Thursday, February 27, 2014

குடி முந்திரி - தங்கர் பச்சான்


பொதுவாக திறமை இருப்பவர்கள்  பொது வெளியில் அதிகம் பேச மாட்டார்கள், அப்படி பேசினாலும் ஒன்றிரண்டு வார்த்தைகளோடு நழுவுகின்ற திறமைசாலிகளுக்கு மத்தியில், நேர் எதிர் குணம் கொண்டவர் தான் இந்நூலின் ஆசிரியர் திரு. தங்கர் பச்சான். அதிகம் பேச மாட்டார், மீறி பேசினால் "அதிகம் பேசப்படுவார்!"

பன்முகம் கொண்ட திறமைசாலி, திரைத்துறையில் இவரைப்பற்றிய பிம்பங்கள் எப்படி இருந்தாலும், தமிழ் எழுத்துலகில் இவருக்கென தனி இடம் இருக்கிறது! உணர்வுகளை மையப் படுத்தியே படைப்புகளை உருவாக்குவார்!


கற்பனைக் கலவைகளை தவிர்த்து, வாழ்வியலை பதிவு செய்வதில் பெரும் ஆர்வம் மிகுந்தவர். வாசித்து முடிக்கையில் நிச்சயம் அதிர்வை ஏற்படுத்தும் இவரின் எழுத்துக்கள்! அதற்கு சான்று இந்த குடி முந்திரி எனும் சிறுகதை தொகுப்பு.                                            


1) குடி முந்திரி 

2) பெரு வழியில் 
ஒரு கூத்து மேடை 

3) வளர்க தமிழ்!

4) பசு 

5) வக்கிரம் 

6) சக மானுடங்களும், 
தரச் சான்றிதழ் 
கிட்டாத அறவாழி 
என்கிற ஒரு 
தமிழ் எழுத்தாளனும்!







மேற் சொன்ன தலைப்புகளில் ஆறு சிறுகதைகள் உள்ளடங்கி இருக்கின்றன, ஒவ்வொன்றும் தனி இரகம்! வாழ்ந்த வாழ்வியலை, பழகிய மக்களின் பழக்க முறைகளை, மக்களின் மொழியிலே கொடுத்திருப்பது தான் இந்நூலின் கூடுதல் அழகு! இதில் சிறப்பு என்னவெனில் கதையின் மையக்கருவோடு, கதை நடைபெறும் சூழலையும் போகிறப் போக்கில்  பொட்டில் அறைந்த மாதிரி சொல்லியிருப்பதும் தான்!  

முதல் கதையான "குடி முந்திரியில்" படிப்பறிவு இல்லா தன் வம்சத்தில் தன் மகன் வாங்கப் போகும் பட்டத்திற்காக/ மகனின் ஆசைக்காக, குல சொத்தான குடி முந்திரியை விற்பதை எத்தனை நுணுக்கமுடன் பதிவு செய்திருக்கிறார் என்பதை அந்த சூழலில் வளர்ந்தவன் என்கிற முறையில் நன்கு உணர முடிந்தது, படித்துப் பாருங்கள் நீங்களும் உணர்வீர்கள்!

அடுத்து "பசு" எனும் தலைப்பில், மனித உணர்வுகளை, எண்ணங்களை மிக அற்புதமாய் பதிவு செய்திருக்கிறார்! ஏதோ ஒரு சூழ்நிலையில் தவறு செய்த ஒருவனின் தவிப்பை,  மன ஓட்டங்களை மிக துல்லியமாக எழுத்தில் கொண்டு வந்திருக்கும் இந்த தொகுப்பில் உள்ள அனைத்தும், நினைவில் பதியும் தன்மை கொண்ட அழகிய படைப்புகள்! ஒரு பானைக்கு இந்த இரண்டு பருக்கைகளே போதுமென்று நம்புகிறேன்! வாய்ப்பு கிட்டும்போது வாங்கி வாசித்துப் பாருங்கள், கொடுக்கும் காசுக்கு மனம் நிறைவடையலாம்!
வெளியீடு :



செம்புலம் 
50, 5வது தெரு, அச்சுதன் நகர்,
ஈக்காட்டுதாங்கல், சென்னை - 97.
மின் அஞ்சல் : sempulam @ yahoo.com   




வெளிவந்த ஆண்டு : 2003, விலை : 75


Sunday, February 23, 2014

லா.ச.ரா.வின் ‘அபிதா'

எழுத்தாக்கம் : பிரியா

ல்ல புத்தகங்களின் அறிமுகத்திற்காகவே துவங்கப்பட்ட வாசகர் கூடம் பக்கத்தில் என்னுடைய சிறு பங்களிப்பாக  நான்  இங்கு எடுத்து வந்திருப்பது ஒரு அற்புதமான காலங்கள் கடந்து நிற்கும் தமிழ் எழுத்தாளர் ஒருவரின் நாவல்.. நாவலின் பெயர் "அபிதா" .. எழுதியவர் "லா.ச.ரா" என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட லா.ச.ராமாமிருதம்.


காதல் கொண்ட ஒரு மனதின் பல்வேறு கால கட்ட துடிப்புகளே இந்த நாவல். உடனே இதை ஒரு சாதாரண காதல் கதை என்று நினைக்க வேண்டாம். கதையின் நாயகன் தான் காதலித்த நாயகியை ஒரு கட்டத்தில் பிரிந்து ஊரினையும் பிரிந்து, வெளியூர்  சென்று அங்கே வேறொருவரையும் மணம் புரிந்து கொண்டு பல ஆண்டுகளுக்குப் பின் சொந்த ஊருக்கு திரும்பி வருகிறார், தன்  மனைவியையும் அழைத்துக்கொண்டு!.

