முடியும் ஆகையால் ஒரு சோறு பதம் இங்கு எடுபடாது என்றே நம்புகிறேன். ஆனால் திரு. சு. வேணுகோபாலின் எழுத்தை கண்ணை மூடிக்கொண்டு சேர்த்துவிடலாம் ஒரு சோறு பதத்திற்குள். நன்றாக நினைவிருக்கிறது, சென்ற தீபாவளிக்கு முந்திய தின இரவினில் தான் திரு. சு. வேணுகோபாலின்  "திசையெல்லாம் நெருஞ்சி" என்ற நூலை வாசித்தேன், நூலை கையிலெடுத்த மூன்று மணி நேரத்திற்குள் வாசித்து முடித்துவிட்டேன். முதன் முதலில் வாசிக்கும் எவருக்கும் இவரின் எழுத்துகளை பிடித்துப் போகும் அந்தளவிற்கு விறு விறுவென நகரக் கூடிய எழுத்து.

தி. நெருஞ்சி தந்த கிறக்கத்தில், "பால் கனிகள்". "ஆட்டம்" என்று மேலும் இவரின் இரு படைப்புகளை கடந்தப் புத்தக திருவிழாவில் வாங்கி வந்திருந்தேன். அதில் "ஆட்டத்தை" வாசிக்க துவங்கினேன், ஆச்சரியம் என்னவெனில் இந்த நூலையும் ஒரே நாளில் வாசித்து முடித்தது தான். தன்னோட புத்திசாலித்தனங்களை வெளிக்கொணரும், வழியாய் புத்தகம் வெளியிடும் முறையை துவக்கியிருக்கும்  சில எழுத்தாளர்களுக்கு? மத்தியில், எவ்வித ஆடம்பரமுமின்றி, தன்னை சுற்றி நிகழ்ந்த எளிய நிகழ்வுகளையே கதைக்களனாக்கி நேர்த்தியாய் ஒரு நாவலை புனைந்திருக்கிறார் ஆசிரியர். 

சு. வே வின் படைப்பு யுக்தி ஒன்றும் புதியது என்று சொல்லிவிட முடியாது,  இவரின் படைப்புகளில் வரும் கதை மாந்தர்கள் எவரும் நம்மோடு மாறுபட்டு நிற்கவில்லை, திடீர் புத்திசாலிகளாக உருமாறி நமக்கு வகுப்பெடுப்பதுமில்லை. நம்மை விடவும் மிக எளிமையாகவே இருக்கிறார்கள், நிதர்சனத்தை துளியும் மீறுவதில்லை. கதை மாந்தர்களாக வருகிறவர்கள், கதை மாந்தர்களாகவே செல்கின்றனர். தமது பாத்திரங்கள் இயல்பினை மீறிவிடாமல் மிகத் தீவிரமாக பார்த்துக் கொள்கிறார் சு. வேணுகோபால்! இதை வைத்தே சொல்லிவிடலாம் இவருக்கு எழுத்தின் மீதுள்ள பற்றையும், காதலையும்!

கதைச்சுருக்கம்:

கபடியில் சிறந்து விளங்கிய வடிவேல், அதே ஊரை சார்ந்த கனகம் என்னும் பெண்ணை காதலிக்கிறான், இதற்கு அவனின் சக கூட்டாளிகளும் உதவுகிறார்கள், முதலில் மறுக்கும் கனகம் பிறகு ஒப்புக் கொள்கிறாள். இருவரும் வெவ்வேறு சாதியென்பதினால் ஊரை விட்டு ஓடி, பக்கத்து நகரத்தில் திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார்கள். இரண்டு பிள்ளைகளும் பிறந்து மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த வாழ்வில் திடீர் திருப்பமாக, கூட வேலை செய்யும் ஒருத்தனோடு காதல் கொள்கிறாள் கனகம், அதனையறிந்து வடிவேல் கண்டித்ததும், கள்ளக் காதலனோடு ஓடியும் விடுகிறாள். வேறுவழி தெரியாமல் மீண்டும் தான் பிறந்த கிராமத்திற்கே, தன்  பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வருகிறான் வடிவேல். அவமானம் அவனை துரத்துகிறது. பழைய படி மீண்டும் கபடி ஜெயித்து தான், பொண்டாட்டி ஏற்படுத்திய களங்கத்தை கொஞ்சமேனும் துடைக்க வீறு கொண்டு எழுகிறான், அப்படி வைராக்கியத்தோடு இருந்த வடிவேல் போட்டியில் ஜெயித்தானா ? என்பது தான் முதன்மை கதை. இதனிடையே சில கிளைக் கதைகளும் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு திருப்பத்தைக் கொடுத்தாலும் முதன்மை கதை நகர்வை துளியும் தடுக்கவில்லை.

