Monday, December 22, 2014

எம்.ஜி.ஆர்.

‘வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி’ அப்படின்னு கவிஞர் பொன்னடியான் அவர்கள் ஒரு பாட்டுல எழுதியிருந்தாரு. புகழோடு வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கையைப் புத்தகமாகப் படிக்கையில் நிச்சயம் அதிலிருந்து நமக்கு கற்றுக் கொள்ள நிறையப் பாடங்கள் கிடைக்கும் என்பது நான் அனுபவத்தில் கண்ட விஷயம்.  அதிலும் ‘வாத்யார்’ என்றே அழைக்கப்பட்ட ஒருவரின் வாழ்க்கையில் பாடங்கள் இல்லாமல் போய்விடுமா என்ன...?

எம்ஜிஆரைப் பற்றி இதுவரை நிறையப் புத்தகங்கள் வந்திருக்கின்றன. அவரோடு பழகியவர்கள், மெய்க்காப்பாளர்கள், அவரை வைத்துப் படமெடுத்த தயாரிப்பாளர்கள், உடன் நடித்தவர்கள் என்று பலர் தங்கள் பார்வையில் எழுதிய புத்தகங்களை நான் படித்திருக்கிறேன். இந்த நூல் அனைத்தையும் தொகுத்தது போல, இதைப் படித்தால் வாத்யாரைப் பற்றித் தெரிந்து கொள்ள இன்னொரு புத்தகத்தைத் தேட வேண்டாம் என்பது போல முழுமையான வரலாறாக அமைந்திருக்கிறது.

சிறு வயதிலேயே நாடகங்களில் நடக்கத் தொடங்கி, தன் பத்தொன்பதாவது வயதில் ‘சதி லீலாவதி’ படத்தில் சினிமாவில் சிறு வேடமொன்றில் அறிமுகமான வாத்யார் கதாநாயகனாக முதல் படத்தில் நடித்தபோது அவருக்கு வயது முப்பது. அப்போது அவரைப் பற்றிக் கொண்ட வெற்றி தேவதையை கடைசிவரை அவர் தன்னை விட்டு விலக விடவில்லை. நூலாசிரியர் தீனதயாளனின் விவரிப்பில் வாத்யாரின் திரையுலக வாழ்க்கையும் அவர் சந்தித்த வெற்றிகளும், தோல்விகளும், சாதனைகளும் சோதனைகளும் நம் மனக்கண்ணில் படமாக விரிகின்றன. நல்லதொரு சினிமாப் புத்தகமாக அமைகிறது அதுவரையிலான பகுதி.

 தன் அரசியலை வலிமைப்படுத்தும் ஆயுதமாக சினிமாவை வைத்திருந்த வாத்யார் தமிழக முதல்வராகி அரசியல் வாழ்க்கையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட காலகட்டத்திலிருந்து நூல் சினிமாவைத் துறந்து அரசியல் நூலாகப் பரிணாமம் பெற்று விடுகிறது.  அவர் எதிர்கொண்ட தேர்தல்கள், ஆட்சி கலைப்பு, அரசியலில் அவர் எடுத்த முக்கிய முடிவுகள், சந்தித்த வழக்குகள் என தெளிவான வரலாற்றுப் பதிவாகத் தொடர்ந்து அவர் மறைவில் முடிகிறது புத்தகம்.

இந்தப் புத்தகத்தை இங்கே நான் குறிப்பிடுவதற்கு மற்றொரு முக்கிய காரணமும் உண்டு. சினிமாவிலும், அரசியலிலும் சில அதிரடி முடிவுகளை எடுக்க நேர்ந்த சமயத்தில் அவர் மனநிலை எப்படி இருந்திருக்கும்..? துப்பாக்கிக் குண்டுத் தாக்குதலுக்கு ஆளாகி மீண்டபின் இன்னொரு முறை அமெரிக்காவில் சிகிச்சை பெற்று மரணத்தை வென்று வந்த சமயம் அவரின் பேச்சுத் திறன் பாதிக்கப்பட்டிருந்தது. அந்தச் சமயத்தில் அவரைச் சுற்றியிருந்தவர்களின் நிறங்களை அறிந்திருப்பார். அப்போது அவர் எப்படி உணர்ந்திருப்பார்...? இப்படியெல்லாம் நான் நினைத்துப் பார்த்ததுண்டு. புத்தகத்தில் அவற்றுக்கும் விடை இருக்கிறது. வாத்யாரின் மன உணர்வுகளும் விவரிக்கப்பட்டிருக்கின்றன. (ஆதாரம் உண்டான்னு கேட்டா எனக்குத் தெரியாது... படிச்சப்ப சரியா இருக்கும்னுதான் தோணுச்சு). அந்த வகையில் குறிப்பிடத்தக்க ஒன்றாகிறது இந்தப் புத்தகம்.