ஊருக்கு வந்து தன்னை வளர்த்த தன் மாமாவின் வீட்டில் தங்குகிறார். பின் தன காதலியின் வீட்டிற்கு சென்ற பார்க்க அந்த வீட்டில் ஒரு பருவ வயது பெண்ணைப் பார்க்கிறார், அச்சு அசல் அவரின் காதலியின் தோற்றத்தினூடே. ஒரு கணம் தடுமாறிப் போகிறார். மூப்பும் வயோதிகமும் அவளை மட்டும் அணுகாதது எப்படி என்று வியந்து போகிறார். பின்னர் தான் தெரிய வருகிறது அவருடைய காதலியும், அவருடைய தந்தையும் இறந்து விட்ட செய்தி, அத்துடன் அப்பெண் அவள் காதலியின் மகளென்றும். அந்த வீட்டில் இப்பொழுது அவர் காதலியின் கணவர் தனது இரண்டாம் மனைவியுடன் வசித்து வருகிறார் என்பதும்.

மனிதர் வேறு எதைப்பற்றியும் கூறாமல் அந்த குடும்பத்தின் பால்ய கால குடும்ப நண்பனாக அங்குள்ளவர்களுடன் பேசி விட்டுச் செல்கிறார். அதன் பின் நிதமும் அந்த வீட்டிற்கு வருவதும் அவர்களுடன்  பொழுதைக் கழிப்பதுமாக இருக்கிறார். ஒரு கட்டத்தில் அவர் மனைவியும் அவருடன் வந்து அந்த குடும்பத்தில் கலந்து விடுகிறார்.

அவர்கள் அதன் பின் அந்த வீட்டிலேயே தங்குகிறார்கள். ஆனால் இவை அனைத்தையும் அவர் செய்வது அந்த பெண்ணை (காதலியின் மகளை) பார்ப்பதற்காக மட்டுமே என்பது அவர் மனம் மட்டும் அறிந்த இரகசியம். தாயிடத்தில் தொடங்கிய காதல் சேயினிடத்தில் வந்து தேங்கி நிற்கிறது.  இதனை தொடர்ந்து கதை ஒரு வித்தியாசமான பாணியில் பயணிக்கிறது, எதிர்பாராத பல திருப்பங்களுடன், எதிர்பாராத முடிவுடனும்.


நான் படித்த லா.ச.ரா வின் முதல் புத்தகம் இது. முதல் புத்தகத்திலேயே தன் கவித்துவமிக்க எழுத்தினால் கட்டிப் போட்டு விட்டார். பல இடங்களில் படிப்பது கதையா இல்லை கவிதையா  என்னும் அளவிற்கு அற்புதமான வார்த்தை கையாளல். இதை உண்மையில் படித்து அனுபவித்தால் மட்டுமே உணர முடியும். அந்த உணர்வை வார்த்தைகளாய் விவரிக்க இயலாது. உங்களுக்கு ஒரு சிறந்த நாவலை படிக்க வேண்டுமென்ற தீராத ஆவல் உண்டா? அப்படியெனில் கட்டாயம் இந்நாவலைப் படியுங்கள். உயிர்மை காலச்சுவடு உள்ளிட்ட பல முன்னணி பதிப்பகங்களில் கிடைகிறது.

இணையத்தில் அழியாச்சுடர் பக்கத்தில் இந்நாவலின் ஒரு பகுதி மட்டும் வாசிக்கக் கிடைக்கிறது

குறிப்பு : 
  நான் நாவலின் பலமாய் இங்கே குறிப்பிட்ட அவரின் வார்த்தை நடை அமைப்பையே சிலர் குறையாய் சொல்வதும் உண்டு. லா.ச.ரா வின் எழுத்துக்களை முதலில் புரிந்து கொள்வது சற்றே கடினமாக இருக்கலாம். ஆனால் ஒருமுறை அவரைப் படித்து உங்களுக்குப் பிடித்து விட்டால் அவரை விட்டு வெளி வருவது மிகவும் கடினம்.


லா.ச.ரா. என்று அழைக்கப்படும் லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் 1916ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி திருச்சிக்கு அருகில் உள்ள லால்குடியில் பிறந்தார். அவருக்கு நான்கு மகன்கள், ஒரு மகள். மனைவி பெயர் ஹேமாவதி. மணிக்கொடி இதழில் எழுத ஆரம்பித்த லா.ச.ரா.வின் பிரசுரமான முதல் கதை ஆங்கிலக் கதை. தலைப்பு: ‘தி எலிபெண்ட்’.
 இவர் 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். இதுவரை லா.ச.ரா.வின் 6 புதினங்களும், 6 கட்டுரைத் தொகுப்புகளும் வெளியாகியுள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற லா.ச.ரா.2007ம் ஆண்டு தனது 92வது பிறந்தநாளில் காலமானார். ‘சிந்தா நதி’ என்ற அவரின் நூலுக்கு 1989ம் வருடம் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

Thursday, February 20, 2014

ஜோதிடம் புரியாத புதிர்

நடிகர் ராஜேஷ் - பலவற்றைக் கற்றுத் தெளிந்தவர். நிறைகுடம் நீர் தளும்பாது என்பதற்கான உதாரணம் இவர். பகுத்தறிவாளரான இவர் ஜோதிடத்தைப் பகுத்துப் பார்த்ததில் ஜோதிடம் மெய் என்று ஆணித்தரமாகச் சொல்கிறார். பின்னர் எதற்காக "ஜோதிடம் புரியாத புதிர்" என்று தலைப்பு வைக்கிறார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. குருட்டு நம்பிக்கையின் அடிப்படையிலோ அச்சவுணர்வின் அடிப்படையிலோ ஜோதிடத்தை இவர் ஏற்றுக்கொள்ளவில்லை, தானாகக் களமிறங்கி மரத்தடி ஜோதிடர் முதல் மாளிகையில் இருக்கும் ஜோதிடர் வரை அனைவரிடமும் ஆய்வு செய்து ஜோதிடத்தை உண்மை என்று ஏற்றுக்கொண்டிருக்கிறார்.


ராணி வார இதழில் வெளியான தொடரின் தொகுப்பை 336 பக்க நூலாக்கி இருநூறு ரூபாய்க்கு நமக்குத் தந்தவர்கள் கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தி.நகர், சென்னை.




நூலுக்கு வாழ்த்துரை எழுதிய தயாரிப்பாளர் கலைஞானம் அவர்கள் கொஞ்சமாகவும் கவிஞர் பிறைசூடன் அவர்கள் மிகுதியாகவும் சிலாகித்திருக்கிறார்கள். அது அவர்கள் ஆசிரியரின் நெருங்கிய நண்பர்கள் என்பதால் கூட இருக்கலாம்.

