Thursday, November 19, 2015

மலைச்சாமி - வளவ. துரையன்





கடந்த வருட சென்னைப் புத்தகச் சந்தையில் வாங்கிய புத்தகங்களில் கூடுமானவரை படித்தாயிற்று, இன்னும் சில புத்தகங்கள் கிடப்பில் இருந்தாலும் வரும் ஜனவரிக்குள் படித்துவிடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. அலுவலகப் பணி நிமித்தமாக வடபழனியிலிருந்து திருப்போரூர் வரை பேருந்தில் சென்று வர வேண்டிய சூழல். எதற்கும் இருக்கட்டுமே என்று எடுத்து வைத்துக் கொண்டு கிளம்பினேன் இந்த மலைச்சாமியை. வளவ.துரையன் என்பவர் எழுதி இருக்கிறார் இந்த மலைச்சாமியை. பின்னட்டையில் இருந்த மண் மண எழுத்துக்களை பார்த்ததுமே வாங்கிவிட்டேன். வடபழனியில் ஏறுகையில் உச்சி வெயிலின் தாக்கம் மூர்க்கமாக இருந்தது, ஏறியதோ குளிர்சாதன பேருந்து, என்னோட பிரச்சினை என்னவெனில் குளிர்சாதன வண்டிகளில் ஏறிய குறுகிய நேரத்தில் உறங்கிவிடுவேன், ஆனால் அன்றைக்கு அதிசயமாக இந்த நூலை புரட்டத் துவங்கினேன். முதல் சில பக்கங்களில் ஒருவித அயர்ச்சியை தந்தாலும் அடுத்தடுத்து விறுவிறுவென நகரத் துவங்கியது. இடையிடையே சின்ன சின்ன தொய்வுகள் வெளிப்பட்டாலும் மூடி வைக்குமளவிற்கு தூண்டவில்லை. கேளம்பாக்கத்தை சேர்கையில் கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட அத்தியாயங்களை முடித்திருந்தேன்.

எளிமையிலும் எளிமையான கதைக்களன், நான்கைந்து மனிதர்களை மையப்படுத்தி புனைந்திருக்கும் நாவல். பெரும்பாலும் எழுத்தாளர்கள்,  தாம் எப்படி வாழ்கிறோம் இல்லை எப்படி வாழ நினைக்கிறோமோ அப்படியொரு மையச்சரடை தனது நூல்களில் எங்காவது ஓரிடத்தில் புகுத்தியிருப்பர். இதில் ஏகப்பட்ட பாத்திரங்கள் அவ்வாறு புகுத்தப்பட்ட உணர்வைத் தருகிறது.

கதைச்சுருக்கம்:

ஒரு இளம்பெண் எதையோ பார்த்து பயந்து விடுகிறாள், அதனால் அவள் புத்தி பேதலிச்ச மாதிரி நடந்து கொள்கிறாள். அவளின் அப்பா குப்புசாமி, பக்கத்து ஊரில் தனியாக வாழ்ந்து வரும் தனது அம்மா மீனாட்சியம்மாவிற்கு  தகவல் அனுப்பி வரவழைத்து விசயத்தை சொல்ல, மீனாட்சியம்மா பலவித யோசனைகளுக்குப் பின் ஊருக்குப் புதிதாய் வந்திருக்கும் மலைச்சாமியிடம் காண்பிக்க வண்டி கட்டிக்கொண்டு போய் தரிசித்து வருகின்றனர்.

மலைச்சாமி சொன்னது போல் இளம்பெண் மாலதிக்கு கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வருகிறது.

இதற்கிடையே குருமணி எனும் அய்யர் தனது விருப்பபடி நடக்க பிரியப்பட்டு தனது அப்பாவிற்கு செய்ய வேண்டிய திதி சடங்குகளை தவிர்த்துவிட்டு தன் விருப்பபடி படத்திறப்பு செய்யப் போவதாகவும், அதற்கு அவர்களின் உறவுகள் எதிர்ப்பு தெரிவிப்பது போல தனியொரு பாதையில் பயணிக்கிறது.