வாத்யாரோட கேரியர்ல அவர் நடிச்சு வெற்றி பெற்ற படங்களை மாதிரி அவரால ஆரம்பிக்கப்பட்டு கைவிடப்பட்ட ப்ராஜக்ட்டுகள் பத்தி விரிவா யாராச்சும் எழுதினா அதுவே தனி புத்தகமாயிடும். அப்படி கைவிடப்பட்ட படங்களின் லிஸ்ட்டோட அவர் நடிச்ச அத்தனை படங்களின் லிஸ்ட்டும் பின்னிணைப்பா தரப்பட்டிருக்கறதும், புத்தகம் நெடுகிலும் ஆங்காங்கே இடம் பெற்றிருக்கும் சினிமா ஸ்டில்கள், வாத்யார் ஸ்டில்களும் ரசனையோ ரசனை. 

மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பா. தீனதயாளன். பால்ய காலம் தொட்டு தமிழ் சினிமாவையும் எம்.ஜி.ஆரையும் உன்னிப்பாகக் கவனித்து வருபவர். எம்.ஜி.ஆரின் படங்களை தியேட்டரின் ஒரு ரசிகராகப் பார்த்து மகிழ்ந்தவர்.  எம்.ஜி.ஆரின் எந்தப் படம், எந்தத் தியேட்டரில், எத்தனை நாள்கள் ஓடின என்பதை மனப்பாடமாக ஒப்பிக்கும் அளவுக்கு எம்.ஜி.ஆரை நேசிப்பவர். எம்.ஜி.ஆரின் படங்களைப் போலவே அவருடைய அரசியலையும் அவதானித்தவர். குறிப்பாக, அந்தக் காலத்துப் பத்திரிகைகளின் வெளியான அரசியல் தலைப்புச் செய்தி தொடங்கி சர்ச்சைக்குரிய கார்ட்டூன்கள் வரை அவரிடம் இருக்கும் நுணுக்கமான செய்திகள் அநேகம். அந்த வகையில், எம்.ஜி.ஆரின் திரை மற்றும் அரசியல் வாழ்க்கையைப் பதிவுசெய்ய பா. தீனதயாளனே பொருத்தமானவர் என்று முடிவுசெய்தோம். அவரிடமே ஒப்படைத்தோம்.  - இப்படிக் கூறுகிறது சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ள குறிப்பு. அந்த நம்பிக்கை மிகச் சரி என்பதை நிரூபித்திருக்கிறார் நூலாசிரியர் பா.தீனதயாளன்.

456 பக்கங்கள்ல 300 ரூபாய் விலையில இந்தப் புத்தகத்தை புதிய எண் : 10/2, போலீஸ் குவார்ட்டர்ஸ் சாலை, தி நகர், சென்னை - 600017 (போன் : +91 44 2434 2771)ல இருக்கற சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் வெளியிட்டிருக்கு. வாத்யாரை உங்களுக்குப் பிடிக்கும்னா உங்க கைல தவறாம இருக்க வேண்டிய புத்தகம் இது.

15 comments:

  1. வாத்தியாரே... கண்டிப்பாக வாங்கி விடுவேன்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நல்லதொரு ரசனை விருந்தாக அமையும் டி.டி. அவசியம் படிங்க. மிக்க நன்றி.

      Delete
  2. சார், உலக சினிமா திருவிழாவில் இந்த படத்தை பாரு, அந்த படத்தை பாருன்னு சிலர் பரிந்துரை செய்யறாங்களே அதுபோல புத்தக திருவிழாவில் எந்த புத்தகம் வாங்கலாம்னு ஒரு பரிந்துரை செய்யுங்களேன்.

    ReplyDelete
    Replies
    1. செய்துரலாம ஆவி. மிக்க நன்றி.

