Sunday, April 20, 2014

வசந்த்! வசந்த்! - பழைய பஞ்சாங்கம்..!

                 
                    பெயரின் வசீகரத்தில் கணேஷ் வசந்த் கலக்கி இருப்பார்கள் என்ற எண்ணத்தில் புத்தகத் திருவிழாவில் வாங்கிய நாவல் இது. சுஜாதா 1983 ல் எழுதியது. செல்போன்கள், இன்டர்நெட் இல்லாத காலத்தில் துப்பறிந்ததை இன்று படிக்கும் பொழுது கொஞ்சம் பழைய பஞ்சாங்கமாக தெரிந்தது. இருந்தும் கதையின் விறுவிறுப்பு நம்மை இதைப் பற்றியெல்லாம் யோசிக்க விடாமல் நகரச் செய்கிறது.                      

 உக்கல் என்ற கிராமத்தில் உள்ள "இராஜராஜன்" கிணற்றை பற்றி ஒரு விரிவுரையாளர் எழுதப் போக, அந்த ஆராய்ச்சிக் கட்டுரையை திருடிப் போக ஒரு கும்பல் வருவதில் இருந்து ஆரம்பிக்கிறது கதை. அந்த விரிவுரையாளரின் மகள் இனியாவை காதலிக்கும் வசந்த். வசந்தின் சேட்டை, கணேஷின் பொறுமை. உக்கல் கிராமம் சென்று இதைப் பற்றி விசாரிக்க செல்லும் இருவருக்கும் வரும் கொலை மிரட்டல்கள், அங்கே நடக்கும் கொலைகள் என ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றிச் செல்கிறது கதை.

                           சுஜாதாவின் தீவிர வாசகனான எனக்கு இந்தக் கதை எதோ அவசர கதியில் எழுதியது போன்று இருந்தது. கிணறு, ஆராய்ச்சி, துரத்தும் கும்பல் என்றதுமே நம்மால் கதையை ஆரம்பத்திலேயே  ஊகித்து விட முடிகிறது. தவிர சில இடங்களில் சினிமா திரைக்கதை போல் வடிவெடுக்கும்போது கொஞ்சம்  சலிப்பு தட்டுகிறது. ஒரு கட்டத்தில் கணேஷை சில தடியர்கள் சுற்றி வளைத்து விட்ட நிலையில் அங்கிருந்து தப்பிப்பது அக்மார்க் சினிமாத்தனமான விவரிப்பு. இந்த ஒரு நெருடலைத் தவிர நமக்கு வழக்கமான சுஜாதா ஸ்டைல் எழுத்துகள் அப்படியே இருக்கின்றன.

                             இனியாவிடம் வசந்த் செய்யும் காதல் லீலைகள், குறும்புத்தனங்கள் ரசிக்க வைக்கிறது. கணேஷ் தனியாக இனியாவை சந்திக்க செல்லும்போது வசந்த் இருந்திருந்தால் அவளை எப்படியெல்லாம் வர்ணித்திருப்பான் என்று கணேஷ் கற்பனை செய்து பார்ப்பது போன்றவை கொஞ்சம் அபத்தமாக இருக்கிறது. கேஸை வெற்றிகரமாக முடித்தபின் இனியாவை வசந்திற்கு திருமணம் செய்துவைக்க கணேஷ் முயற்சி செய்யாதது ஏன் என்பது சுஜாதாவிற்கே வெளிச்சம். (ஒரு வேளை ஜேம்ஸ் பாண்ட் போல் காதல் ரசம் சொட்ட மட்டுமே வசந்த் எனும் கதாப்பாத்திரத்தை படைத்திருப்பாரோ? )

                             மொத்தத்தில் வசந்த் வசந்த் ஒரு ஜாலியான துப்பறியும் கதை. சுஜாதாவின் சிறந்த நாவல்களுள் ஒன்றாக இதைக் கூற முடியாவிட்டாலும் சுஜாதா ரசிகர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம் தரும் வகையில் இல்லை.  உயிர்மை பதிப்பகத்தில் நான் வாங்கிய புதிய பதிப்பின் விலை ரூ.140. ஆனால் அதே புத்தகம் வேறொரு பதிப்பகத்தில் இருபத்தி ஏழு ரூபாய்..

     

நூலின் பெயர்   :    வசந்த்! வசந்த்!
ஆசிரியர்           :    சுஜாதா 
பக்கங்கள்          :    176
 விலை              :    ரூ.140
வெளியிட்டோர் :   உயிர்மை பதிப்பகம்  
                              11/29, சுப்பிரமணியம் தெரு,
                              அபிராமபுரம் 
                               சென்னை  - 600 018



32 comments:

  1. 140 ரூபாய் - 27 ரூபாய்... ம்ம்ம்ம்ம்...