இன்னொரு கிளைக்கதையாக முருகேசன், பெரியசாமி, சுமதி இவர்கள் சம்பந்தப்பட்ட நகர்வு. முருகேசன் பெரியசாமி இருவரும் சித்தப்பா, பெரியப்பா மக்கள். முருகேசனுக்கு பக்கத்து ஊரிலிருக்கும் சுமதியை பெண் பார்த்துவிட்டு திரும்புகையில் விபத்தில் குடும்பத்தையே பறிகொடுத்துவிட்டு முருகேசனும் பெரியசாமி இருவர் மட்டும் உயிர் பிழைக்கின்றனர். அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டு திரும்புகையில் தான் இப்படியொரு சம்பவம் நடந்தது அதனால் அப்பெண் வேண்டாம் என்று முருகேசன் தவிர்க்க, பெரியசாமியும், ஊர் நாட்டாமையும் பேசி ஒருவழியாக திருமணத்தை நடத்தி வைக்கின்றனர். நிலப் பிரச்சினை காரணமாக முருகேசன், ஊர்க்காரன் ஒருவனை கொலைசெய்துவிட்டு ஜெயிலுக்கு சென்றுவிட, அப்போது ஜெயிலுக்குள் நடக்கும் ஒரு விபத்தில் முருகேசன் இறந்துவிடுவதாய் நம்பி பெரியசாமிக்கும் சுமதிக்கும் திருமணத்தை நடத்தி வைக்கிறார் ஊர் நாட்டாமை. ஆனால் உண்மையில் இறக்காத முருகேசன் தண்டனை முடிந்து வெளியே வந்து ஊருக்கு வர எத்தனிக்கையில் நாட்டாமை கண்ணில் இவன் பட, அவர் எல்லா உண்மையையும் முருகேசனிடம் சொல்லி மன்னிப்பு கேட்டுவிட்டு இறந்துபோகிறார். தன்னால் திருமணம் புரிந்து கொண்டு வாழும் தன் தம்பியும் மனைவியும் மீண்டும் தன்னால் நிம்மதி இழக்க கூடாது என்றெண்ணி கொல்கத்தா செல்கிறான் முருகேசன். அங்கே ஒரு தமிழ் மளிகை கடைக்காரர் பார்த்து இவனுக்கு உதவி தன் வீட்டில் தங்கவைத்து வேலைகொடுக்க, கொஞ்ச நாட்கள் சென்றதும் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் முதலாளியின் மகள் இவனோடு திருட்டு உறவு கொள்ள நேரிடுகிறது. அவளும் திருமணம் முடிந்து சென்று விட, முருகேசனுக்கு தனிமையின் பிரிவும், குற்ற உணர்ச்சியும் வாட்டியெடுக்க தூரத்திலிருந்தாவது தம்பியையும் மனைவியையும் பார்த்து வருவதாக சொல்லி விடைபெற்று ஊருக்கு வந்து மலைச்சாமி ஆகிறான் பெரியசாமி.   

இதற்கெல்லாம் உச்சமாக கோபு எனும் படித்த இளம்பையன் சுலோச்சனா என்ற திருமணமான பெண்ணோடு கள்ள உறவு வைத்திருப்பதாகச் சொல்லி கதையை நகர்த்துகிறார். அந்த கள்ள உறவையும் நியாயப் படுத்த ஒரு முன்கதைச் சுருக்கம் சொல்லி படிப்பவர்களை கலங்கடிக்கிறார்.

முன் திட்டமிடலின்றி வாங்கிய பல புத்தகங்கள் இன்பஅதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றன, ஆனால் இப்புத்தகம் பேரதிர்ச்சியை தந்தது தான் மிச்சம். இந்தப் புத்தகத்தில் உள்ள சிறப்பம்சம் என்னவெனில் பல்வேறு வழிகளில் பயணித்த கதைகளை ஒருங்கிணைத்து முடித்து வைத்திருப்பது தான்.

ஒட்டுமொத்தமாக இந்த நாவலை படித்து முடிக்கையில் தொண்ணூறுகளின் தமிழ் சினிமாவை பார்த்த உணர்வை தருகிறது. மற்றபடி இந்த நாவலை வாசிப்பதினால் எவ்வித பயனுமில்லை. நேரமும், பணமும் நிறைய இருந்தால் இந்த நூலை வாங்கி வாசிக்கலாம் என்பது என்னோட தனிப்பட்ட கருத்து.   

========================================================================

மருதா பதிப்பகம்

விலை : 100/-

மொத்தப் பக்கங்கள் : 175

========================================================================

வாசித்துச் சொன்னது

அரசன்
http://www.karaiseraaalai.com/ 

Thursday, October 1, 2015

ஒரு வெயில் நேரம் - நர்சிம் (சிறு கதைகள்)


சில நாட்களுக்கு முன் எனது புத்தக அலாமரியை மேய்ந்து கொண்டிருக்கையில் கையில் சிக்கியது இந்த "ஒரு வெயில் நேரம்", எப்போது இந்நூலை வாங்கினோம் என்ற ஆச்சர்யத்துடன் எடுத்து சில பக்கங்களை புரட்டுகையில் நினைவுக்கு வந்தது. இந்த நூலை வாங்கி கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாகிறது, எப்படி தவற விட்டேன் என்கிற சிந்தனையில் படிக்கத் துவங்கினேன். அமிர்தம் சூர்யாவின் அணிந்துரையை படித்ததும் கொஞ்சம் மிகைப் படுத்தி புகழ்ந்திருப்பாரோ என்ற நினைப்புடன் வாசிக்கத் துவங்கிய என்னை, உன் நினைப்பு தவறென்றது முதல் கதை. வாசித்து முடிக்க மிகச் சரியாக இரண்டு நாட்கள் ஆனது எனக்கு, இடையிடையே நிறுத்தி நிறுத்தி தான் வாசித்தேன். ஒழுங்கான வாசிப்பாளனுக்கு ஒரு நாள் போதுமானது என்று நம்புகிறேன்.



பதினைந்துக்கும் மேற்பட்ட கதைகளால் உள்ளடங்கியிருக்கும் இந்த வெயில் நேரம் வாசிக்க வாசிக்க குளுமையாக இருக்கிறது. தன்னை கடந்து போன மனிதர்களையும், தாம் கடந்து வந்த மனிதர்களையும் அவர்தம் வாழ்வியலையும் கதைக்களனாக தேர்ந்தெடுத்து மிகச் சிறப்பாக செய்து முடித்திருக்கிறார் திரு. நர்சிம். ஒவ்வொரு கதைக்குப் பின் ஒரு அழுத்தமான வலி இருக்கிறது. சிலவற்றை படித்து அறிந்து கொள்ள முடிகிறது, இன்னும் சிலவற்றை உணரவும் முடிகிறது.