      Delete
  3. நீண்டநாட்களாக தலைவரைப்பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்றிருந்தேன் ! இப்புத்தகத்தின்மூலம் அது நடக்கும் என்பதை தங்களின் அறிமுக விமர்சனம் உணர்த்துகிறது ! பகிர்தலுக்கு நன்றி அண்ணா !

    ReplyDelete
    Replies
    1. மிக விரிவாகவே தெரிஞ்சுக்கலாம் மக்னேஷ். மிக்க நன்றி.

      Delete
  4. எப்படி இந்த சைட்டை நான் இதுவரை பார்க்கவில்லை! எம்.ஜீ. ஆர். பற்றிய புத்தக அறிமிகம் நன்று! என்னவோ தெரியவில்லை, அவரைப் பற்றி எல்லோரும் ஓஹோ என்றாலும், இன்னும் அவர் கடைத் தன்மை பற்றி பேசினாலும், அவ்வப்போது நான் படித்த அவரின் பழி வாங்கும் குணம், தான் நினைத்ததை மற்றவர் தலைமேல் கொண்டு அடி பணிந்து நடக்க வேண்டும் என்ற குணம் என்னில் அவரைப் பற்றி சாதாரண அபிப்பிராயம் தான் மிஞ்சுகிறது. சமீபத்திய வாரமலரிலும் ஒரு சம்பவம் திண்ணை பகுதியில் வந்திருக்கிறது. எம்.எஸ்.வி. சுய சரிதையிலும் ஒரு சம்பவம் வருகிறது. அந்தப் பக்கங்கள் இந்த நூலில் இருக்கின்றனவா? - ஜெ.

    ReplyDelete
    Replies
    1. குணம் நாடி குற்றமும் நாடி அவற்றில் மிகையைத் தானே கொள்ளச் சொன்னால் நம் தமிழாசான்..? வாத்யாரைப் பொறுத்தவரை நீங்க சொல்லும் குறை 5 சதவீதம்தான் ஜெ. மிச்ச 95ஐத்தான் நான் பாக்க விரும்பறேன். வெள்ளைப் பேப்பர்ல கறுப்புப் புள்ளியைப் பாக்காம, அதை மறந்துட்டு வெள்ளை ஏரியாக்களை மட்டுமே பாக்க விரும்பறதால எனக்கு அந்த உறுததல் இல்லை. புத்தகமும் அவ்விதமே. மிக்க நன்றி.

      Delete
  5. உங்களுக்கு மிக நல்ல, போற்றுதர்க்குரிய குணம். நான் கேட்டது, அந்த புத்தகத்தில் விருப்பு, வெறுப்பு இல்லாமல் எம்.ஜீ.ஆரின் வாழ்க்கை சொல்லப் பட்டிருக்கிறதா என்று தான். குற்றமும் நாடி அதை பெரிது படுத்தாமல் விடுவதும், குறைகளை முழுதும் மறைப்பதும் வேறு அல்லவா? -ஜெ.

    ReplyDelete
    Replies
    1. எம்.எஸ்.வி. என்ன சொன்னார் என்பதை நான் படிக்கவில்லை. ஆனால் சந்திரபாபு விஷயத்தில் வாத்யாரும் அவர் அண்ணனும் நடந்து கொண்ட முறை முதல் பல குறைபாடான விஷயங்களும் வெளிப்படையாகவே சொல்லப்பட்டிருக்கின்றன ஜெ. பாரபட்சம் நான் பார்த்தவரை இல்லை.

      Delete
    2. Thank you! Sorry, the Tamil font is missing! I read the review of this book in today's Dinamalar too and it says clearly that the author has touched all the qualities of MGR and has not brushed unpalatable (by MGR's staunch fans) events under the carpet. I didn't buy the book at the fair on the 16th thinking it may be only another book praising MGR and a repetition of what we have read so long in many publications. Now I feel like buying it, let me see!! Thanks for your respone. - R. J.

      Delete
  6. msv சுயசரிதை என்ன பெயர்?

    ReplyDelete
  7. வாத்தியாரைப்பத்தி
    எழுதப்பட்ட
    ஒரு
    புத்தகத்தை பற்றி
    வாத்தியாரின்
    அறிமுக உரை அருமை

    ReplyDelete
  8. வாத்யாரோட வாழ்க்கை பாடத்தையும் மாணவனாக படிக்க ஆசை ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete

இது... உங்க ஏரியா!