    மறுபடி எடுத்துப் படிக்க வேண்டும். கணேஷ் வசந்த் கதைகளைப் படித்து நாட்களாகி விட்டன!

    ReplyDelete
    Replies
    1. ஆமா சார் நான் புத்தக திருவிழாவின் போது உயிர்மையில் இதை வாங்கிய பின் அந்த ஸ்டாலுக்கு சென்று பார்த்தவனுக்கு பேரதிர்ச்சி.. புத்தகத்தின் க்வாலிட்டி கூடியிருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் நமக்கு தேவை உள்ளிருக்கும் கதை மட்டும் தானே?

      Delete
  2. குமரிப் பதிப்பகம் வெளியிட்டதற்கும் உயிர்மை வெளியிட்டதற்கும் இடையில் ஆண்டுக்ள் நிறைய ஓடிவிட்டன ஆவி... ஆனாலும் 170 பக்கத்திற்கு 140 ரூபாய் என்பது சற்றே அதிக விலைதான்.

    வசந்த் கல்யாணம் பண்ணினான். குழந்தை பெற்றான் என்றெல்லாம் எழுதினால் அந்த கேரக்டரின் ஈர்ப்பும் சிரஞ்சீவித் தன்மையும் அடிபட்டு விடுகிறது. ஜேம்ஸ்பாண்ட் எப்பவும் ஒரே மாதிரி இருக்கற மாதிரிதான் அது. எதுஎப்படி இருந்தாலும் படிக்க விறுவிறுப்பான த்ரில்லர் என்பதில் நோ டவுட்.

    ReplyDelete
    Replies
    1. //ஆண்டுக்ள் நிறைய ஓடிவிட்டன //
      ஆமா சார், புத்தகத்தின் தரம் கூட உயர்ந்திருக்கிறது.ஆனாலும் நூற்றி நாற்பது என்பது சுஜாதா எனும் பிராண்டிற்கு அவர்கள் வைக்கும் விலை.. இப்படியே போனால் புத்தகங்களை வாங்கிப் படிக்கும் எண்ணம் மக்களிடையே குறைந்துவிடும்.

      Delete
    2. // சிரஞ்சீவித் தன்மையும் அடிபட்டு விடுகிறது. //

      ஹஹஹா, எனக்கும் இதுதான் பிடிச்சிருக்கு.. இருந்தாலும் ஒரு விவேக்-ரூபலா, பரத்-சுசீலா வை எல்லாம் பார்க்கும் போது வசந்த் மேல் பரிதாபப் பட தோன்றுகிறது.. :)

      ஆமா நீங்க நடிகர் சிரஞ்சீவிய சொல்லலியே? ;-)

      Delete
  3. நேத்துத் தான் ஒரு சுஜாதா நாவல் படிச்சேன். அதுவும் அந்தக் காலத்துக் கதை தான். :))) படிச்சதை எல்லாம் வைச்சு யோசிச்சுப்பார்க்கையில் அநேகமாய் எல்லாமும் ஒரே ரகமாய்த் தோன்றுகிறதோ????? :)))))))))))

    ஹிஹிஹி, சுஜாதா ரசிகர்கள் மன்னிக்கவும்!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹஹா, கீதா மேடம் எனக்கு அப்படி தோணலை.. சுஜாதாவுடைய கதைகள் மட்டும் தான் ஒவ்வொரு கதைகளும் முழுக்க முழுக்க மற்ற கதையிலிருந்து வேறுபட்டு இருப்பதை உணர்ந்திருக்கிறேன்..

      பை தி வே நானும் சுஜாதா ரசிகன்தான்..;-)

      Delete
  4. வாசந்தியின் நாவல் நழுவும் நேரங்கள், மாயாவி அவர்களின் பனி நிலவு, ரேகா சந்திரநாத் எழுதிய சுவரில் இரு விழிகள், நேத்திக்கு சுஜாதாவின் நாவல் , அனிதா இளம் மனைவிஆகியவை கடந்த இரு நாட்களில் படிச்ச புத்தகங்கள்.

    ReplyDelete
    Replies
    1. கீதா மேடம்... அனிதா இளம் மனைவி கதை ஜெய்சங்கர்-ஸ்ரீதேவி நடிப்பில் 'இது எப்படி இருக்கு' என்ற பெயரில் திரைப்படமாக வந்தது. 'எங்கும் நிறைந்த' என்ற யேசுதாஸ் பாடிய இனிமையான பாடல் இளையராஜா இசையில் அந்தப் படத்தில் இருக்கு. (சும்மா தகவலுக்கு!)

