Thursday, November 20, 2014
சொல்ல வந்த விசயத்தை வாசகர்களுக்கு புரியும் வண்ணம் அதே நேரத்தில் ரொம்ப இழுக்காமல் சொல்வதில் இருக்கிறது படைப்பாளியின் வெற்றி இரகசியம், அதை மிக நேர்த்தியாக செய்திருக்கிறார் திரு. மாரி செல்வராஜ். கொஞ்சமும் ஒப்பனைகளற்ற எழுத்துக்களின் குவியல் தான் இந்த "தாமிர பரணியில் கொல்லப் படாதவர்கள்". கடினமான வார்த்தைகளை கொண்டு தான் இலக்கியம் படைக்கவேண்டுமென்ற நெறியை தனது இலகுவான வார்த்தைகளினால் உடைத்தெரிந்திருக்கிறார்.
சற்றும் தொய்வில்லாமல் நகர்கிறது ஒவ்வொரு கதையும், முடிவுகள் மனதை பிசைந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கதையின் முடிவும் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த வலியை இறக்கி வைக்க முடியாமல் போனாலும், மறந்து போகவேணும் கொஞ்சம் அவகாசம் தேவைப்படுகிறது.
இந்நூல் பேசப்படுவதற்கு முக்கிய காரணம், கதைகளையும், அதன் மாந்தர்களையும் கற்பனையில் புனையாமல், வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களையும் கருப்பொருளாக்கி படைத்திருக்கிறார் என்பது வாசித்து கொண்டிருக்கும்போதே விளங்கி விடுகிறது. அதுதான் வலிமையான படைப்பாக காரணமாயிருக்கிறது.
நூலாசிரியரைப் பற்றி:
இயக்குனர் ராம் அவர்களிடம் உதவி இயக்குனராக தனது பணியை துவங்கி தனது பயணத்தை செலுத்திக் கொண்டிருக்கும் திரு. மாரி செல்வராஜ் விரைவில் இயக்குனர் அவதாரம் எடுப்பதற்கு வாழ்த்துக்களை சொல்லிவிடுவோம்.
"காட்சி" இணைய தளத்தில் வந்தவைகளை சின்ன சின்ன மாற்றங்கள் செய்து "தாமிர பரணியில் கொல்லப் படாதவர்கள்" என்ற நூலாய் நமக்கு வழங்கியிருப்பதாக ஆசிரியரே முன்னுரையில் சொல்லியிருக்கிறார்.
தற்பொழுது பிரபல வாரப் பத்திரிக்கைகளில் இவரின் பெயரை அதிகம் காண முடிகிறது, நல்ல படிப்பாளி தான் தரமான படைப்பை கொடுக்க முடியும்.
நூலைப் பற்றி:
இதிலிருக்கும் மூன்று கதைகளைப் பற்றி மட்டும் சுருக்கமாக சொல்லிவிடுகிறேன்.
1) அடுக்கு செம்பருத்தி:
பால்ய வயதில் சக மாணவியின் மீது நண்பன் கொண்ட காதல் தோல்வியினால் தற்கொலை செய்து கொண்டதையும், பின்னர் அந்த மாணவியை பழி வாங்கிய நிகழ்வையும் பளிச்சென்று சொன்ன விதம் சிறப்பு. கடைசியில் அப்பெண்ணை சந்திப்பதும், அதன் சூழலையும் சொன்னது "நறுக்".
2) இரயில் எனக்கு பிடிக்காது:
இக்கதை அவ்வளவு எளிதில் மனதை விட்டு அகலாது, அப்படியொரு பாரமான கதை. ஒருவன் வெறுப்பாய் மாடு மேய்க்க சென்று அம்மாட்டின் மீது பரிவும் பாசமும் வருகையில், அம்மாடு இறந்து போவதை விவரித்த விதத்தில் நெஞ்சம் கனத்துப் போகிறது. வாழ்க்கையில் ஒரு முறையேனும் வாசித்து விடுங்கள்.
3) நின்றெரியும் பிணம்:
கதிரேசன், தன்னைவிட தாழ்த்த பட்ட ? ஒரு குடும்பத்தார் மீது கொண்ட அன்பினால், சொந்த அத்தை, மாமாவே அவனுக்கு என் பெண் கிடையாது என்று சொல்வதோடு மட்டுமில்லாமல் பெரும் பழியொன்றை சுமத்த, தற்கொலை செய்து கொள்கிறான். எவ்வித பூச்சுமின்றி இயல்பான விவரணைகள்.
இன்னும் சொல்ல நிறைய கதைகள் இருந்தாலும் இந்த மூன்றும் போதுமென்று நினைக்கிறேன். வாசிப்பவனை எளிதில் வசீகரிக்க கூடிய திறமை கொண்ட எழுத்து. இறுதியாக "தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்" கதையல்ல அது வாழ்க்கை. அதை வாசித்து உணர்ந்து கொள்ளுங்கள்.
தாழ்த்தப்பட்டவன் என்று அனுதாபம் தேடும் "சில" படைப்பாளிகளுக்கு மத்தியில் தன்னுடைய வலியை அழுத்தமாகவும், உணர்வுப் பூர்வமாகவும் பதிவு செய்த திரு. மாரி செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்களும், வணக்கங்களும்.
