Wednesday, February 4, 2015

இரவு - ஜெயமோகன்

படைப்பாக்கம் : சீனு 

கடந்த சில வருடங்களாக தொடர்ந்து ஜெமோவை வாசித்து வந்தாலும் அவர் எழுதியதில் முழுமையாகப் படித்து முடித்த முதல் நாவல் - இரவு. ரப்பரும், அனல் காற்றும், உலோகமும் தொங்கிக் கொண்டிருகின்றன, சீக்கிரம் முடிக்க வேண்டும். 

அவருடைய இணைய எழுத்துக்கள் மற்றும் ஒருசில சிறுகதைகள் தவிர்த்து முழுமையாகப் படித்த சிலாகித்த சிறுகதைத் தொகுதி உண்டென்றால் அது அறம். அதில் இடம்பெற்ற யானை டாக்டர் கதையை நினைக்கும் போதெல்லாம் மீண்டும் ஒருமுறை வாசிக்கத் தோன்றுகிறது. 'ஒவ்வொரு யானைக்குள்ளும் ஒரு காடு உறங்குகிறது' என்று குறிப்பிடுவார் ஜெமோ. ஜெமொவுக்குள் ஒரு காடும் யானையும் உறங்காது இயங்கிக் கொண்டுள்ளன. இவ்விரண்டைப் பற்றி எழுதும் போதெல்லாம் அவருக்குள் அவர் இரண்டு மடங்கு வீரியம் மிக்கவராகி விடுகிறாரோ என்று தோன்றும். இப்போது கூடவே இரவையும் சேர்த்துக் கொள்ளலாம். 

காடும் யானையும் இயல்பிலேயே கரிய நிறம். கருமை இரவை ஒத்தது. இரவு தேவையான அளவு ஒளியை மட்டுமே அனுமதிப்பது. அந்த தேவையான ஒளி ஒன்றன் மீது படும்போது அது அப்பொருளை மேலும் அழகாக்கிறது. உதாரணத்திற்கு இரவில் எரியும் தீபத்தையும் அந்த தீபத்தை தாங்கி நிற்கும் விளக்கையும் குறிப்பிடுகிறார் ஜெமோ. 

கதையின் நாயகன் சரவணன் பணி நிமித்தமாக கொச்சியின் அருகில் இருக்கும் காயல் சூழ்ந்த ஒரு சிறிய கிராமத்திற்கு வருகிறான். அங்கு இரவுகளில் மட்டுமே விழித்திருந்து பகல் முழுவதும் தூங்கிக் கழிக்கும் ஒரு இரவுச் சமூகத்தை சந்திக்க நேர்கிறது. ஒருகட்டத்தில் அவனும் அவர்களுடன் ஒருவராக தன்னை இணைத்துக் கொள்கிறான். மெல்ல அவனுக்குள் இருக்கும் பகல் வாழ்க்கை அழிகிறது. அந்த இரவு வாழ்க்கை என்ன மாதிரியான மாற்றங்களை உண்டாக்குகிறது, எந்தவிதமான உளச்சிக்கல்களுக்கு ஆட்படுத்துகிறது, அதில் இருந்து அவனால் வெளிவர முடிந்ததா என்பதே இரவு நாவலின் மையச்சரடு.

சரவணன் தங்கி இருக்கும் வீட்டின் அருகில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மேனனும் அவருடைய மனைவி கமலாவும் வாழ்கிறார்கள். பரம்பிக்குளம் காட்டில் ஓரிரவு தங்கியிருக்கும் மேனனுக்கு ஒரு வித்தியாசமான தரிசனம் கிடைக்கிறது, அதிலிருந்து இரவு வாழ்க்கை வாழத் தொடங்குகிறார். தான் இவ்விதம் இரவில் வாழ்வதாகவும் தன்னுடன் யாரேனும் இணைந்து கொள்வதாய் இருந்தால் தொடர்பு கொள்ளவும் என்று அளிக்கும் விளம்பரம் மூலம் தன்னைச் சுற்றி ஒரு இரவு சமூகத்தை உருவாக்குகிறார். இந்த இரவு சமூகத்தில் வாழ்பவர்கள் ஒவ்வொருவருமே பகல்ப் பொழுதில் தங்களுக்கு நடைபெற்ற ஏதோ ஒரு அசந்தர்ப்பமான சூழலால் உளச்சிக்கல்களுக்கு ஆளானவர்கள். பகலை வெறுப்பவர்கள். அதிலிருந்து தங்களை மீட்டெடுக்க இரவு வாழ்க்கைக்கு பழக்கி இருப்பவர்கள்.

நாயரும், நாயரின் மகள் நீலிமா(கதாநாயகி)வும் இந்த சமூகத்தில் ஓர் அங்கத்தினர். நீலிமா ஒரு கொடிய விபத்தால் தன் கண்ணெதிரே தான் மணக்க இருக்கும் கணவனை இழந்தவள். அதனால் கடுமையான மனபாதிப்புக்கு ஆளானவள். சரவணனுக்கும் நீலிமாவிற்கும் கண்டதும் காதல் ஏற்படுகிறது. இதனை மேனன் புரிந்து கொள்கிறார். ஏற்கனவே தீரா மனவியாதியில் இருக்கும் நீலிமாவிற்கு சரவணனின் அருகாமை மற்றும் துணை நிச்சயம் நல்லது பயக்கும் என்ற எண்ணத்தில் இருவரையும் காதலிக்கும்படி தூண்டுகிறார். 

இந்த சமயத்தில் கேரளத்தின் மற்றொரு பகுதியில், பிரஸண்டானந்தா என்னும் சுவாமிஜி நடத்தி வரும் இரவு நேர ஆஸ்ரமதிற்கு மேனனுடன் சரவணன் செல்ல நேர்கிறது. அங்கே பல வெளிநாட்டினரும் தங்கி இரவு சமூகத்தில் வாழ்க்கை நடத்துவது சரவணனுக்கு வியப்பளிக்கிறது. 