வாசிப்பாளனையும் கதையின் பங்குதாரியாக ஆக்குவதில் இருக்கிறது கதையாளனின் வெற்றி, அது நர்சிமுக்கு மிக அழகாய் கை கூடி வருகிறது. இந்த தொகுப்பிலுள்ள எந்த கதையிலும் இலகுவாய் நம்மை இணைத்துக் கொள்ள முடிகிறது. வாசகனை ஒரு எல்லைக்குள் நிறுத்தி வைத்து கதை சொல்கிறேன் என்று வகுப்பெடுக்காமல் எவ்வித சிக்கலுமில்லாமல் கதைக்குள் புகுத்தி கதை சொல்வது புது இரகம். ஒரு நாவலுக்கான கருவை சுமந்து நிற்கின்றன இவரது ஒவ்வொரு கதைகளும்.

இத்தொகுப்பில் என்னை பெரிதும் ஈர்த்தது என்றால் 'புளிக்காரக்கா' கதை தான், காதலியோடும், அவளின் அம்மாவோடும் நிகழ்த்தும் காதலன் ஒருவனின் காம களியாட்டம், அக்கதையை வாசித்து முடிக்கையில், உச்சிக்கிளையில் ஏறி காலின் பெருவிரலால் அழுத்தி புளியை உலுக்கும் அந்த உதறலை நமக்கும் வரவைக்கிறது. அந்த நடுக்கம் குறைய சில நாட்கள் தேவையாய் இருக்கிறது.

 'அம்பத்தாறு' கதையில் கிராமத்து ஆணின் மனதுக்குள் ஒளித்து வைத்திருக்கும் வன்மத்தை வெளிச்சம் போட்டு காட்டுகையில் மனது பக்கென்று அடித்துக் கொள்கிறது, வாழையடி வாழை கதையில் இறப்பினை வைத்து ஒருத்தன் கொண்டாடுவதும், ஒருத்தன் அதை துக்கமாய் அனுஷ்டிப்பதுமாக இருவேறு மன நிலையை அவ்வளவு நேர்த்தியாக சொல்லியிருப்பார்.

'மதுரம்' கதையில் வரும் தங்கைய்யா போன்று ஊருக்கு ஒன்றேனும் இருப்பர், அப்படி ஒரு மனிதரோடு கொஞ்ச நாள் நானும் பழகி இருக்கேன் என்பதினால் இக்கதை மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தங்கைய்யா இறந்த பின்பு அவரின் பெட்டியில் இருந்து எடுக்கப்பட்ட காதல் கடிதத்தை வாசித்த எவராலும் அவ்வளவு எளிதில் மறக்கமுடியாது அந்த சோக சுரத்தை!

உச்சமாக 'வேப்பம் பழங்கள்' கதையில் வரும் பழனி செய்யும் செயல் நெஞ்சை பிசைந்தாலும் தன்னால் இல்லறத்தில் ஈடுபடமுடியாமல் தன்னோட தந்தையிடம் கதறுகையில் பழனி மேல் வரும் மரியாதை கலந்த அனுதாபத்தை கண்டு  பிரமித்து நிற்கையில், அவரின் அப்பா தரும் அதிர்ச்சியை பழனி மட்டுமல்ல வாசிக்கும் நம்மாலும் தாங்கி கொள்ள இயலாத பெருஞ்சுமை.

இன்னொன்றையும் சொல்லியாகவேண்டும், அது என்னவெனில் சில கதைகளை வாசிக்க கொஞ்சம் அதீத கவனம் தேவையாய் இருக்கிறது. அவ்வளவு எளிதில் சில கதைகளை புரிந்து கொள்ள இயலாமல் வாசகர்கள் தடுமாறலாம் என்பது எனது கருத்து. இந்த "ஒரு வெயில் நேரம்" வாசிக்கையில் நிச்சயம் ஒரு மழை நேரமாக நம்முள் படரக் கூடிய வல்லமை கொண்டுள்ளது, நேரம் கிடைக்கையில் வாசிக்க மறந்து விட வேண்டாம்.

இந்த நூலைப் பற்றியும், திரு. நர்சிம் அவர்களைப் பற்றியும் இணையத்தில் துழாவிப் பார்த்துவிட்டேன் ஒன்றும் கிடைக்க வில்லை, உங்களுக்கு யாரேனும் தகவல் தெரிந்தால் கருத்துரையில் மறக்காமல் தெரிவித்து செல்லுங்கள்.

--------------------------------------------------------------------------

பதிப்பகம்: பட்டாம்பூச்சி
                      28/A, கிருஷ்ணன் கோயில் தெரு,
                      ஆழ்வார் திருநகர்,
                      சென்னை - 600 087.
                      mobile: 9841003366

பக்கங்கள் : 112

விலை : ரூபாய் 50/-

--------------------------------------------------------------------------

வாசித்து எழுதியது

அரசன்
http://www.karaiseraaalai.com/

Sunday, September 27, 2015

கீதாரி - சு. தமிழ்ச் செல்வி


மீபத்தில் வாசித்த புத்தகங்களில் மிகப்பெரும் அதிர்வை தந்த புத்தகமிது, இயக்குனர் சமுத்திரகனி “கிட்ணா” எனும் பெயரில் திரைப்படம் எடுப்பதாகவும், அது சு. தமிழ்ச்செல்வி அவர்கள் எழுதிய “கீதாரி” எனும் நாவலை தழுவியக் கதை என்றும் எங்கேயோ வாசித்த செய்தியை மனதில் வைத்திருந்து தான் கடந்த புத்தகச் சந்தையில் இப்புத்தகத்தை தேடிப்பிடித்து வாங்கினேன். இப்புத்தகத்தை தேடிய கதை மிக சுவாரசியமானது, அதைப் பற்றி வேறொரு பதிவில் விரிவாக காண்போம்!