"நம் நாட்டில் பலர் வெளியே இப்படிப் பகுத்தறிவு வேஷம் போட்டுக்கொண்டு திரைமறைவில் ஜோதிடம் பார்த்து பரிகாரம், பூஜை, யாகம் என்றெல்லாம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். எனக்கு அப்படிப் போலியான பகுத்தறிவு முகமூடியை அணிவதற்கு விருப்பமில்லை. என் பகுத்தறிவுக்கு ஜோதிடம் உண்மையென்று விளங்குகிறது. எனவே அதன் சார்பாக நான் பேசுகிறேன்" என்ற வரிகளில் ஆசிரியர் தான் தேர்ந்த பகுத்தறிவாளர் என்பதை நமக்கு தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறார். மேலும் அவர் பல புத்தகங்களைப் படித்தவர் என்பதை உணர்த்துவதற்கு சர்ச்சில், ஐன்ஸ்டீன், சாக்ரடீஸ் போன்றவர்களின் கருத்துக்களை மேற்கோள்காட்டுகிறார்.

முதலாவது கட்டுரையில் நட்சத்திரக் குறியிட்டு ஆசிரியர் கேட்டுள்ள கேள்விகள் உண்மையிலேயே நம்மையும் ஆழ்ந்து யோசிக்கவைக்கின்றன. உதாரணத்துக்கு

* ஒருவேளை இறைவன் நம்மைவிட கோடிக்கணக்கான சக்திகளைப் படைத்துள்ளாரா? அந்த சக்தியும் இந்த பிரபஞ்ச சக்திக்குள் அடக்கம் தானா?

* ஹிட்லர் கொலை செய்தது ஒரு கோடியே அறுபத்தைந்து லட்சம் பேர்கள். இவ்வளவு போரையும் கொலை செய்த ஹிட்லருக்கு தண்டனை அவர் செய்துகொண்ட தற்கொலை மட்டும்தானா?

நாடி ஜோதிடம் ஜப்பானில் எப்படி பிரபலம் ஆனது என்பதற்கு சரியான காரணங்களை அலசி ஆராய்ந்து கண்டுபிடித்து நமக்கு சொல்கிறார் ஆசிரியர். மேலும் வைத்தீஸ்வரன் கோவிலைச் சேர்ந்த தியாக குறிஞ்சி செல்வன் என்பவர் தலைநகர் டோக்கியோவில் நாடி ஜோதிட நிலையம் ஒன்றை ஆரம்பித்துவைத்திருக்கிறார் என்ற தகவலையும் தருகிறார்.

வெங்கட்ராம ஐயர் என்னும் ஜோதிடர் நூலாசிரியரின் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு 1990ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று முப்பதுக்குள் அவரது வீட்டில் தீ விபத்து நடக்கும் என்று ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார். சொன்னது போலவே பெரிய அளவில் தீ விபத்தும் நடக்க உடனடியாக தீயை அணைத்திருக்கிறார்கள். இதுபற்றி ஜோதிடரிடம் ஆசிரியர் கேட்டபோது அந்த நேரத்தில் சனி வக்கிரமாகிறது, பெரிய பிரச்சனை ஒன்றைக் கொடுக்கும் என்றிருக்கிறார். ஆசிரியரும் அடுத்த நாளே பிர்லா கொலரங்கத்துக்குச் சென்று சனி கிரகம் வக்கிரமாவதைக் கண்டு வியந்திருக்கிறார்.

நண்பன் கொலை பற்றிய கட்டுரையில் நடந்ததை ஆசிரியர் விவரிக்கும் விதத்தில் நமக்கு முதுகுத்தண்டு ஜிலீர் என்கிறது.  வடபழஞ்சி சாமியார் பற்றிய கட்டுரையிலும்  நடிகர் சிவகுமார் அவர்களது தந்தை பற்றிய கட்டுரையிலும் நம்மை வியப்பின் உச்சிக்கே கொண்டுசெல்லும் அதே நேரத்தில் பல இடங்களில் வளவளவென்று வார்த்தைகளை இழுத்து நம்மைக் கொட்டாவி விடவைக்கிறார்.

நல்லவேளையாக இது தொடர்கதை இல்லை, இருந்திருந்தால் தொய்வான சில கட்டுரைகளையும் படித்தாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருப்போம். சில கட்டுரைகளை அதன் தலைப்புகளே சுமாராகவே இருக்கும் என்று உணர்த்துகின்றன. சம்பவங்கள் நடந்த காலகட்டத்தில் ஒரு கோர்வை இல்லை. 1983-ஆம் ஆண்டு நடந்த அனுபவங்களை சொல்கிறார். அடுத்த கட்டுரையில் தனது பால்ய காலத்தில் நடந்த நிகழ்வுகளை சொல்கிறார். அடுத்த கட்டுரையில் தான் படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் நடந்த நிகழ்வுகளை விவரிக்கிறார். நாடி ஜோதிடத்தைப் பற்றி சொல்லும்போது அது சம்பந்தப்பட்ட கட்டுரைகளை வரிசையாக வருவதுபோல் கொண்டுவந்திருக்கலாம். இப்படி ஏகப்பட்ட குளறுபடிகள். 

எழுதப்பட்ட கட்டுரைகள் பலவற்றில் நூலாசிரியரின் சொந்த அனுபவங்களே நிறைந்திருக்கின்றன. அவரது தாத்தா, மாமா, தாய், தந்தை, மகன், மகள் மற்றும் உறவினர்கள், திரைப்பட நடிகர்கள், பிரபலங்கள்  பலரது வாழ்வில் ஜோதிடம் குறுக்கிட்டதை நேரில் கண்ட சாட்சியாக நமக்கு விவரிக்கிறார். ஊமை ஜோதிடன், குட்டி ஜோதிடன், சிங்கப்பல் குழந்தை, புகைப்பட ஆரூடம், வெற்றிலை ஜோதிடம் முதல் ஒரு ஜோதிடரிடம் தன்னுடையது என்று தனது நண்பரது ஜாதகத்தைக் காட்டி பல்பு வாங்கிய இடங்கள் என்று அனைத்து கட்டுரைகளும் அனுபவங்கள் சார்ந்ததாகவே இருக்கின்றன.