========================================================================
வெளியீடு : வம்சி புக்ஸ்
விலை : 150/-
மொத்தப் பக்கங்கள்: 200
========================================================================
படித்துச் சொன்னது:
அரசன்
Friday, November 7, 2014
குங்குமத்தில் தொடராக இந்த நாவல் வெளிவந்து கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் ஆகிறது, இருந்தாலும் இன்றைய காலக்கட்டத்திற்கும் கச்சிதமாக பொருந்திப் போவது தான் ஆச்சர்யம். நாவலின் மையக்கரு போல், தமிழக அரசியலும், அதன் காட்சிகளும் இன்றளவும் தொடர்வது கொடுமையிலும் கொடுமை. இன்னும் முப்பது வருடங்கள் கழித்து பார்த்தாலும் காட்சி மாறாமல் அப்படியே இருந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.
சுஜாதா அவர்கள் எந்த அரசியல்வாதியையும் பார்த்து எழுதி இருக்க வாய்ப்பில்லை என்று நம்புகிறேன், ஒரு கணிப்பில் எழுதியிருக்க வேண்டும், அவரது கணிப்பை பொய்த்துப் போகாமல் போற்றிப் பாதுகாத்து வரும் அரசியல் வாதிகளையும், அவர்களை தாங்கிப் பிடித்து வரும் மக்களையும் கண்டு மனம் கொதிக்கத்தான் செய்கிறது. சரி விடுங்கள் இதற்கு மேல் இன்னும் உள்ளே சென்றால் பல சங்கடங்களை சொல்ல வேண்டி வருமென்பதால் இத்தோடு இதற்கு (.)
கதைச்சுருக்கம்:
அரசியல்வாதி சின்னப்பனை எதிர்த்து இடைத்தேர்தல் ஒன்றில் சுயேச்சையாக நின்று வெற்றிப்பெற்று சட்டமன்ற உறுப்பினராகிறார் தன்ராஜ். அதற்கு அணிலாக உதவி புரிகிறான் உதவியாளர் நாகு.
சுயேச்சையாக ஜெயித்த உறுப்பினரை தத்தமது பக்கமிழுக்க முதல்வர் தரப்பும், அதிருப்தி தரப்பும் போட்டி போடுகின்றன. முதல்வர் ஆறுமுகத்தை எதிர்த்துக் கொண்டு அதிருப்தி தரப்பான அரங்கனார் பக்கம் சென்று ஆட்சியை கலைக்க டெல்லி வரை சென்று உதவுகிறார் தன்ராஜ். படித்தவன், அதுவும் சாதூர்யமான பேச்சிருப்பதால் அரங்கரா இவனை விடாமல் இழுத்துக்கொண்டு செல்கிறார்.
இன்னொருபக்கம் ஜமுனா, அவளுடைய கணவன் கோவிந்தராவ் பற்றி செல்கிறது கதை . ஜமுனா விற்கும் , தன்ராஜ்க்கும் இடையே இருக்கும் காதல் என்கிற காம விளையாட்டை நெருடலின்றி எழுதி இருக்கிறார். கோவிந்தராவ் போன்றதொரு அப்பாவியை எங்கேயும் பார்த்திராத அளவிற்கு புனைந்திருப்பது அவ்வளவு சுவாரசியம்.
இன்னொன்று கவர்னர் வர்மா பற்றி சுருக்கமாக சொன்னதே தலை சுற்றவைக்கிறது. குழப்படி வேலை செய்வதும் அதை பாதுகாக்க கோர்த்து விடுவதுமாக கவர்னரின் வேலையை கச்சிதமாக சொல்லியிருப்பது சிறப்பு.
ஆட்சியை கவிழ்ப்பதற்கு என்னன்ன வேலைகளை செய்ய முடியுமோ அம்புட்டு வேலைகளையும் செய்வது அட்டகாசம். முதல்வருக்கும், முதல்வராக ஆசைப்படும் அதே கட்சியின் சீனியருக்கும் இடையே நடைபெறும் மோதல்களும் தில்லாலங்கடி வேலைகளையும் எழுத்தில் வெகு சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார்.
தன்ராஜ் தெரிந்தே ஜமுனாவின் வாழ்க்கையை சீரழிப்பதும், அதை தெரிந்துகொண்ட தன்ராஜின் மனைவி திலகவதி பேசும் பேச்சுக்கள் இயல்பு. ஜமுனாவின் வயிற்றில் தன்னோட கருதான் வளர்கிறது என்று அதை உரிமை கொண்டாடும் தன்ராஜ் பண்ணும் வேலைகள் கொஞ்சம் ஜாஸ்தியாக இருந்தாலும் உறுத்தவில்லை.
அரங்கராவின் லீலையை கேசட் பண்ணும் சேட்டைகளிருக்கே செம செம ... படிச்சி பாருங்கள் உங்களுக்கே புரியும்...
தன்ராஜை தேடி முதல்வர் பதவியே வரும் அளவிற்கு குறுகிய காலத்திற்கு வளர்வது தான் உச்சம். முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டானா ? ஜமுனாவும் அவளது குழந்தையும் என்ன ஆனது என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்...
ப்ளஸ்:
ஜமுனாவிற்கும், தன்ராஜ் க்கும் இடையே இளம்வயதில் நடந்த காதல் முறிவை சொல்லாமல் இடையிடையே கொஞ்சம் கொஞ்சமாய் சொல்லியிருப்பது நச்...
திலகவதிக்கும், தன்ராஜ்க்கும் தாலி கட்டாமல் இணைந்து வாழும் இல்லறத்தை போகிற போக்கில் சொல்லிச்சென்றது கூடுதல் அழகு ...
========================================================================
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
மொத்த பக்கங்கள் : 384
விலை : 230/-
========================================================================
படித்துச் சொன்னது
அரசன்
http://www.karaiseraaalai.com/
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
மொத்த பக்கங்கள் : 384
விலை : 230/-
========================================================================
படித்துச் சொன்னது
அரசன்
http://www.karaiseraaalai.com/
Subscribe to:
Posts (Atom)