Saturday, June 6, 2015

வீடியோ மாரியம்மன் - இமையம்




இமையம் அவர்களைப் பற்றி பெரிதும் அறிந்திடாத எனக்கு, இந்த வீடியோ மாரியம்மன் என்ற தலைப்புத்தான் என்னை வாங்கத் தூண்டியது. ஒருவித தயக்கத்துடன் தான் இந்த நூலை திறந்தேன், கொஞ்சம் கூட ஏமாற்றவில்லை, இப்புத்தகத்தை வாங்குகையில், என்ன மதிப்பீடு உள்மனதில் இருந்ததோ அதையும் தாண்டி என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. நேரடி அனுபவங்களை கதையாக்குவதில் பல சிக்கல்கள் இருக்கிறது, இமையம், அதையெல்லாம் தகர்த்து எறிந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இவரின் பெரும்பான்மையான கதைகள் உண்மை நிகழ்வுகளாக இருக்க கூடும் என்று நம்புகிறேன். கதை நகர்வும் அதன் மாந்தர்கள் பற்றிய விவரிப்பும் அப்படித்தான் இருக்கிறது.

கதை எழுதுவதாக நினைத்துக் கொண்டு, சமூகத்துக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருக்கும் பலருக்கு மத்தியில் இயல்பின் வரம்பு மீறாமல், வாசகனின் முடிவுக்கு கதையை விட்டுவிட்டு ஒதுங்கி கொள்கிறார் திரு. இமையம். அறிவுரை சொல்லவில்லை என்பது சற்று ஆறுதல். இருப்பினும் கதையை வாசித்து முடித்துவிட்டு அதன் மையக் கருத்து என்னவென்று சிந்திக்க துவங்கினால், ஒவ்வொரு கதையும் பெரிய வகுப்பெடுத்துச் செல்கிறது. ஆசிரியர் என்பதினால் இந்த நெளிவு சுளிவு வந்திருக்குமோ என்னவோ? உண்மையில் ஒவ்வொரு கதையும் ஒரு சுயபரிசோதனை செய்யத் தூண்டும் அளவிற்கு வலுவான முடிச்சுக்கள் கொண்டுள்ளன!

இக்கதைகள் அனைத்துமே, கிராமத்து மனிதர்களையும் அவர்களின் தினசரி வாழ்வியலை பற்றி பேசுவதினால், அதே சூழலில் வளர்ந்த என்னால் வெகு எளிதாக கதையுடன் ஒன்றிவிட முடிந்தது. மொத்தம் 11 சிறுகதைகள் உள்ளன. பெரும்பாலான கதைகள் பல முன்னணி இதழ்களில் வெளி வந்திருக்கின்றன! அவற்றில் இரண்டு மூன்று கதைகளை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்!

உயிர்நாடி:

தனியார் கம்பெனிக்காரன் அதிக விலை கொடுத்து விவாசய நிலங்களை வாங்கி கொண்டிருக்க, ஒரு கிழவர் மட்டும் விற்க மனமில்லாமல் இருக்கிறார், ஊரில் எல்லோரும் விற்று விட்டார்கள் உனக்கு மட்டும் விற்க ஏன் மனசு வரமாட்டேங்குது என்று சண்டை போடும் புள்ளைக்கும், அப்பனுக்குமான நிகழ்வு தான் கதை. எளிதான சம்பவம் தான் என்று கடந்து போக முடியாது அதனுள் அவ்வளவு உணர்வுகளை புதைத்து வைத்திருக்கிறார். காலம் மாறிக்கொண்டு இருக்கிறது, ஒரு தலைமுறைக்கும் இன்னொரு தலைமுறைக்குமான இடைவெளி எப்படி உருவாகிறது, அதன் நன்மை தீமைகள் என்ன? என்று அழுத்தமாக சொல்லிருக்கிறார். விவசாயத்தையே உயிரென நேசித்த ஒரு கிழவனின் மனசை சிதறு தேங்காயைப் போல் உடைத்து, எழுத்துக்களாய் நம்முன் வைத்திருக்கிறார்.      