ஜோதிடம் கற்றுக்கொள்வதற்கோ ஜோதிடம் பற்றித் தெரிந்துகொள்வதற்கோ ஓரிரு விஷயங்கள் தவிர இந்த நூலில் எதுவும் இல்லை. தனது வாழ்வில் ஜோதிடத்துடனான உறவுமுறை எப்படித் தோன்றியது, தான் எப்படியெல்லாம் ஆய்வு செய்திருக்கிறார், என்னென்ன மாதிரியான ஜோதிடர்கள் இருக்கிறார்கள் என்று பல கட்டுரைகளில் சுவாரஸ்யமாகவும் சில கட்டுரைகளில் தொய்வாகவும் எழுதியிருக்கிறார். ஒரு பகுத்தறிவாளருக்கு எப்படி ஜாதகம், ஜோதிடம், ஆரூடம் போன்றவற்றில் நம்பிக்கை வந்தது என அறிந்துகொள்ள விரும்புபவர்கள் நிச்சயம் படிக்கலாம்.

Monday, February 17, 2014

ராஜீவ்காந்தி சாலை - விநாயக முருகனுக்கு ஒரு வாசகனின் கடிதம்

அன்புள்ள விநாயக முருகன்,

நான் நலம், நீங்கள் நலமா? தங்களுடைய முதல் புத்தகமான ராஜீவ்காந்தி சாலையை வாசித்துவிட்டேன், வாசிப்பதற்கு முன்னும் பின்னும் என்னுள் ஏற்பட்ட உணர்வுகளை விமர்சனமாக எழுதுவதைவிட இக்கடிதம் மூலம் எழுதுவது நலமென நினைக்கிறன். உங்களுடைய முதல் புத்தகத்திற்கு முதலில் எனது வாழ்த்துக்கள். 

இந்தாண்டு புத்தகச் சந்தைக்கு முன் பரபரப்பாக நடைபெற்ற புத்தகச் சண்டையில் உங்கள் புத்தகமும் ஒன்றென்று அறிவேன். புத்தகம் வெளிவருவதற்கு முன்பே ஒரு இளம் மற்றும் முதல் எழுத்தாளருக்கு கிடைக்க வேண்டியதை விட மிக அதிகமான எதிர்பார்ப்புகளையும் எதிர்ப்புகளையும் சம்பாதித்துவிட்டீர்கள். ஒருவேளை அப்படியொரு சம்பவம் இணையத்தில் நடைபெறாது போயிருந்ததால் எனக்கும் கூட தங்களது புத்தகம் பற்றிய தகவல் கிடைக்கமால் போயிருக்கலாம். 



எது எப்படியோ, இந்த வருட புத்தக கண்காட்சியினுள் நுழையும் போதே, எந்த புத்தகம் வாங்குகிறோமோ இல்லையோ ராஜீவ் காந்தி சாலை வாங்கியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் நுழைந்தேன். வாங்க நினைத்ததன் முதல் காரணம் அது என் தொழில் சார்ந்த சூழலைப் பற்றிய புத்தகம், இரண்டாவது கடந்த இரு வருடங்களாக என்னை பயணிக்க வைத்துக் கொண்டிருக்கும் சாலை. மூன்றாவது - படிக்க இரண்டாவது பத்தி. வாங்கலாமென்று ஆவலோடு கையிலெடுத்த புத்தகத்தை, எடுத்த வேகத்தில் கீழே வைத்துவிட்டேன், காரணம் விலை. இருநூற்று நாற்பது ருபாய். பதிப்பகம் உயிர்மை. இருக்காதா பின்னே! என் அண்ணனைப் பார்த்தேன் 'புது ரைட்டர், இவ்ளோ ரேட்டு, யோசிச்சிக்கோ?' என்றான். (அவன் சாருவின் வாசகன் என்பது இங்கு தேவையில்லாத விசயமாக இருந்துவிட்டுப் போகட்டும்.)          

வாங்கவில்லை. இருந்தும் மனம் முழுவதும் ராஜீவ் காந்தி சாலையின் மீதே இருந்தது. இந்த நல்ல நேரத்தில் ஸ்கூல்பையன் வாங்கிய புத்தகங்களைக் கவனித்தேன். அட அவர் கைகளில் நீங்கள் எழுதிய ராஜீவ் காந்தி சாலை. அடுத்த சில நிமிடங்களில் என் கைகளுக்கு மாறியிருந்தது.   

*****

சுஜாதாவின் கணேஷ் வசந்த் புத்தகங்களை ஆரம்பிக்கும் போது எதிர்பாராத ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளுமே அப்படியொரு மனநிலையில்தான் நானும் ராஜீவ்காந்தி சாலையின் முதல் பக்கத்தை வாசிக்கத் தொடங்கினேன். போதாக்குறைக்கு மனுஷ் வேறு மிகவும் விறுவிறுப்பாக செல்லும் நாவல் என்றும், அடுத்த சுஜாதா, பாலகுமாரன் வரிசையில் விநாயக முருகன்தான் என்று அபிலாஷும் பேஸ்புக்கில் எழுதியிருந்தார்கள். என் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியிருந்தது. மனதிற்குள் நூறுமுறை ஸ்கூல்பையனுக்கான நன்றியை தெரிவித்துக்கொண்டேன்.

முதல் சில பக்கங்கள் 'காலம்' பேசுகிறேன் என்று காலமானது பழைய மகாபலிபுரம் சாலையான தற்போதைய ராஜீவ்காந்தி சாலையின் ஆதிநிலையில் இருந்து தன்னுடைய விவரிப்பைத் தொடங்குகிறது. அட இது நாம எதிர்பார்த்தத விட நல்லா இருக்கும் போலயே, இதப் போய் ஏன் சாரு திட்டினாரு என்றெண்ணியபடி தொடர்ந்தேன். வழக்கமாய் நான் பயணிக்கும் சாலையின் மழைநீர் வழிந்தோடும் காலத்தில் இருந்து கதை தொடங்கியது. சொன்னால் நம்பமாட்டீர்கள் ஒரே மூச்சில் படித்து முடிப்பதற்கு என்னை ஆயத்தப்படுத்திக் கொண்டேன்.   

