Wednesday, June 24, 2015

லாக்கப் - மு.சந்திரகுமார் ; விசாரணை - வெற்றிமாறன்

நீங்கள் நான் மற்றும் நம் நண்பர்கள் நால்வருமாக ஆந்திராவில் ஒரு பிளாட்பார்மில் வசிக்கிறோம். உங்களுக்கும் எனக்கும் சுத்தமாக தெலுங்கு தெரியாது. புரியும். மற்ற இருவரும் ஓரளவிற்கு தெலுங்கில் கெட்டி. பகல் முழுவதும் கிடைக்கின்ற வேலை. இரவில் அலுப்பு தீர கொஞ்சம் கட்டிங். ரொம்பவே போரடித்தால் சினிமா. இதில் நம் நண்பர் நெல்சன் மட்டும் தீவிர சினிமா பைத்தியம். தினம் ஒரு சினிமா பார்த்தே ஆக வேண்டும். அப்படியொரு இரவில் சினிமா பார்க்கச் சென்ற நெல்சன் திரும்பி வராமல்போக எதிர்பாராத விதமாக அடுத்தநாள் உங்களைத் தேடி போலீஸ் வருகிறது. தெரியாத ஊர். தெரியாத பாசை. தெரியாத நபர்கள். கைது செய்தே ஆகவேண்டும் என்ற முடிவில் வரும் போலீசார். எப்படிப் புரிய வைப்பீர்கள் நீங்கள் குற்றவாளி இல்லை என்று. 



ஒருநிமிஷம்! நீங்கள் குற்றவாளி இல்லையென நிருபிக்கும் முன் 'நீங்கள் செய்த குற்றம் என்ன எனத் தெரிந்து கொள்வது அவசியமில்லையா?' அந்த உரிமைகூட மறுக்கப்பட்டு இழுத்துச் செல்லப்படுகிறீர்கள். சிறிய பத்துக்குப் பத்து அறையில் அடைக்கப்டுகிறீர்கள். ஏற்கனவே அங்கே அனுபவஸ்தர்கள் ஐந்து பேர் இருக்கிறார்கள். இப்படித்தான் ஆரம்பமாகிறது லாக்கப் நாவல். 

குமார், ரவி, மொய்தீன், நெல்சன் - இவர்கள்தான் அந்த நால்வர்கள். இரவுக் காட்சி முடிந்து திரும்பிக்கொண்டிருந்த நெல்சனை சந்தேகத்தின் பேரில் விசாரிக்கும் ஆந்திரப் போலீஸிடம் மொழி புரியாமல் தடுமாறுகிறான் நெல்சன். மேலும் அவர்கள் எதையோ கேட்க இவன் வேறு எதையோ அரைகுறையாகப் புரிந்துகொண்டு மண்டையை ஆட்டுகிறான். நெல்சனிடம் இருந்து வரும் முன்னுக்குப் பின்னான பதில்களால் விசாரணைக்கு இழுத்துச் செல்கிறது போலீஸ். பயத்தில் தன் நண்பர்கள் என குமார் ரவி மொய்தீனை அடையாளம் காட்ட போலீஸ் அவர்களையும் விசாரணைக்கு இழுத்து வருகிறது. எலக்ட்ரிகல் கடை ஒன்றில் நடைபெற்ற திருட்டுக்கு இவர்களை பலியாடாக்குகிறது. செய்யாத குற்றத்தை எப்படி ஒப்புகொள்வது. இவர்கள் நால்வரும் மாறுகிறார்கள். குற்றத்தை ஒப்புக்கொள்ள வைப்பதற்கான விசாரணை தொடங்குகிறது. 

இங்கிருந்து நாவல் முழுவதுமே கொஞ்சம் அழுத்தமாக நகரக்கூடிய சம்பவங்களைக் கொண்டதாக உள்ளது. பத்துக்குப் பத்து அறையில் இவர்கள் படும் அவஸ்தைகள், ஒரேயொரு வேளை மட்டுமே கிடைக்கக்கூடிய கேவலமான உணவு, ஏற்கனவே அங்கு தங்கியிருக்கும் அனுபவஸ்தர்கள் பட்ட, பட்டுகொண்டிருக்கும் அவஸ்தை, அவர்கள் உதிர்க்கும் அனுபவ மொழிகள் என நாம் அறிந்திராத ஒரு இருட்டு உலகம் நம்முன் விரிகிறது. இவர்களுக்காக பேசி அழைத்துச் செல்லவும் யாருமற்ற நரகத்தில் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள் இந்த நால்வரும். தங்கள் நிலைமை இப்படி ஆனதற்காக நெல்சன் மெது கொலைவெறி கொள்கிறான் ரவி. வெளியில் வந்தால் கொல்லாமல் விடபோவதில்லை என சபதம் எடுக்கிறான். அதற்கு முதலில் வெளியில் செல்ல வேண்டுமே?