      Delete
    2. புதிய தகவல் ஸ்ரீராம் சார்.. நான் பார்க்க முயற்சிக்கிறேன்..

      Delete
    3. கீதா மேடம், சுஜாதாவுடையது தவிர நீங்கள் சொல்லும் மற்ற கதைகள் படித்ததில்லை.. நீங்க இரண்டு நாட்களில் படிச்சதில் "புடிச்சத" நம்ம வாசகர் கூடத்தில் பகிரலாமே!

      Delete
    4. பகிரலாம் கோவை ஆவி. ஆவியா வந்து பயமுறுத்தினாலும் அசர மாட்டோமுல்ல! எழுதினதை யாருக்கு அனுப்பறது???

      Delete
    5. ஆமாம், ஶ்ரீராம், இந்தப் புத்தகத்தின் முன்னுரையில் சுஜாதாவே சொல்லி இருக்கிறார். அப்படி ஒரு படம் வந்ததே அதைப் படிச்சதும் தான் தெரிஞ்சது! :)

      Delete
    6. கீதா மேடம், vasagarkoodam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்க..

      Delete
    7. //ஆவியா வந்து பயமுறுத்தினாலும் அசர மாட்டோமுல்ல// பேய் தான் மேடம் பயமுறுத்தும்.. ஆவி எல்லோருக்கும் ப்ரெண்ட்லி.. பயமுறுத்தாது.. ;-)

      Delete
    8. அந்தப் படத்தைப் பார்க்க நிறைய பொறுமை வேண்டும் ஆவி. ரஜினி, அசோகன், ஸ்ரீதேவி நடித்த 'காயத்ரி' கூட சுஜாதா கதைதான். அப்புறம் ஜன்னல் மலர் கதை 'யாருக்கு யார் காவல்' என்று படமாகியது. படங்கள் பார்க்க வேண்டும் என்று அவசி........ய...மே இல்லை! :)))))

      Delete
    9. இது எப்படி இருக்கு, காயத்ரி, கரையெல்லாம் செண்பகப்பூ---ல்லாம் கூடப் பரவாயில்லை ஸ்ரீ... சுஜாதாவின் காகிதச் சங்கிலிகள் சினிமாவாகிப் பட்ட பாடு இருக்கே...அந்தப் படத்தை அதோட டைரக்டரே திரும்பப் பார்த்திருக்க மாட்டார்...

      Delete
  5. வசந்த் வசந்த் - என்னைக் கேட்டால் எல்லாருக்கும் பரிந்துரை செய்வேன்... அதுவரை நான் படித்த முந்தைய கணேஷ் - வசந்த் புத்தகங்களில் இருந்து சற்றே மாறுபட்ட கதைசொல்லும் வடிவம் பெற்ற கதை.

    மேலும் ஐந்திலிருந்து பத்தாவதாக படித்த கணேஷ் வசந்த் கதை. இந்தப் புத்தகம் பிடித்துப் போக இதையும் ஒரு காரணமாக சொல்லலாம், ( கிட்டத்தட்ட ஒரு ரஜினி ரசிக மனப்பான்மை என்று வைத்துக் கொள்ளுங்களேன்) அன்று பார்த்த வீரதீர ரஜினி சாகசங்கள் இன்றைக்கு இந்த மொக்கையவா அன்னிக்கு அப்டி ரசிச்சோம் என்று எண்ணத் தோன்றுமே கணேஷ் வசந்தை இப்போது படித்தால் அப்படித்தான் தோன்றும்.. காரணம் நாம் வளர்ந்து விட்டோம் நம் தேடல் தளம் விரிந்துவிட்டது.. எனக்கு ஏதாவது ஒரு மொக்கை புத்தகம் படித்தது போல் தோன்றினால் உடனடியாக நான் கையிலெடுப்பது ஏதேனும் ஒரு கணேஷ் - வசந்தை தான்... kind of stress reliever...

    கணேஷ் - வசந்த் கதைகளுக்கு என்று ஒரு டெம்ப்ளேட் வைத்திருப்பார் அதில் இக்கதை இம்மி பிசகாமல் வளர்ந்திருக்கும்... லாஜிக் மிஸ்டேக் என்றால் இவருடைய சில கணேஷ் - வசந்த் கதைகளில் இருக்கும்... எனக்கு அது பிரச்சனையோ குறையோ இல்லை :-) காரணம் எழுதியது சுஜாதா :-)

    ReplyDelete
    Replies
    1. //இன்றைக்கு இந்த மொக்கையவா அன்னிக்கு அப்டி ரசிச்சோம் என்று எண்ணத் தோன்றுமே//

      என் மனசுக்குள்ள இருந்த அதே பீலிங்ஸ்..