ஆனால்...! தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. அடுத்தடுத்த பக்கங்களில் நான் எதிர்பார்த்த ஏதோ ஒன்று குறைவது போலவே தோன்றியது. அது சுவாரசியமா இல்லை கதைசொல்லிய விதமா எனத் தெரியவில்லை. சரி போகப்போக சுவாரசியம் அதிகரிக்கும் தொடர்ந்து வாசிக்கலாம் என்று நினைத்த எனக்கோ மிதமிஞ்சிய ஏமாற்றம். போதாக்குறைக்கு கதைமாந்தர்கள்  பார்வையில் பார்ப்பனர்கள் மற்றும் மலையாளிகள் அனைவருமே மோசமானவர்கள் அல்லது மிக மோசமானவர்கள். அதிலும் பார்ப்பனர்களை உவமைபடுத்தியிருக்கும் விதம் வன்மத்தின் உச்சம் (உடனே நான் பாப்பானா என்ற ஐயம் வேண்டாம்). சரி அது உங்கள் எழுத்துச் சுதந்திரமாக இருந்துவிட்டுப் போகட்டும். எனக்கு தேவையில்லாத விஷயம். 

அதன்பின் சில நாட்களுக்கு புத்தகத்தைத் தொடவேயில்லை. இருந்தும் தட்டிக்கழிக்கவும் முடியவில்லை. ஒருவழியாக வாசித்து முடித்துவிட்டேன்.

*****

பிரதானமான ராஜீவ்காந்தி சாலை, அங்கே பிரதானமாக இருக்கும் சில்வர்சாப்ட் உட்பட பல ஐ.டி கம்பெனிகள். இந்த கம்பெனிகளில் வேலை பார்க்கும், ஓய்வெடுக்கக் கூட நேரமின்றி நவீன கலாச்சாரத்திற்கு தங்களை மிக வேகமாக மாற்றிக் கொண்ட புதியதலைமுறை ஒருபக்கமும், அதே ராஜீவ்காந்தி சாலையில் தங்களிடமிருந்த இருந்த நிலங்கள் மொத்தத்தையும் அரசாங்கத்திடமும், ரியல்எஸ்டேட் பண முதலைகளிடமும் ஏமாந்த மனிதர்கள் மற்றும் அவர்களுடைய அன்றாட வாழ்க்கைப் போராட்டங்கள் என்று தற்கால வாழ்க்கைச் சூழலின் வேகத்திற்கு தங்களை மாற்றிக்கொள்ள முடியாமல் திண்டாடும் எளிய மக்கள் மறுபுறமும் என அற்புதமாக பின்னப்பட்ட கதை. 

ஆனால் பிரதானமாக இருந்திருக்க வேண்டிய ராஜீவ்காந்தி சாலையானது கதை விவரிக்கப்பட்ட பாணியில், ஓய்வின்றி பணம் பணம் பணம் என்று ஓடும் இளைஞர்களின் மனைவிகள் அனைவருமே கள்ளத்தொடர்பு வைத்துக் கொள்வார்கள் என நகர்ந்து கள்ளத்தொடர்பு என்பது மட்டுமே பிரதானமாகிவிட்டது போல் தோன்றுகிறது. கதை முழுவதுமே யாராவது யாருடனாவது கள்ளத்தொடர்பு வைத்துக்கொள்கிறார்கள். கள்ளத் தொடர்பு வைத்துக் கொண்ட பாவத்திற்காக இழுத்துக் கொண்டு ஓடுகிறார்கள் இல்லையேல் தற்கொலை செய்து கொள்கிறார்கள் அல்லது தற்கொலை செய்ய தூண்டப்படுகிறார்கள். ஒருவேளை ஐ.டி துறையில் வேலை செய்யும் இளைஞர்கள் தாம்பத்ய விசயத்திலும் கவனமாக இருக்க வேண்டும் என்ற விஷயத்தை பொட்டில் அறைந்தார் போல் கூறும் நாவல் என இதனை வைத்துக் கொள்ளலாமா?    

கதையின் முதல் எழுபது பக்கத்திற்கு மிகவும் சோகையாக நகரும் ராஜீவ்காந்தி சாலையை அதன் பின் 'சூடு'பிடித்து நகரச் செய்வது இந்த கள்ளகாதல் வகையறாக்கள்தான். எப்போதுமே அடுத்தவர்கள் அந்தரங்கத்தை அறிந்துகொள்வதில் இருக்கும் தக்குனூண்டு ஆர்வம் யாருக்குமே தவிர்க்க முடியாத ஒன்று. அது நிஜமாய் இருந்தால் என்ன புனைவாய் இருந்தால் என்ன? நான் நினைக்கிறன் உங்கள்  நாவலை நகர்த்திச் செல்வதும் அந்த ஒரு காரணி கள்ளக்காதல் + காமம் + ஆபாசம் தான் என்று. அதனால் தானோ என்னவோ இந்த புத்தகத்தை யாருக்கேனும் சிபாரிசு செய்யவும் பயமாய் இருக்கிறது. யாருமே இதுபோன்ற புத்தகங்களை வெறுப்பதில்லை என்றாலும் விரும்புவதுமில்லை. 