இவரின் பலமே, எத்தனை கிளைக்கதைகளை புகுத்தினாலும் ஒவ்வொன்றுக்கும் தொடர்பிருப்பதாய் நகர்த்துவது தான். மற்றொன்று கபடி போட்டிகளின் போது நட்சத்திர வீரர், சக வீரன் கண்முன்னே வளருவதை கண்டு பொருமும் மன நிலையை அவ்வளவு நெருக்கமாய் பதிவு செய்திருப்பது. ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டவன், மனைவியும் இன்னொருவனோடு ஓடிப் போய்விடுகிறாள், தனது இரு விபரம் தெரியாத பிள்ளைகளை வைத்துக் கொண்டு அவன் படும் இன்னல்களை. மனக் குழப்பங்களை, அவமானம் தரும் வலிகளை  முடிந்தளவிற்கு பதிவு செய்திருக்கிறார் என்றே நம்புகிறேன். இறுதியாக ஒரு திருப்பத்தை தந்து முடித்திருப்பது விறுவிறுப்பு!

ஆசிரியருக்கு இந்த சித்திகளின் மீது என்ன தீரா வன்மமோ தெரியவில்லை, திசையெல்லாம் நெருஞ்சியில் சித்தி காடில்யா, வரம்பு மீறி உறவு கொள்வதாகவும் சொல்லியிருக்கிறார், அதே மாதிரி இந்த நாவலிலும் சித்தி நாகமணி என்பவள் மகன் உறவு வரும் காளையனிடம் உறவு கொள்வதாய் சித்தரித்திருக்கிறார். அவரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டினால் அவரிடம் கேட்டுவிட வேண்டுமென்ற முடிவிலிருக்கிறேன்.

இந்தப் புத்தகத்தின் அட்டைப்படமே வாங்க வேண்டுமென்ற ஆவலை தூண்டுகிறது, அந்த ஆவலை முழுமையாய் தீர்த்து வைக்கிறது உள்ளிருக்கும் எழுத்தும்.

திசையெல்லாம் நெருஞ்சி பற்றிய எனது பார்வைகளை படிக்க இங்கு செல்லுங்கள் : திசையெல்லாம் நெருஞ்சி - சு. வேணுகோபால்


=====================================================================

வெளியீடு: தமிழினி பதிப்பகம்

வருடம் : 2013 திசம்பர்

மொ . பக்கங்கள்: 120

விலை : 90/-

======================================================================       

படித்துச் சொன்னது

அரசன்
http://www.karaiseraaalai.com/
      


Sunday, July 5, 2015

கால்புழுதி - கனக தூரிகா


சென்ற புத்தக சந்தையில்  சந்தியா பதிப்பகத்தின் ஸ்டாலில் நுழைந்து மேய்ந்து கொண்டிருக்கையில் கண்ணில் பட்டது இந்த கால் புழுதி. தலைப்பின் வசீகரம் தான் வாங்க தூண்டியது, இருந்தும் ரெண்டொரு பக்கம் புரட்டுகையில் மனதுக்கு நிறைவாக இருந்தமையால் வாங்கினேன்! விறு விறுவென நகர்த்திச் செலுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி இருக்கிறார் கனகதூரிகா. ஆணை விட பெண்ணின் பார்வையில் ஒரு அழுத்தமும் அதனுள் விவரிக்க முடியாத நேசமும் பொதிந்திருக்கும் என்பதை தீவிரவாக நம்புகிறவன், ஆனால் நானறிந்தவரை சமகாலத்திய பெண் படைப்பாளிகள் என்று எடுத்துக்கொண்டால் அவர்களின் எழுத்து கடும் மூர்க்கத் தனமாக இருக்கிறது. சில கவிதாயினிகளை படித்து, வாழ்வினை நொந்த காலமெல்லாம் உண்டு. கடுமையான சொற்களின் குவியலாகவே இருக்கும் அவர்களின் கவிதைகளும், கதைகளும், எங்கு தேடி பிடிப்பார்களோ தெரியவில்லை வார்த்தைகளில் அவ்வளவு உக்கிரம் இருக்கும், துவேசம் இருக்கும். இப்படியான பலருக்கு மத்தியில் சத்தமே இல்லாமல் தனது எண்ணங்களை எளிதான வார்த்தைகளின் மூலம் மிகவும் நேர்த்தியாக பதிவு செய்து வருகின்றனர். அவ்வாறான விதிவிலக்குகளின் வரிசையில் திருமதி. கனக தூரிகாவும் வருகிறார் என்பதே நிம்மதி!



