Thursday, May 5, 2016

முனியாண்டி விலாஸ் - யுகபாரதி


கவிதை என்ற சொல்லின் மீதிருந்த மரியாதையை, சம காலத்திய இளம்படைப்பாளிகள் கொத்துக்கறி போட்டு வைத்திருப்பதினால், கவிதை நூல்கள் வாங்குவதையும், கவிதைகள் வாசிப்பதையும் கூட வெகுவாய் குறைத்து விட்டேன், காரணம் சொல்ல நிறைய இருந்தாலும், பொதுவாக சொல்ல வேண்டுமெனில் சமூக வலைத்தளப் பெருக்கத்தினால் எல்லோரும் கவிதை எழுத கிளம்பியது தான். ஆரம்ப கால எழுத்துக்கள் சல்லையாக இருந்தாலும் போக போக தங்களது தவறுகளைத் திருத்திக் கொண்டு எழுதப் பழகாமல், மொன்னையிலும் மொன்னையாக தொடர்ந்து எழுதி, காசு வாங்கிக்கொண்டு அதையும் புத்தகமாக்கி தரும் சில அயோக்கிய பதிப்பகங்களும் செவ்வனே செய்து கொண்டிருப்பமையால் கவிதை என்றாலே கண்டுக்காத மாதிரி கழண்டு விடுவேன். இப்படியான குப்பைகளுக்கு மத்தியில் யுகபாரதியின் 'முனியாண்டி விலாஸ்' எனும் தரமான கவிதை நூல் வந்திருக்கிறது.



ஒரு கவிதை, வாசிப்பவனை முழுமையாக ஆக்கிரமிக்க வேண்டும், அவன் எண்ண ஓட்டங்களை செழுமை படுத்தி, சிந்தனைகளை சீர் செய்யத் தூண்ட வேண்டும், அப்படியான கவிதைகள் தான் காலம் கடந்தும் பெயர் சொல்லும். அப்படியான கவிதைகள் நிறைந்த புத்தகம் தான் இந்த 'முனியாண்டி விலாஸ்'. தனது கோபங்களை, சமூகம் பற்றிய பார்வைகளை, அரசியல் கோமாளித்தனங்களை, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை, மக்களின் அறியாமைகளை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் யுகபாரதி.

இதுவரை தனது மென்மையான வரிகளினால் தமிழ் பாடல்களுக்கு பெருமை சேர்த்த யுகபாரதியின் கவிதைகள் கடுமையான காரமாக இருக்கிறது, அது தேவையாவும் இருக்கிறது என்பது காலத்தின் கட்டாயம்!

'மினி ஸ்கர்ட் நடிகை' எனும் கவிதையில் அவளின் அழகினை வர்ணித்து விட்டு இறுதியாக
"வேண்டுமானால் பாருங்கள்,
நாளை அவளுக்காக நீங்கள்
ஓட்டுப் போடுவீர்கள்" என தமிழக நிலைமையைக் கூறி செவிட்டில் அறைந்துச் செல்கிறார் கவிஞர்.

"வேலைக்குக் கிளம்பும்போது
அழுவதைத் தவிர்க்க வேண்டும்
வெறுங்கையோடு திரும்பி வந்தால்
வெகுளியாய்ச் சிரிக்க வேண்டும்." என 'மனைவியிடம் சொன்னவை' என்ற கவிதையில் யாதார்த்த வறுமையை மிக அழகாக பதிவு செய்திருக்கிறார்.

"நம்முடைய தலைவருக்கு இது போதாத காலம்" என்ற கவிதையில் கருணாநிதியை கிழி கிழியென்று கிழித்து தொங்கப்  போட்டிருக்கிறார். இக்கவிதையின் ஒவ்வொரு வரிகளும் கருணாநிதியின் மனசாட்சி போல் பேசி மிரள வைக்கிறது. இன்ன பிற கவிதைகளில் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியையும் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.

"வேதாளத் தேவதை" எனும் கவிதையில் ஜெயலலிதாவின் சுய ரூபத்தை சமரசமில்லாமல் காட்சிப் படுத்தியிருக்கிறார். அவரின் முரட்டுக் குணத்தை செவ்வனே பதிவு செய்திருக்கிறார்.

தனது பாடல்களில் மெல்லினத்தைக் கையாளும் யுகபாரதி, கவிதைகளில் வல்லினத்தைக் கையாண்டிருக்கிறார். சாதாரணக் குடிகளின் வாழ்வியல் அவலங்களை உலகுக்கு உரக்க சொல்லும் கவிதைகளால் நூலை கட்டமைத்திருக்கிறார்.

'முனியாண்டி விலாஸ்' எனும் கவிதைக்காகவே இந்நூலை காசு கொடுத்து வாங்கலாம், அவ்வளவு நெகிழ்வான கவிதை.
"முனியாண்டிகளாய்த் தங்களை 
உணராதவர்கள் அக்கடைக்கு வருவதில்லை
முனியாண்டிகளை உணராதவர்களும்" 
இப்படி முடித்திருக்கும் இக்கவிதை பேசும் உண்மை வலியது. நாகரீக பெருக்கத்தினால் தனது அடையாளத்தை இழந்து வரும் நமது சமூகத்தை என்ன சொல்லி திருத்துவது, எல்லாத்தையும் இழந்த பின்பு சிறிய அனுதாபத்தில் கடந்து போகும் தலைமுறையிடம் என்ன சொல்லி கெஞ்சினாலும் செவியிலேறப் போவதில்லை.

இம்மாதிரியான கவிஞர்களின் பங்களிப்பு இன்றைய சூழலில் அவசியம் தேவை, இருந்தும் மக்கள் ஐநூறுக்கும், ஆயிரத்துக்கும் சோரம் போகையில் விழலுக்கு இறைத்த நீராக போகையில் மனம் கவலை கொள்கிறது. மக்கள் சுயத்தை புரிந்து தவறை கலையட்டும், அதற்கு இக்கவிதைகள் சிறு தூண்டுகோலாக அமையட்டும்... வாழ்த்துகள் யுகபாரதி ...

========================================================================
பதிப்பு: 2014

மொத்தப் பக்கங்கள்: 176

வெளியீடு: நேர்நிரை

விலை: 160/-

தொடர்புக்கு : 98411 57958
27A, S1, கிருஷ்ணா நகர் அனெக்ஸ்
மதுரவாயில், சென்னை - 95.

========================================================================

வாசித்துச் சொன்னது

அரசன்
http://www.karaiseraaalai.com/