ஒரு புத்தகத்தை வாசிக்க துவங்குமுன், அப்புத்தகம் பற்றிய சின்ன மதிப்பிடலோடு தான் துவங்குவேன், பெரும்பாலும் என் மதிப்பிடலோடு ஒத்திருக்கும், சில புத்தகங்கள் நேரெதிராக அமைந்துவிடும். கீதாரி என் மதிப்பீட்டோடு நூறு சதவீதம் ஒத்திருந்தது. இப்புத்தகம் எனக்குப் பிடித்துப் போக முக்கிய காரணம் ஒன்றும் இருக்கிறது, இராமநாதபுரம் பகுதியிலிருந்து எங்களது பகுதி கிராமங்களுக்கு கிடை போடுவதற்கு வருடா வருடம் ஒரு இடையர்கள் குழு வரும் அதிலொரு ஆடு மேய்க்கும் பையன் எங்களது கூட்டாளிகளுள் ஒருவனாக இருந்தான், அதன்பொருட்டு அவன் படும் இன்னல்களை அவ்வபோது சிரிப்பினூடே சொல்ல கேட்டிருக்கிறோம் என்பதினால் கதையும், கதை மாந்தர்களும் அவர்களின் வாழ்வியலும் சற்று பரிச்சயம்!

வாழ்க்கையில் எதுவுமே அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது அதற்கான கடின உழைப்பு தேவை என்பது எவ்வளவு சத்தியமான உண்மையோ அதைவிட இருமடங்கு கடின உழைப்பை தந்து தங்களது தினசரி  வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் கூட்டம் தான் இந்த இடையர்களின் கூட்டம். ஒருபக்கம் இரவினில் ஆட்டுக்கு காவல், இன்னொரு பக்கம் கிடை போட்டிருக்கும் நிலத்துக்காரர்கள் பணம் கொடுக்காமல் இழுத்தடிக்கும் இன்னல்கள், நிலையற்ற இருப்பிடமற்று ஒவ்வொரு ஊராய் ஆட்டு மந்தைகளோடு மந்தைகளாக பண்ட பாத்திரங்களை தூக்கிக் கொண்டு திரியும் பெண்கள் இப்படி அவர்களின் வாழ்வியலே கோரமானதாகத் தான் இருக்கிறது.


ஓய்வு என்பதே இல்லை என்றாகிப் போன வாழ்க்கையை நம்மால் நினைத்துப் பார்க்க இயலுமா? ஆனால் அவர்கள் அப்படித்தான் வாழ்ந்து வருகிறார்கள். கொஞ்சமும் சளைக்காமல் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிக்க தயாராக இருக்கிறார்கள். யாரிடமும் எதிர்த்துப் பேசுவதில்லை, எல்லோரிடமும் பணிந்து தான் வாழ்ந்து வருகிறார்கள். 

நாவலின் சுருக்கம்:

இராமு கீதாரி தனது மனைவி இருளாயி, மகள் முத்தம்மா, வெள்ளைச்சாமி எனும் வளர்ப்பு பையனோடு வளசையில் இருக்கையில் ஒரு மழை இரவினில் வந்து கரிச்சா, வெள்ளச்சி எனும் இரட்டைப் பெண் பிள்ளைகளை பெற்றெடுக்கிறாள் மனம் பிறழ்ந்த பெண்ணொருத்தி. அடுத்த நாள் காலையில் ஊராரை கூப்பிட்டு தகவலை கூறினால் ஊரினர் எங்கு நம்ம தலையில் விடிந்து விடுமோ என்று எண்ணி நழுவ முயல, கஷ்டத்தோடு கஷ்டமாக நானே ஒரு குழந்தையை வளர்த்துக் கொள்கிறேன் என்று இராமு கீதாரி சொல்லவும், ஊரின் பெரும் புள்ளியான சாம்பசிவம் இன்னொரு குழந்தையை நான் எடுத்து வளர்க்கிறேன் என்று சொல்லி இப்போது என்னால் குழந்தையை எடுத்துச் செல்ல இயலாது எனவும் சில வருடங்கள் கழித்து வந்து வாங்கி கொள்வதாகவும் சொல்லி செல்கிறார். 

சொன்ன படியே சிறிது வருடங்கள் கழிந்து இரண்டில் ஒன்றை வாங்கி கொண்டு செல்லும் சாம்பசிவம் அப்பெண்ணை வீட்டு வேலை செய்ய சொல்லி துன்புறுத்தி வளர்க்கிறார். 

கரிச்சா , வெள்ளையனோடு உதவியாக வளசையில் இருக்கிறாள், வளர்ந்து பெரியவள் ஆனதும் பெண் பார்க்க வரும் கூட்டத்தினர் வெள்ளையனையும், கரிச்சாவையும் இணைத்து வைத்து தவறாக பேசிவிட ராமு கீதாரி இருவருக்கும் திருமணம் செய்து வைத்து இருவரையும் தனி வளசை போட்டுக் கொண்டு இருக்குமாறு பணித்துவிட்டு தன்னோட மகள் மருமகனோடு இணைந்து கொள்கிறார்.