கையில் லத்தி இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக வருகிறவர்கள் போறவர்கள் எல்லாம் அடிக்கிறார்கள். நாளாக நாளாக சிதரவதையின் வீரியம் கூடுகிறது. குற்றத்தைக் ஒப்புக்கொள்ளும்படி தினமும் சித்தரவதை நடக்கிறது. கயிற்றில் கால்களைக் காட்டி சிலமணி நேரங்களுக்கு பாதத்தில் மட்டும் அடிக்கிறார்கள். அதன்மூலம் இவர்கள் அடையும் வலி, வேதனை, அவஸ்தை என இவை அனைத்தையும் நாம் உணரத் தொடங்கம்போது உடல் நடுங்குகிறது. கனவிலும் இப்படி ஒரு நிலை யாருக்கும் வரக்கூடாது என மனம் தன் போக்கில் பிராத்திக்கத் தொடங்குகிறது. 

முடிவே இல்லாமல் நகர்ந்து கொண்டிருக்கும் இந்தப் பிரச்சனைகு முடிவு காண்பதற்காக லாக்கபினுள் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பிக்கிறார்கள். உடன் இருக்கும் அனுபவஸ்தர்கள் வேண்டாமென எச்சரித்த போதும் குமாரின் உந்துதலில் நால்வரும் தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்க, இதில் கடுப்பான காவல் குமாரை மட்டும் அதே லாக்கப்பில் வைத்துவிட்டு மற்ற மூவரையும் வேறொரு காவல் நிலையத்திற்கு மாற்றுகிறது. மேலும் இதற்கெல்லாம் காரணியான குமாருக்குக் கொடுக்ககூடிய சித்ரவதைகளின் அளவு எல்லை மீறுகிறது. 

உடலின் ஒரே பகுதியில் தொடர்ந்து அடிவாங்கிக் கொண்டிருந்தால், ரத்தம் கட்டி, சீழ் பிடித்து, அப்பகுதி மட்டும் அழுகி கேட்டுப் போய்விடுமாம். இது போக உள்ளுக்குள் ஆங்காங்கு உடைந்து போகும் எலும்புகள் ஏற்படுத்தக்கூடிய வலி தனி. எவ்வளவு அடி வாங்கினாலும், ஏன் அடி வாங்கி செத்தே போனாலும் செய்யாத குற்றத்தை மட்டும் செய்தேன் என ஒத்துகொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் தீவிரமாக இருக்கிறான் குமார். இப்படியே சென்று கொண்டிருக்கும் இவர்களின் நிலை கடைசியில் என்னதான் ஆனது என்பதுதான் மீதி கதை. 

இதில் மற்றுமொரு முக்கியமான விஷயம், கதைசொல்லியான குமார்தான் நாவலாசிரியர் சந்திரகுமார் என நாவலின் கடைசியில் கொடுக்கப்பட்டிருக்கும் பின்குறிப்பு மூலம் தெரியவரும்போது மேலும் அதிர்ச்சியாக இருக்கிறது. மனிதாபினம் என்றால் கிலோ என்னவிலை எனக் கேட்கும் இந்த லாக்கப் பல அதிர்ச்சிகரமான உணமைகளை உரக்கப் பேசுகிறது. 


வெற்றிமாறன் விசாரணை என்னும் திரைப்படத்தை இயக்காமல் இருந்திருந்தால் இந்த நாவல் குறித்து நான் பேசியிருப்பேனா தெரியவில்லை. ஏன் அறிந்திருப்பேனா என்பது கூட சந்தேகமே. பாலுமகேந்திராவின் பட்டறையில் இருந்து வந்தவர்கள் யாருமே இலக்கியத்தில் சோடை போனதாகத் தெரியவில்லை. அதில் வெற்றிமாறனின் இலக்கிய ரசனை என்பது பிரமிக்கத்தக்கது. உலகபுகழ் பெற்ற நாவலான ஓநாயின் குலச்சின்னம் நாவலை தமிழ்மொழி பெயர்ப்பதர்காகவே அதிர்வு என்னும் பதிப்பகம் ஆரம்பித்தவர். தற்கால கலைச்சூழலில் 'மொக்கையா கதை எழுதி படம் எடுத்தாலும் எடுப்பனே தவிர, நல்லதொரு நாவலை, படைப்பை படம் ஆக்குவதற்கு இம்மியும் முனைய மாட்டேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வலம்வருகிறார்கள் திருவாளர் இயக்குனர்கள். இவர்களுக்கு மத்தியில் வெற்றிமாறனும், சமுத்திரக்கனியும் இலக்கிய நாவல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் பின்னணியில் கதைகளம் அமைத்துக் கொண்டிருப்பது வரவேற்கப்பட விஷயம்.    

2 comments:

  1. விமர்சனம் படிக்கும் போதே அவர்கள் எத்தனை கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று உணர முடிகிறது.

    நல்லதோர் புத்தக அறிமுகத்திற்கு நன்றி சீனு.

    ReplyDelete
  2. புத்தக அறிமுகத்திற்கு நன்றி,

    ReplyDelete

இது... உங்க ஏரியா!