காமத்தை வர்ணிக்கும் சில விசயங்களை இலைமறை காய்மறைவாக நகர்த்தியிருக்கலாம். அதிகபட்ச ஆபாசச் சொற்களையாவது குறைந்தபட்சம் ஆக்கியிருக்கலாம், நீங்கள் சாருவின் சாயலில் எழுதியிருப்பதாக நீங்கள் குறிப்பிட்டதாக சாரு குறிப்பிட்டிருந்தார். எனக்கு ஏனோ இதுபோன்ற எழுத்துக்களில் உடன்பாடில்லை (எனக்கு மட்டுமே). கதையோட்டம் கருதி சில ஆபாச (அ) காம வார்த்தைகளை, சம்பவங்களைச் சேர்க்கலாம். ஆனால் இவை மட்டுமே கதையோட்டமாக இருக்கும் என்றால் இதற்கும் சரோஜாதேவி புத்தகத்திற்கும் என்ன வித்தியாசம் உள்ளது? நாசூக்காக சொல்ல வேண்டிய பல விஷயங்கள் நாராசமாய்ப்பட்டது. ஏன் கெட்ட வார்த்தைகள், நேரடியான ஆபாச சித்தரிப்புகள்? பெண்ணின் சுயஇன்பம் அனுபவித்தலை, லெஸ்பியன் செக்ஸை, அடையாறு நாய் டாக்டர் போன்ற விசயங்களை வலிந்து திணித்திருப்பது போல் பட்டது. அவற்றை ஒற்றை வரியில் விளக்கிவிட்டு கதைக்குள் நகர்ந்திருக்கலாமே. சொல்லபோனால் அந்த அடையாறு நாய் டாக்டர் கதையின் ஓட்டத்தில் எங்குமே சம்மந்தப்படவில்லை. பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஒருவேளை அதனை ஒரு செய்தியாக தர முயன்றிருக்கிறீர்களா? இப்படி பல தேவையில்லாத விசயங்களை கத்தரிப்பதன் மூலம் புத்தகத்தின் பல பக்கங்களைக் கணிசமாகக் குறைத்திருக்கலாமே?             

எனக்கு மற்றொரு விஷயம் புரியவேயில்லை, அதவாது கதை நடக்கும் காலம். காலம் என்று கதை முழுவதும் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கார்காலம், கூதிர்காலம், இளவேனிற்காலம் முதலியவற்றைக் கூறவில்லை. எந்த வருடத்தில் நடக்கின்றது என்பதை கேட்கின்றேன். ஏனென்றால் இந்த நாவலில் மிக சமீபத்தில் EA வில்  நடந்த தற்கொலை பற்றி குறிப்பிட்டுள்ள அதே நேரத்தில் சில ஆண்டுகளுக்கு முன் புத்தாண்டு கொண்டாடத்தின் போது ஏற்பட்ட நீச்சல்குள விபத்து பற்றியும் குறிப்பிட்டுள்ளீர்கள். கதையின் பல இடங்களில் ராஜீவ் காந்தி சாலையின் சாலை கட்டமைப்புப் பணிகள் நடைபெறுவதாகவும் குறிப்பிடுகிறீர்கள். அதுவும் புரியவில்லை. 

கடந்த சில வருடங்களாக சிறுசேரி வரையிலும் முழுமையடைந்த ராஜீவ்காந்தி சாலையில்தான் நான் பயணித்துக் கொண்டுள்ளதாக நம்புகிறேன்! ஒரு இடத்தில் கூட சாலை கட்டுமானப்பணிகளை பார்த்ததில்லை. ஆகையால் கதை நடக்கும் காலத்துடன் எதையுமே பொருத்திப் பார்க்க முடியவில்லை. இரா.முருகனின் மூன்று விரல் நாவல் படிக்கும் போதும் காலம் விசயத்தில் இதே போன்றதொரு குழப்பம் ஏற்பட்டது, ஆனால் அந்நாவலில் கதை நடைபெறும் வருடம் எப்போது என்பதுதான்  ட்விஸ்டே. ஒருவேளை அப்படியெதுவும் இதில் இருக்குமோ என்று எதிர்பார்த்தேன், அப்படியும் இல்லை. சரி புனைவு என்பதால் காலம் தேவையில்லை என்று நினைத்துவிட்டீர்களோ? 

உங்கள் நண்பர் ஒருவரின் விமர்சனத்தை பேஸ்புக்கில் படித்தேன். அதாவது உங்கள் பேஸ்புக் ஸ்டேடசில் வழிந்தோடும் எள்ளல் நடை இப்புத்தகத்தில் இல்லை, மற்றபடி அருமையாக நகரும் நாவல் என்று. இப்படி யாரேனும் உங்கள் நாவலை விமர்சனம் செய்தால் கொஞ்சம் தள்ளியே நில்லுங்கள், காரணம் உங்கள் வீழ்ச்சிக்கான படுகுழியை அவர்களே வெட்டலாம். 

முந்நூறு பக்கங்களுக்கு மிகாமல் ஒரு நாவல் எழுதுகிறீர்கள், அதுவும் உங்கள் முதல் நாவல், அதனை பார்த்துப் பார்த்து செதுக்க வேண்டாமா? கொஞ்சம் அலங்காரமான நடையுடன் எழுதியிருக்க வேண்டாமா? அலங்காரம் கூடத் தேவையில்லை. பிழைகளைத் தவிர்த்திருக்கலாமே? ஏன் உங்கள் கதாபாத்திரங்கள் அனைவரும் வரிக்கு வரி எதையாவது நினைத்துப் பார்க்கிறார்கள்? அவர்கள் நினைப்பவை எல்லாவற்றையும் வரிக்குவரி நினைக்காமல் பாராபாராவாக நினைத்துப் பார்க்கச்சொன்னால் உங்களுக்குப் புண்ணியமாய்ப் போகும்.      

உங்கள் நாவலை எழுதிவிட்டு நிதானமாகய் ஒருமுறை படித்து பார்த்தீர்களா? இல்லை நீங்கள் எழுதிய நாவலை நிதனாமகப் படித்துப் பார்க்கும் அளவுக்கு உங்களுக்குகே பொறுமை இல்லையா? கதாபாத்திரங்கள் பேசிக்கொள்ளும் போது ஏன் இவ்வளவு குளறுபடிகள். பழனி பேச வேண்டியதை லூர்து பேசுகின்றான். லூர்து பேச வேண்டியதை பழனி பேசுகிறான். ஒரு இடத்தில் சம்மந்தமே இல்லாமல் கார்த்திக் பேச வேண்டியதை பிரணவ் பேசுகிறான். இதையெல்லாம் விட கொடுமை என்னவெனில், கடைசி அத்தியாத்திற்கு முந்தைய அத்தியாத்தில் இறந்து போன ஒரு கதாபாத்திரம், கடைசி அத்தியாயத்தில் அமைதியாக லேப்டாப்பை திறந்து பார்ப்பதுதான். ஒருவேளை ராஜீவ்காந்தி சாலையில் அலைந்து திரியும் பேய்களையும் நீங்கள் விட்டுவைக்கவில்லையோ!    