அந்தப் பக்கம் உன்னோட அண்ணனே உன் தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்கும் போது என்னோட இருப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று சாம்பசிவம் வெள்ளச்சியை பாலியல் ரீதியாக துன்புறுத்தவும் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிடுகிறாள். 

ஆரம்பத்தில் ஒரு சுணக்கம் இருந்தாலும் கரிச்சாவும், வெள்ளைச் சாமியும் குழந்தை இல்லை என்கிற கவலையை தவிர்த்து எவ்வித சிக்கலுமின்றி வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். சரியான மேய்ச்சல் நிலமின்மையால் இன்னொரு பகுதிக்கு நகரும் நிலை நேரிடுகிறது, அங்கு சிறுவயதில் பிரிந்த தனது அண்ணனை சந்திக்கிறான் வெள்ளையன், அதன்பிறகு குழந்தையின்மையை காரணம் காட்டி கரிச்சாவை விரட்டிவிட்டு தனது தங்கச்சியை திருமணம் செய்து வைக்க அண்ணனின் மனைவி முடிவு செய்து அதன்படியே காய் நகர்த்தவும், 

தன் மேல் உயிரையே வைத்திருந்த வெள்ளையன் இப்படி மனம் மாறிவிட்டானே என்று வருந்தி அவனைப் பிரிந்து ராமு கீதாரியிடம் வந்து சேர்கிறாள் கரிச்சா. ராமு கீதாரியோ பயங்கர பண நெருக்கடியில் இருக்கிறார். வெள்ளையனிடம் தனயே சென்று எடுத்து சொல்லியும் அவன் கேட்காமல் போனதில் ரொம்ப மன வருத்தத்தில் அவனை சபித்து விட்டு வந்துவிடுகிறார் ராமு. வெள்ளையன் திருமணம் ஏதோ காரணத்தினால் நின்று விட்டாலும் கரிச்சாவை மட்டும் மீண்டும் அழைக்க வரவே இல்லை. 

வெள்ளையனை பிரிந்து வந்த சில நாட்களிலே அவள் கருவுற்றிருப்பதை அறிகிறாள், ஆனால் வெள்ளையனிடம் போகாமல் தானே சுயமாக நிற்கவேண்டும் என்ற வைராக்கியத்தில் ஆடுகளை பிடித்துக் கொடுக்க சொல்லி வளர்க்கிறாள், குழந்தை பிறந்து வெள்ளைசாமியோடு சேர்ந்தாளா இல்லையா ? என்பது நாவலின் முடிவு ...

*********

அண்ணனாய் இருந்து வளர்த்தவனே கரிச்சாவை திருமணம் செய்து கொள்வது, வாசிக்கையில் மனதுக்கு ஒப்பாமல் இருந்தாலும் யதார்த்தம் அதுவாகத்தான் இருக்கிறது, அவர்கள் திருமணத்தின் போது கிடை ஆடுகளை பார்த்துக் கொள்வதற்கு ஆளில்லை என்பதினால் வெள்ளையன் ஆடு வளைக்க வைத்திருக்கும் கம்பை, மாப்பிள்ளைக்கு பதிலாக வைத்து திருமணம் நடத்துவது அதிர்ச்சியிலும் அதிர்ச்சி. ஆனால் அது அவர்களின் சடங்காக மதிக்கிறார்கள். இப்படி அவர்களின் தொழிலுக்கு எவ்வித பாதிப்புமின்றி தான் தங்களது விசேசங்களை வடிவமைத்துக் கொள்கின்றனர்.

சமுத்திரகனி இயக்கி நடிப்பதாக சொல்லும் 'கிட்ணா' எனும் அந்தப் படம் எப்போது வருமென்ற ஆவல் மேலோங்கி இருக்கிறது. ஆனால் இன்னொரு கவலையும் மனதைப் பிசைந்துக் கொண்டிருக்கிறது, அது என்னவெனில், நாவலைத் தழுவி படமெடுக்கிறேன் என்று வரிந்து கட்டிக் கொண்டு இறங்கிய ஒரு சிலரைத் தவிர, பலரும் சொதப்பி இருக்கிறார்கள். அப்படி ஏதும் இக்கதைக்கு நேர்ந்துவிடக் கூடாது என்று இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

இந்த நாவலை வாசித்து முடிக்கையில், நாமெல்லாம் சொகுசிலும் சொகுசான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு அதிலும் எண்ணற்ற குறைகளை கூறிக்கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்று உணர்ந்து கொண்டேன். ஆங்காங்கே டாக்குமென்ட்ரி உணர்வு எட்டிப் பார்த்தாலும் அது அவர்களின் வாழ்வியலை வரலாற்றில் செய்யும் பதிவாக நினைத்து கடந்து வந்தேன். நிச்சயமாய் இந்த நூல் என்னளவில் முழுமையான ஒரு நாவல் கட்டமைப்பு தான். இன்றைய விரைவான வாசகத் தோழர்களுக்கு இது பிடிக்குமா என்பது சற்று சந்தேகம் தான். வாசித்தே ஆக வேண்டிய வகையறா புத்தகமிது, தவறவிடாதீர் ....

*********************************************************************************

மொத்தப் பக்கங்கள் : 175

விலை : ரூபாய் 75/-

பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிட்


*********************************************************************************


வாசித்து எழுதியது

அரசன்
http://www.karaiseraaalai.com/

Sunday, September 6, 2015

நினைவுதிர்காலம் - யுவன் சந்திரசேகர்




நாதஸ்வர வித்வான் மகாலிங்கம் அவர்களைசெய்தியாளர் சரவணன் கண்ட பேட்டி ஆங்கில இதழ் ஒன்றில் வெளியானது. அதன்தமிழ்வடிவம்இது.