அம்மா :

குடும்பத்தோடு நகரத்துக்கு குடிப்பெயர்ந்துவிட்ட ஒரு தாழ்த்தப் பட்ட இளைஞன், ஊரில் ஒரு நிகழ்விற்காக வந்திருக்கையில் தனது ஆதங்கங்களை கொட்டி தீர்க்கும் தாயின் உரையாடலே அம்மா எனும் கதை. "நீ, மாறிட்டே, உன் பொண்டாட்டி சொந்தம் தான் முக்கியமுன்னு போயிட்டே" என்று சொல்லுகையில் கூட பாசத்தின் ருசி, வாசிக்கும் நமக்கும் தெரியுமளவிற்கு எழுதியிருப்பார் திரு. இமையம். "கருவாடுன்னா உனக்கு ரொம்ப புடிக்குமென்று எடுத்து வைச்சேன், நான் ஒருத்தி மட்டும் தின்னு என்ன பண்ண போறேன், எடுத்துக் கொண்டு போய் வைச்சி கொடுக்க சொல்லி சாப்புடு " என்று ஓடிப்போய்  அடுக்குப்பானையில் இருக்கும் கருவாட்டை அள்ளி கடுதாசியில் போட்டு அனுப்பி வைப்பாள் அந்த தாய். கதை முழுக்க தொண தொணவென்று பேசிக்கொண்டு இருப்பதாக காட்டியிருந்தாலும் அதிலொரு அழுக்குப் பாசம் ஒளிந்திருக்கும். 

   
பயணம்:

கணவனை பறிக்கொடுத்த ஒருத்தி, அதிகாலையில் எழுந்து பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தன்னோட காட்டில் விளைந்து நிற்கும் கொத்த மல்லியை அறுத்தெடுக்க செல்லுவதை பயணமென்று கதையாக எழுதி இருக்கிறார். எழுத துவங்கியிருக்கும், வளரும் எழுத்தாளர்களுக்கு இது ஒரு பயிற்சியாக எடுத்துக் கொள்ளுமளவிற்கு நேர்த்தியான கதை. இப்படி ஒவ்வொன்றும் ஒருவித உணர்வின் குவியல் தான். 

இந்த மூன்றுகதைகளும் என்னை வெகுவாய் பாதித்தது, மற்ற கதைகளும் ஆணிவேராய் உள்ளுக்குள் இறங்கும் வல்லமை கொண்டவைகள் தான். வாசிக்க வேண்டிய புத்தகம், தவற விடவேண்டாம் என்பது எனது கருத்து.


ஆசிரியரைப் பற்றி:



கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த அண்ணாமலை என்று இயற்பெயரைக் கொண்ட திரு. இமையம் பள்ளி ஆசிரியராக பணி புரிகிறார். சமகாலத்திய படைப்பாளிகளில் முதன்மையானவர்கள் வரிசையில் வரக்கூடியவர். அதிகம் எழுதவில்லை என்றாலும் இவரது கதைகள் பெரும்பாலனாவைகள் மொழிப்பெயர்த்து வெளியிடப்பட்டு வருகின்றன. முதல் நாவலான "கோவேறு கழுதைகள்" 1994 வெளிவந்துள்ளது அதிலிருந்து அவ்வப்போது சிறுகதை தொகுப்பும், நாவலும் வெளிவந்து கொண்டிருக்கின்றன! 

மேலும் தகவலுக்கு: http://www.writerimayam.com/



===========================================================

மொத்த பக்கங்கள் : 227

பதிப்பகம் : க்ரியா 

விலை : 150/-

============================================================

படித்துச் சொன்னது 

அரசன் 

4 comments:

  1. நல்லதோர் நூல் அறிமுகத்திற்கு நன்றி அரசன்.

    ReplyDelete
  2. சிறுகதை விரும்பியான எனக்கு மிகவும் பிடிக்கும்
    (என்று நம்புகிறேன்)!

    ReplyDelete

இது... உங்க ஏரியா!