புத்தகக் கண்காட்சிக்குள் முடித்தே ஆக வேண்டும் என்ற டார்கெட் வைத்து எழுதினீர்களா? அப்படி என்றால் உயிர்மை கூடவா பிழை திருத்தவில்லை. 

மொத்த கதையும் ஏன் இவ்வளவு அழுத்தத்துடன் நகர்கிறது . படிக்கும் பொழுது ஏதோ ஒரு பெரிய பாராங்கல்லை சுமந்துகொண்டே படிப்பது போன்ற உணர்வு. அத்தனை பேரும் எத்தனை பெரிய துன்பம் வரினும் ஆங்காங்கு சிரிக்கக் கூடவா மாட்டார்கள்?    

இவ்வளவு பெரிய நாவலில் ஒருவரி கூடவா உனக்குப் பிடிக்கவில்லை என்று கேட்கலாம்.  குப்பைமேட்டில் நின்று கொண்டு உயர்ந்து வளர்ந்த கட்டிடங்களை நோக்கி லூர்து சிந்தித்துப் பார்ப்பானே 'புள்ளியில் இருந்து பிரம்மாண்டத்தைப் பார்த்தால் அதிசியமாய் இருக்கும் பிரம்மாண்டத்தில் இருந்து புள்ளியைப் பார்த்தால் என்ன அதிசியம் இருக்கப்போகிறது' என்றவரியை மெய்யாலுமே ரசித்தேன். மற்றும் இந்த புத்தகத்தில் எனக்கு தெரியாத மற்றும் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள் சில இருக்கின்றது. என்னவொன்று அதைத் தெரிந்து கொள்வதற்காக என் பொறுமையை சோதிக்க வேண்டியதாய் இருக்கிறது.      

'அதான் புடிக்கலை இல்ல அப்போ எதுக்கு இவ்வளோ பெரிய கடுதாசி எழுதிட்டு இருக்க' என்று நீங்கள் கேட்கலாம். முன்னூற்றி சொச்சம் பக்கங்கள் பாஸு. எனக்குக் கிடைத்த பொன்னான நேரத்தை செலவழித்துப் படித்துள்ளேன், இந்த புத்தகம் படித்த நேரத்தில் வேறுசில புத்தகங்களைப் படித்திருக்கலாம். அந்த ஆதங்கம் தான் வேறு ஒன்றுமில்லை. 'புடிக்காட்டா படிக்காதே' என்று கூறிவிடாதீர்கள். என்னை போன்ற வாசகனுக்காக எழுதாமல் வேறு யாருக்காக மாய்ந்து மாய்ந்து புத்தகம் எழுதுகிறீர்கள். மற்றொன்றும் கேள்விபட்டேன் ஆயிரம் பக்கத்திற்கு மிகாமல் மற்றொரு நாவல் எழுதப் போகிறீர்களாமே, ஒருவேளை அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் ராஜீவ்காந்தி சாலையை மீண்டும் ஒருமுறை படித்துவிட்டு எழுதத் தொடங்குங்கள். 

காரணம் ஒரு புத்தகம் எப்படியெல்லாம் எழுதப்படக்கூடாது என்பதற்கான மிகச்சிறந்த படிப்பினை ராஜீவ்காந்தி சாலை என்பதைத் தவிர வேறு எந்த தாக்கத்தையும் என்னுள் ஏற்படுத்தவில்லை. ஒருவேளை சிபாரிசு செய்வதென்றால் தங்களுடைய முதல் புத்தகத்தை எழுத இருக்கும் அத்தனை நபர்களுக்கும் இந்த புத்தகத்தினை சிபாரிசுசெய்கிறேன். ஒரு கதை எப்படி இருக்கக்கூடாது என்பதற்காக. இந்தப் புத்தகத்தின் குறைகளை ஏதேனும் காபி ஷாப்பில் அமர்ந்து நிதானமாக விவாதிக்கலாம் என்றாரே சாரு, நீங்கள் சம்மதித்தால் ஏதேனும் ரோட்டோர டீக்கடையில் வைத்து விவாதிக்கக்கூட நான் தயார். அடுத்த பதிப்பிலாவது குறைகளைக் களைந்து வெளியிட வேண்டும் என்பதற்காகத்தான். காரணம் இது மிகச் சிறப்பாக வந்திருக்க வேண்டிய புத்தகம். 

இப்படிக்கு 
ராஜீவ்காந்தி சாலையில் உங்களோடு பயணித்துக் கொண்டிருக்கும் ஒரு சக பயணி
சீனு  

Friday, February 14, 2014

என் பெயர் ரங்கநாயகி!

படைப்பாக்கம் : ஆதி வெங்கட்

மீபத்தில் தான் இந்த புத்தகத்தை வாசித்தேன். தில்லி தமிழ்ச் சங்கத்தின் நூலகத்திலிருந்து என்னவர் எடுத்து வந்திருந்தார். இந்திரா செளந்தர்ராஜன் அவர்களின் நாவல் என்றால் விறுவிறுப்புக்கும் மர்மங்களுக்கும் பஞ்சமிருக்காது. ஆனால் அவர் தான் ஆத்மார்த்தமாக எழுதிய நாவல் என இந்த நூலை குறிப்பிடுகிறார். தினமணி கதிரில் 36 வாரங்களுக்கு தொடராகவும், பின்பு தொலைக்காட்சியில் இந்த நாவல் நெடுந்தொடராகவும் வந்துள்ளது.