திருவேங்கடம் நாதஸ்வர வித்வான் மகாலிங்கம் அவர்களை சந்திக்கச் சென்றிருந்தேன்என்னை அவரது அறையில் காத்திருக்கச் சொல்லிவிட்டுச் சென்றார்மனைவியின் மறைவிற்குப்பின் ஒருதோட்டத்து வீட்டில் தனியாக வசிப்பதாக அறிந்திருந்தேன்அவரது அறையில் இசை சம்மந்தப்பட்ட விஷயங்கள் இருக்குமென நினைத்திருந்த எனக்கு பெரும் ஏமாற்றம்அறை முழுவதும் புத்தகங்கள்அவருக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கமுண்டு என்பது இதுவரை நான் கேள்விப்படாததுபல்வேறுவகையான புத்தகங்களை மிகவும் நேர்த்தியாக வகைப்படுத்திவைத்திருந்தார்சாய்வு நாற்காலியின் மேல் யுவன்சந்திரசேகரின் 'நினைவுதிர்காலம்' புத்தகம் கவிழ்ந்தபடியிருந்ததுஅருகே ஒரு பென்சில்அவர் எவ்வாறு குறிப்பெடுப்பார் என்ற ஆவல் மேலிட புத்தகத்தின் அருகே செல்லவும் அவர் உள்ளே நுழையவும் சரியாக இருந்ததுகையில் தேநீருடன் இன்முகத்துடன் என்னை நோக்கிவந்தார். மாபெரும் கலைஞன் எனக்காக அவரே தேநீர் எடுத்து வந்தது வியப்பில் ஆழ்த்தியது.

உங்களுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் உண்டா’ என்றேன் வெகுளியாக.

சிரித்தார்.

இசை பற்றி பேச ஆரம்பிக்கும் முன் உங்கள் புத்தக வாசிப்பைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். நானும் ஒரு புத்தக விரும்பி என்பதால் இப்படி. உங்களுக்கு விருப்பம் இருந்தால் சிறிதுநேரம் அது குறித்து பேசலாம்

'நானும் ஒரு புத்தக விரும்பி எனும் போது அதைப்பற்றி பேச என்ன கசக்கவாபோகின்றது? இன்று முழுவதும் புத்தகம் குறித்து மட்டுமே கூட பேசத்தயார்' என்றபடி சிரித்தார்அதேசிரிப்பு.

'இசை குறித்து பேசுவதற்கு குறிப்பெடுத்திருந்தேன். திடீரென புத்தகம் என்றவுடன் எதுவும் தோன்றவில்லை. தற்போது என்னவாசித்துக்கொண்டிருக்கிறீர்கள்?'

'யுவன்சந்திரசேகர் எழுதிய நினைவுதிர்காலம்’. இசை குறித்து இப்படி ஒரு புதினம் வெளிவந்திருப்பதை வெகுகாலம் அறியாமல் இருந்திருக்கிறேன். அற்புதமானநாவல்'

'எனக்கும் ஓரளவிற்குதான் இலக்கியப் பரிட்சயம். யுவனின் எழுத்துகள் எதையுமே வாசித்ததில்லை. அவர்பற்றி கூறுங்களேன்'

'சொன்னால் நம்பமாட்டீர்கள். யுவனின் எழுத்தை நானும் இப்போதுதான் வாசிக்கிறேன். இதுதான் நான் வாசிக்கும் அவரின் முதல் நாவல். வாசிக்க ஆரம்பித்த ஓரிரு பக்கங்களில் யுவனை வெகுவாய் பிடித்துவிட்டது. கவிதை, சிறுகதை, நாவல் என தொடர்ந்து சிறப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும் இவர் இலக்கியப்பரப்பில் பிரசித்திபெறாமல் இருப்பது வருத்தமேஅவருக்கு விளம்பரம் பிடிக்காமலிருக்கலாம். ஆனால் அவரைப் படித்தவர்களாவது அவர்குறித்து பேசவேண்டாமா?நீங்களும் இசைப்பிரியன் என்பதால் உங்களுக்கும் நினைவுதிர்காலம்’ நாவலைப் பரிந்துரைக்கிறேன்கட்டாயம் படித்துப்பாருங்கள்அவரது எல்லா படைப்புகளையும் நண்பரிடம் அனுப்பித் தரச் சொல்லிக்கேட்டிருக்கிறேன். அடுத்த முறை சந்திக்கும்போது அவர் குறித்து விரிவாக நிச்சயம்பேசுகிறேன்'

'நினைவுதிர்காலம் நாவல் குறித்து சொல்லுங்களேன்?'