கதைச் சுருக்கம்:

பூப்பெய்துமுன்னே கோமளவேணியை வயதில் மூத்த சென்னப்பாவிற்கு திருமணம் செய்து வைத்து விடுகிறாள் அந்த கொடூரனின் அம்மா. அவனோ இரவில் வேறொருத்தியை அழைத்துக் கொண்டு வந்து திரை மறைவில் சுகம் அனுபவிப்பதும், விடிந்ததும் அவளை அனுப்பி வைத்துவிடுவது தான் அவனின் தினசரி வாடிக்கை, இப்படியிருக்க ஒருநாள் கோமளம் சமைந்து விடுகிறாள், அவனோ வேறொருத்தியை அழைத்து வருவதை நிறுத்தி விட்டு கோமளத்துடன் குடும்பத்தை செலுத்துகிறான். திடிரென ஒருநாள் இவனின் அம்மாவும் இறந்து போக, இவர்கள் இருவருமாக குடும்பம் நகர்கிறது. அடுத்த தெருவிலிருக்கும் ஒரு திருட்டு சாமியாரின் சகவாசம் இவனுக்கு கிட்ட வேலைக்கு போவதை விட்டுவிட்டு சாமியாரே கதியென்று கிடக்க, பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு கீரை அறுத்து விற்கும் வேலைக்குப் போக ஆரம்பிக்கிறாள் கோமளவேணி.

கோமளத்தின் சம்பாத்தியத்தில் கணவனை உட்கார வைத்து சோறு போடுவதில்லாமல், மூன்று பிள்ளைகளையும் பெற்று விடுகிறாள். முதல் குழந்தை பிறக்கும் நிலை, கொடுமையிலும் கொடுமை! இப்படியொரு அவலம் வேறு எவருக்கும் நேரக்கூடாது என்று மனது வேண்டுவதை தவிர்க்க முடியவில்லை! இரண்டாவது பிள்ளை ரங்கன் காதல் தோல்வியில் இறந்து விட, மூன்றாவது பையனான கண்ணனை படிக்க வைத்து, தன்னோட முதலாளி சந்திரண்ணா விடமே சம்பந்தம் பண்ணுகிறாள். அதன் பிறகு கோவை குண்டு வெடிப்பினால் கண்ணனின் பட்டறை பிழைப்பில் மண் விழ, மகனையும், மருமகளையும் வீட்டில் உட்கார வைத்துவிட்டு மீண்டும் கீரைக் கூடையை தலையில் சுமக்க துவங்குகிறாள் கோமளவேணி. பேத்தி புவனாவிற்கு வேலை கிடைத்து அவள் குடும்பத்தை நிமிர்த்தி திருமணம் செய்து கொள்வது போல் முடிகிறது.

நான் சொன்னது சுருக்கத்திலும் சுருக்கம் தான்! கதையின் நகர்வு அவ்வளவு அழகாக இருக்கிறது, குண்டு வெடிப்பு வரை கதை நகர்வதில் தொய்வில்லை, குண்டு வெடிப்பை வலிந்து திணித்த உணர்வை தந்தாலும் அதில்லாமலும் இந்த கதை நகர்வை யோசித்து பார்க்க முடியவில்லை. கோவை குண்டு வெடிப்பை மையப்படுத்தி தனியொரு நாவலாகவே எழுதி இருக்கலாம் என்ற உணர்வை தந்தது சிற்சிறு விசயங்களை சொல்லி சென்றபோது. எவ்வளவு பெரிய வலி, அதனால் பலரின் வாழ்வியலின் திசை பிறழ்வு இப்படி சொல்ல ஏராளம் இருந்தும் சொல்லாமல் சென்றது ஏமாற்றத்தை தருகிறது. சில விசயங்களை புறந்தள்ளி விட்டு, ஒட்டு மொத்தமாக "கால் புழுதி" நல்லதொரு உணர்வை தரக் கூடிய நூல் என்று சொல்லலாம்!

ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் பார்வையில் இந்தக் கதை சொல்லப் பட்டிருக்கிறது, ஒருவகையில் வாசிப்பதற்கு ஏதுவாக இருந்தாலும் வாசிக்கிற நமக்கு கதையோடு பயணிக்கிற உணர்வை ஏனோ தரவில்லை. இன்னொன்று எல்லா கதாப்பாத்திரங்களும் முடிந்த வரை தங்களை நியாயப்படுத்த பார்க்கின்றன! கோமளவேணி தந்த அழுத்தம் வேறு எந்த கதாப்பாத்திரமும் தரவில்லை, ஒருவேளை கோமளத்தை மனதில் வைத்து தான் மற்றவைகளை உருவாக்கினாரோ என்னவோ?

சட சடவென்று நகர்கிறது, உணர்வுகளிலும் குறைவின்றி சொல்லப் பட்டிருக்கும் இந்நாவலை வாய்ப்பு கிடைக்கையில் வாசித்து விடுங்கள்!

==============================================================



சந்தியா பதிப்பகம்

புதிய எண் 77, 53 வது தெரு


9 வது அவென்யு, அசோக் நகர்


சென்னை 600 083


044.24896979

மொத்த பக்கங்கள்- 120

விலை: Rs. 75/-
===============================================================


படித்துச் சொன்னது 

அரசன் 
karaiseraaalai.com