      Delete
    2. // ஒரு மொக்கை புத்தகம் படித்தது போல் தோன்றினால் உடனடியாக நான் கையிலெடுப்பது ஏதேனும் ஒரு கணேஷ் - வசந்தை தான்//

      அப்ப ரா.கா.சாலைக்கு அப்புறம் என்ன படிச்சீங்க ;-)

      Delete
  6. உயிர்மை பதிப்பக வெளியீடுகள் எல்லாமே விலை கொஞ்சம் கூடுதல்தான் போல! நல்ல புத்தக விமர்சனம்! படிக்க முயற்சிப்போம்!

    ReplyDelete
  7. கீதா மேம்... சுவரில் இரு விழிக்ள் நான் படிக்க நினைச்சு கிடைக்காம போன புத்தகம். நெக்ஸ்ட் மன்த் திருச்சி வரும்போது நிச்சயம் உங்க வீடு முற்றுகையிடப்படும். ஹி... ஹி... ஹி...

    ReplyDelete
    Replies
    1. வாங்க, வாங்க, கணேஷ், நல்வரவு. ஆனால் இது புத்தகமா வந்திருக்கா என்பது தெரியாது. சென்ற வாரம் சென்னை வந்தப்போ சென்னையில் தம்பியிடமிருந்து எடுத்து வந்த பழைய கல்கி பைன்டிங்கில் இதுவும் இன்னும் சில நாவல்களும், சோவின் ஒரு நாடகமும் பைன்டிங் செய்யப்பட்டிருக்கிறது. :))))

      Delete
    2. சாண்டில்யன், சுஜாதாவெல்லாம் இணையத்தில் தரவிறக்கிப் படிப்பது தான்.

      Delete
  8. வசந்தும் கணேஷும் சுஜாதாவின் பேவரிட் ஆச்சே, எடக்கரடக்கலாக சுஜாதா வர்ணிக்கும் அழகே அழகு !

    ReplyDelete
  9. வந்த புதிதில் படித்தது.... மீண்டும் படிக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. அப்போது ரசித்ததெல்லாம் இப்போது படிக்கும்போது கொஞ்சம் சுவாரஸ்யம் குறைந்து தான் விட்டது. இருந்தாலும் சுஜாதா எனும் மந்திரச் சொல் மீண்டும் படிக்கத் தூண்டும்.

    விலை - ரொம்பவே அதிகம் தான். அந்த விலை புத்தகத்திற்கோ, அல்லது கதைக்கோ அல்ல... சுஜாதா விற்கு மட்டுமே!

    ReplyDelete
  10. கோவை ஆவி, வாசந்தியின் "நழுவும் நேரங்கள்" கதைக்கான விமரிசனம் அனுப்பி மூணு நாள் ஆச்சு. பதிலே இல்லையே? :)

    ReplyDelete
    Replies
    1. ஆவிக்கு உள்நாட்டில பறந்துட்டிருந்த இடங்கள் பிடிக்காததால வெளிநாட்டுல உலாவுறதுக்கு இடம் தேடிப் போயிருச்சு. அதாலதான் டிலே.. லேடி எழுதின மேட்டரை இன்னொரு லேடி அறிமுகம் பண்ணிருக்கறதாலயும் டிலே.. ஹி... ஹி... ஹி... வர்ற திங்கள் கிழமை உங்கள் படைப்பு இங்கே ஜொலிக்கும் மேம்...

      Delete
    2. சாரி கீதா மேடம், வாசகர்கூடத்தில் வழக்கமா திங்கள் அல்லது வியாழன் தான் விமர்சனம் வெளியிட்டு வர்றோம்.. இடையில் தேர்தல் வந்துட்டதால (அப்பாடா, சமாளிச்சாச்சு) திங்கள் போடறதா இருக்கோம்.. கம்யுனிகேஷன் கேப்புக்கு மன்னிக்கவும்..

      Delete
    3. பாலகணேஷ் ஸார், எல்லோரும் போன் பண்ணி வெளிநாடு கிளம்பியாச்சான்னு கேக்குறாங்க... ஹஹஹா..

      Delete
    4. நன்றி பால கணேஷ், உங்கள் நடைமுறை தெரியாத காரணத்தால் கேட்டேன். இனி வரும்நாட்களில் நினைவு கொள்வேன்.

      ஆவி இன்னிக்கு இட்லியில் இருந்து கூட வந்ததே! அது இல்லையா அப்போ??????? டவுட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு!!!!!!

      Delete
  11. திரைப்படத்திற்காக எழுதப்பட்ட கதை அங்கே போனியாகாததால் நாவலாக களம் இறக்கிவிட்டாரோ என்னமோ ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete

இது... உங்க ஏரியா!