இசை குறித்து அபாரஞானம் யுவனுக்கு. இசையை ரசிக்கத் தெரிவதும் ஒருகலை தான். அது குறித்து கட்டுரை எழுதச்சொல்லிகேட்டிருக்கிறார்கள் போல. அவரோ அதை நாவல் வடிவில் கொடுத்திருக்கிறார். ஒரு நிருபர் ஒரு இசைக்கலைஞனைப் பேட்டியெடுப்பது போன்று நாவல் வடிவம். நீண்ட பேட்டிஒரு இடத்தில் கூட அது ஒரு கற்பனை என்று தோன்றாத வண்ணம் எழுதியிருக்கிறார்இசையை நேசிப்பவர்களுக்கு திறப்புகள் பல கிட்டும் வகையில் உரையாடல்கள். இசையை நேசிப்பவர்களுக்கு உத்வேகம் தரும் உரையாடல்கள்இவ்வளவு நாள் நாம் கேட்டுக்கொண்டிருந்தது இசையா என்ற கேள்வியை இளைஞர்கள் மனதில் தோன்றச் செய்யும்இசைக் கற்றுக்கொள்ள விரும்புவர்கள் அதற்கு எவ்வளவு முக்கியத்துவமும் உழைப்பும் தர வேண்டுமென்பதை வலியுறுத்தவும் செய்யும் .இசைக்கு அவர் செய்திருக்கும் மிகப் பெரிய பங்களிப்பு இந்நாவல்'

மற்றொரு அறையில் தொலைபேசி அழைக்கும் சப்தம் கேட்டது. ஒரு நிமிடம் என்று செய்கை காட்டி விட்டு எழுந்து சென்றார். யுவனின் 'நினைவுதிர்காலம்' நாவலைக் கையிலெடுத்து புரட்டிப் பார்த்தேன்.

=============================================================================================
காலச்சுவடுபதிப்பகம் | விலைரூ. 230/-
=============================================================================================


வாசித்துச் சொன்னவர்,

திரு. த. ராஜன் 


Monday, August 31, 2015

"எங் கதெ" (நாவல்) - இமையம்




இதற்கு முன்னரே வீடியோ மாரியம்மன் என்ற நூலின் வாயிலாக எழுத்தாளர் இமையத்தைப்  பற்றி அறிந்திருந்தாலும், அதன் பிறகு வாங்கிய "ஆறுமுகம்" என்ற நூலை வாசிக்காமல் கிடப்பில் போட்டிருந்தமையால் , இமையத்தின் புதிய வெளியீடான "எங் கதெ" நாவலை வாங்குவதில் சற்று தயக்கம் காட்டினேன், ஒருநாள் சந்திப்பின் போது, "தலைவரே, "எங் கதெ" வாங்கிட்டிங்களா? எல்லோரும் நல்லாருக்குன்னு சொல்றாங்க, நீங்க வாங்கவில்லை என்றால் நான் வாங்குகிறேன்" என்று சொன்ன தோழர் சீனுவை சாந்தப்படுத்தி, நான் வாங்கிவிடுகிறேன் என்று சொல்லி, அதே வாரத்தின் இறுதியில் டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கி வந்தேன்! அதன் பிறகு சில நாட்கள் கழித்து, எழுத்தாளர் அபிலாஷ், இந்து தமிழ் நாளிதழில் இந்தப் புத்தகத்தைப் பற்றி சிலாகித்து ஒரு கட்டுரை எழுதி இருந்ததை படித்ததும், வாசித்துக் கொண்டிருந்த ஒரு நூலை மூடி வைத்துவிட்டு, அந்த வெற்றிடத்திற்குள் இந்த  "எங் கதெ" யை புகுத்திக் கொண்டேன். நண்பனை சந்திக்க கோயம்பேடு பேருந்து நிலையம் சென்றிருந்தேன், அவன் வர தாமதமாகும் என்று தெரிந்ததும், வசதியான இருக்கையாய் பார்த்து அமர்ந்து இந்நூலை வாசிக்க துவங்கினேன். அந்த நண்பர் வருவதற்குள் நூலில் பாதியை வாசித்து முடித்திருந்தேன். நூலின் நகர்வு அவ்வளவு விறுவிறுப்பு! சரி வாருங்கள் கதைக்குள் செல்வோம்!

பொதுவாக அடுத்தவர்களின் அந்தரங்கங்களை அறிந்து கொள்வதில் இருக்கும் அலாதி வேறெதிலும் இருக்காது, அப்படியொரு தீவிரம் காட்டுவார்கள் நம்மவர்கள், இந்த நம்மவர்களில் அடியேனும் அடக்கம்! அப்படியான ஒரு தனி நபரின் அந்தரங்கம் தான் கதையே! முதல் நான்கு பக்கங்களை வாசித்தாலே போதும் கதையின் வடிவத்தை யூகித்து விடலாம். சில நேரங்களில் கதையின் விறு விறு நகர்வை வட்டார எழுத்து நடை சிதைத்து படிக்கிற ஆர்வத்தை குறைத்து விடும். அப்படியொரு நாவல் ஒன்று எனது புத்தக அடுக்கில் மூன்று வருடங்களாக தூங்கி கொண்டிருக்கிறது. நல்லவேளை அம்மாதிரியான சிக்கல் இந்த புத்தகத்திற்கு இல்லை. கடலூர் வட்டார வழக்கில் புனையப் பட்டிருந்தாலும் வாசிப்பதற்கான சிக்கல்கள் ஏதுமில்லை!