சரி! கதைக்குள் செல்வோமா! ஆச்சாரமான வைஷ்ணவ குடும்பத்தை சுற்றித் தான் இந்த கதை உள்ளது. அனந்தபத்மநாபன் என்கிற தொழில் அதிபரின் குடும்பத்துக்கு ரங்கநாயகி அறிமுகமாகிறாள். மனைவி காலமாகிவிட்ட நிலையில் மூன்று பெண் குழந்தைகள், மற்றும் அவரது தாயார், தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் அனந்தபத்மநாபன் என்கிற .பி.என். இந்த நிலையில் தான் ரங்கநாயகி ஒரு குறிக்கோளுடன் அந்த குடும்பத்திற்கு அறிமுகமாகிறாள். அது என்ன குறிக்கோள்?

நீண்ட நாட்களாக திருமணம் கூடி வராத .பி.என் னின் தங்கைக்கு ரங்கநாயகி குடும்பத்தில் நுழைந்த வேளை நிச்சயமாகிறது. அதை தொடர்ந்து பல விபரீதங்களும் வீட்டில் நடைபெறுகிறது. மடிசார் கட்டுடன் கணவர் துபாயில் வேலைபார்ப்பதாக அறிமுகமாகும் ரங்கநாயகி ஒரு தாசியாக வெளியுலகுக்கு வேஷம் போடுகிறாள். ஆனால் அவள் ஒரு நெருப்பு என்பது உடன் பழகுபவர்களுக்கு புரிந்து விடுகிறது.

ரங்கநாயகி என்னும் புரியாத புதிருக்கான விடைகள் கதை முழுதும் தொடர்கிறது. உண்மையில் ரங்கநாயகியின் கணவர் யார்? எதற்காக இந்த வேஷம்? .பி.என் குடும்பத்தில் ரங்கநாயகி நுழைந்த காரணம் தான் என்ன? ரங்கநாயகியின் கதை என்ன? என்பது போன்ற உங்கள் கேள்விகளுக்கான விடைபுத்தகத்தில்.

இந்த புத்தகம் முழுவதும் லா.ச.ரா, ஜெயகாந்தன், பாலகுமாரன், கண்ணதாசன், தி.ஜானகிராமன், அசோகமித்திரன், மாலன், அமரர் கல்கி போன்ற மற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களில் உள்ள தனக்கு பிடித்த வரிகளை ஒவ்வொரு பகுதிக்கு முன்னும் பகிர்ந்து கொண்டுள்ளார் இந்திரா செளந்தர்ராஜன் அவர்கள். தன்னுடைய நூலில் மற்றவர்களுக்கும் ஒரு இடம் கொடுத்த்து மிகவும் சிறப்பான விஷயம் அல்லவா! அதுவும் அந்தந்த பகுதிக்கு ஏற்ற வரிகளாக!

விறுவிறுப்புக்கு பஞ்சமேயில்லாத இந்த நாவல் நடுவில் சற்று கொஞ்சம் இழுத்தடிப்பது போன்று தோன்றியது. ரங்கநாயகியின் குறிக்கோள் என்னன்னு உடனே சொல்லிட மாட்டாரா? என்று தோன்றியது. அதே போல் ரங்கநாயகி எடுத்த முடிவும், செய்த வேள்வியும் எந்த சராசரி பெண்ணாலும் செய்ய முடியாத, ஏற்க முடியாத ஒன்று எனவும் தோன்றியது. சற்றே பிசகியிருந்தாலும் வாழ்க்கையே சூன்யம் தான்.

இந்த புத்தகத்தில் எனக்கு பிடித்த சில வரிகள்:-

ஸ்ரீ உன்னை விட மாட்டேன். எதைச் சொல்லி நீ என்னை விலக்க முயல்வாயோ அதுவே இனி என் ஆடை. நீ கண்டிராத ஒரு பெண்ணை என்னில் காண்பாய். உன் மனத்தடியில் தேங்கிக் கிடக்கும் அந்த தாபம் மிகுந்த சோரப் படிமங்களை நான் வழித்தெடுப்பேன்.

நடுவில் உன் இந்திர – தந்திரங்களையும் தாங்கிச் செயலாற்றுவேன். இதற்காக யார் உதவியையும் கோர மாட்டேன். எவர் அனுதாபத்தையும் பெற முயல மாட்டேன். இது சத்தியம். இதை யதார்த்தமாகச் சொல்கிறேன். காலம் எனக்கு நிச்சயம் கருணை செய்யும். செய்தே தீரும்!

“கடவுள் பக்தி – அதன் மேலே நாம வைக்கிற நம்பிக்கை எல்லாமே அந்த க்ஷணம் பகுத்தறிவுக்காரா சொல்ற மாதிரி ஒரு பெரிய பலவீனமான விஷயமாத்தான் தோணித்து. மனுஷன் மட்டுமல்ல, தெய்வமும் சேர்ந்து ஏமாத்திடுத்துன்னு நினைச்சு அழுதப்போ ஏமார்றவா இருக்கறவரை ஏமாத்தறவாளும் இருப்பான்னு ஒரு குரல் விழுந்தது. யாரோ யார்கிட்டேயோ சொல்லிண்டு போயிண்டிருந்தா. ஆனா, எனக்குச் சொன்ன மாதிரியே பட்டுது. அந்த நிமிஷம் ஒரு சின்ன மாற்றம் மனசுல…….”

 “வாழ்க்கைங்கறது எழுத்தாளர்கள் கற்பனைல உருவாக்கற நாவலோ, இல்லை பூதாகாரப் பொய் வடிவமான சினிமாவோ இல்லை. அது யாருமே நினைச்சுப் பார்க்காத திசையிலும் மேடு பள்ளங்களிலும் நம்மை இழுத்துகிட்டுப் போற ஒண்ணு. நாமளும் அது இழுப்புக்கு போய்த்தான் தீரணும். நாவல்லயும், சினிமாவுலையும் தான் நாம விரும்புற முடிவுகள் நமக்குக் கிடைக்கும். வாழ்க்கைல அப்படிக் கிடையாது.”

இந்த புத்தகத்தை வாங்க நீங்கள் அணுக வேண்டிய முகவரி:- திருவரசு புத்தக நிலையம், 13, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை – 17. ஏப்ரல் 2001 ஆண்டு பதிப்பின் படி 248 பககங்கள் கொண்ட இதன் விலைரூ 65.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட், திருவரங்கம்.