இந்த நேரத்தில் ஆஸ்ரமத்தில் சந்திக்கும் சுவாமி பிரஸண்டானந்தாவின் உதவியாளர் 'இந்த இரவுச் சமூகம் உனக்கு சரிபட்டு வராது, எப்படியேனும் தப்பி ஓடிப் போய்க்கோ' என்று மிரட்டுகிறார். இதுவரைக்கும் எல்லாமே நல்ல விதமாய் போய்க் கொண்டிருப்பதாய் தோன்றிய சரவணன் மனதில் முதல்முறை அச்சம் ஏற்படுகிறது. மெல்ல தன்னால் இரவு சமூகத்தில் இருந்து வெளிவர முடிகிறதா என்று பார்க்கிறான். பகல் அவனுக்கு இப்போது அருவருப்பாய் இருக்கிறது. எதிலுமே அழகு இன்றி கவித்துவமின்றி அத்தனையும் வெளிப்படையாய் இருப்பது போல் தோன்றுகிறது. போதாகுறைக்கு அவனால் வெளிச்சத்தையே பார்க்க முடிவதில்லை. இது எல்லாவற்றிற்கும் மேலாக நீலிமா இல்லாமல் அவனது நாட்கள் நரகம் போல் நகர்கிறது. வேறுவழியே இல்லாமல் மீண்டும் இரவு சமூகத்தின் அண்மையை நாடுகிறான். இடையில் இரண்டு கொலைகள் நடக்கின்றன. இதன் பின் நடந்தது என்ன என்பது தான் மீதிக் கதை. 

மேலும் இந்நாவலின் மூலம் சாக்தம் என்னும் மதம் சார்ந்த கருத்துக்களை தீவிரமாக பேசுகிறார். சைவம் வைணவதிற்குப் பின் மிகபெரிய மதமாக விளங்கிய சாக்தம் யட்சிகளின் மதம். இரவு நாவலில் வரும் ஒவ்வொரு பெண்களுமே யட்சிகள். பகல்ப்பொழுதில் பெண்களாக உலவுபவர்கள் இரவில் முழு யட்சிகளாக மாறிவிடுகிறார்கள். ஒவ்வொரு பெண் யட்சியும் பலமடங்கு சக்தி நிறைந்தவள். அந்த யட்சிகள் எவ்வளவு மனவலிமை வாய்ந்தவர்கள் என்பது பற்றியும் கேரளம் எவ்வாறு யட்சிகளின் தேசமாக நம்பபடுகிறது என்பது குறித்தும் கூறுகிறார்.

ஜெயமோகனின் கதை சொல்லல் என்பது மிகவும் நிதானமானது. ஒவ்வொன்றையும் நிறுத்தி நிதானமாக, ஒவ்வொன்றின் தர்க்கங்களையும் வாதிட்டபடி நகரக்கூடியது. மனிதர்களின் உணர்வு சார்ந்த விசயங்களையும், அவர்களைக் சுற்றி நிகழும் காட்சிகளையும் விவரித்தபடியே செல்பவர். அதனால் இவருடைய கதைகளில் வேகமான வாசிப்பு என்பது கொஞ்சம் கடினமே. இன்னும் கொஞ்சம் எளிமையாக சொல்வதென்றால்.ஒரு நீண்ட மலைப்பாதையின் மெதுவாக நகரும் ரயில் வண்டியைப் போன்றது ஜெமோவின் எழுத்து. அந்த ரயில்வண்டி மெதுவாக நகர நகரத்தான் நம்மால் காட்சிகளை இன்னும் தெளிவாக உள்வாங்கிக் கொள்ள முடியும். நகரங்களுக்கு இடையே பயணிக்கும் மின்தொடர் வண்டிக்கும் மலைப்பாதை வண்டிக்கும் இடையேயான வித்தியாசங்கள் நிறைந்தது ஜெமோவின் எழுத்துக்கள் என்பது என் எண்ணம். 

இரவு நாவல் ஆங்காங்கு கொஞ்சம் தொய்வாக நகர்ந்தாலும், சில இடங்களில் மனிதர்களின் உளவியல் சார்ந்த விசயங்களை அதிகம் பேசினாலும், மலையாள வாடை கொஞ்சம் தூக்கலாக இருந்தாலும் ஒரு வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்தது என்பது நிஜம். இரவை, இரவின் தனிமையை ரசிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்நாவல் இரவின் மீதான காதலை அதிகமாக்கும் என்பது நிச்சயம் உண்மை. 

நாவல்       : இரவு
ஆசிரியர்   : ஜெயமோகன்
பதிப்பகம்  : தமிழினி
விலை       : 160
குறிப்பு       : ஜெமோவின் தளத்திலும் இலவசமாகக் கிடைக்கிறது

4 comments:

  1. ஜெமோ நாவல்கள் இதுவரை படித்ததில்லை சீனு. படிக்கத் தூண்டுகிறது உங்கள் விமர்சனம்.

    ReplyDelete
  2. ஜெமோ மாதிரியே இருக்கிறது தோழர் உங்களின் இந்த எழுத்து நடை.

    ReplyDelete
  3. விமரிசனம் அருமையாக இருக்கிறது. ஜெமோ படித்து வெகு காலம் ஆகி விட்டது. பேய் என்பதால் படிக்கும் ஆசை வருது. பார்ப்போம். :)

    ReplyDelete
  4. ஜெயமோகன் நாவல் படித்திருக்கிறேன் ... உங்கள் விமர்சனம் அருமை... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete

இது... உங்க ஏரியா!