விபத்தில் கணவனை இழந்துவிட, அரசின் அனுதாபத்தில் கணவனின் அரசாங்க வேலை மனைவிக்கு கிட்ட, தன் இரட்டைப் பெண் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தன் ஊரிலிருந்து வேறொரு கிராமத்திற்கு அரசுப் பள்ளிக்கு வருகிறாள் கமலா! ஊரிலிருக்கும் இளசிலிருந்து, பெருசு வரை எல்லோரும் அவளின் கவனத்தை ஈர்க்க படாத பாடுபட , அதே ஊரில் படித்துவிட்டு வேலை கிட்டாமல், முயன்று கொண்டிருக்கும் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த இக்கதையின் நாயகனுக்கு கிட்டுகிறது. அதன்பின்பு குடும்பத்தை மறந்து, தங்கைகளை மறந்து, ஊரார்களை மறந்து, கடைசியில் தன்னை மறந்து இறுதியாக என்னவாகிறான் என்பதே மொத்தக் கதை. இம்மாதிரியான கதைகளையும், நிகழ்வுகளையும் அதைச்செய்யும் மாந்தர்களையும் நேரிடையாக பார்த்து வளர்ந்த சூழல் கொண்ட எனக்கு, இக்கதை பெருத்த அதிர்வை கொடுக்கவில்லை என்றாலும், உணர்வுகள் ததும்பிய எழுத்து நகர்வு மனக் கிளர்ச்சியை தூண்டுகிறது.

அச்சை வைத்து இயங்கும் சக்கரத்தைப் போல, கமலாவை சுற்றி தான் கதை நகர்கிறது. தன்னோட 28 வது வயதில் அவளிடம் தன்னை தொலைக்கிறான், 38 வயதில் தெளிவு பெறுவதாக முடித்திருக்கிறார். கமலாவை மிகத் தெளிவான பாத்திரமாக புனைந்து, அவளின் காலில் விழுந்து கிடக்கும் நாயை போல நாயகனை புனைந்திருப்பது அதகளம்! தனக்கே தனக்கு சொந்தமாக இருந்தவள் திடீரென பணி இடமாறுதலாகி போன இடத்தில் வேறொருவனிடம் வழிவதாக அமைத்து, இவனின் நிலை என்ன? இத்துணை வருடங்களாக என்னவாக இருந்தோம் என்ற சுய புரிதலை துவக்கி வைப்பது தான் எதார்த்தத்தின் உச்சம்!

ஓரிடத்தில் அவன் என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான், அவனுக்கு குடும்பத்திலும், சமூகத்திலும் என்ன மாதிரியான அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்பதை தெரிய வைக்க, ஒரு நிகழ்வை சொல்லியிருப்பார். அதுதான் என்னைக் கவர்ந்த அம்சம். கமலாவிடம் அவமானப் பட்டு, அதன் விரக்தியில் வந்து வீட்டின் கொட்டகை கட்டிலில் குப்புற கிடக்கையில், ஊரிலிருந்து வந்திருந்த தங்கச்சிகளின் பிள்ளைகள் வந்து பொங்கல் காசு கொடு மாமா என்று கேட்கையில் பாக்கெட்டில் பத்து பைசா இல்லாமல் அவன் தவிக்கும் தவிப்பைக் கண்டு பசங்களை விரட்டிவிட்டு அவனின் அம்மா பாக்கெட்டில் பணம் வைப்பதும், அவனின் தங்கைகள் சும்மா பாக்கெட்டை செக் செய்வது போல் ஆளுக்கு கொஞ்சம் பணம் வைப்பது போல் வைத்து அந்தக் காட்சி கண்ணெதிரே வந்துப் போகுமளவிற்கு எழுத்தில் அனல் காட்டியிருப்பார் திரு. இமயம்.

ஊடாக, கமலாவின் கணவன் பின்புலத்தையும், அவரின் போராட்ட மனப்பான்மை பற்றியும், இவனை சித்தப்பா பையன் ஒருவனைக் கொண்டு இவனின் செய்கைகளை எடுத்துரைத்து இதெல்லாம் தவறு என்று சொல்வதாகவும், எல்லாவற்றிற்கும் ஒரே பதிலாக நான் கமலா எனும் கடலினும் விழுந்து கிடக்கிறேன், தப்பென்று தெரிந்தும் அதிலிருந்து மீள மனமில்லாமல் கிடக்கும் ஒருத்தனின் வாழ்வை சினிமாவாக கண்ட திருப்தியை கொடுக்கும் இந்த நாவலை வாசித்து முடித்தால்!

இந்த மாதிரியான வகையறா கதைகளுக்கு முடிவு என்னவாக இருக்குமென்று யூகித்திருந்தாலும் கதையின் நகர்வு அதை மறைத்து விடுகிறது. தான் சொல்ல வந்ததை அறுபது எழுபது பக்கங்களில் சொல்லிவிட்டாலும், சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே பக்கங்களை இழுத்தது சற்று இழுவையாக இருந்தது. இப்படி சின்ன சின்ன தொய்வுகளை தவிர்த்து விட்டு பார்த்தால் இந்த "எங் கதெ"   எல்லோருக்குமான கதை தான்!

இவரின் முந்தைய படைப்பான வீடியோ மாரியம்மன் பற்றி வாசிக்க இங்கு கிளிக்கவும்

========================================================================

புத்தகத்தின் பெயர்: எங் கதெ (நாவல்)
வெளியீடு: க்ரியா
ஆண்டு: 2015
பக்கங்கள் : 110
விலை : 110/-
புத்தகம் கிடைக்கும் இடம்
க்ரியா
புது எண் 2, 17ஆவது கிழக்கு தெரு,
காமராஜர் நகர், திருவான்மியூர்,
சென்னை – 600 041,
தொலைபேசி எண் – 9445040529
மின்னஞ்சல்:  creapublishers@gmail.com
இணையதளம்: www.crea.in
========================================================================


Wednesday, August 5, 2015

காமரூப கதைகள் - சாருநிவேதிதா

டிஸ்கவரியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது ஜீரோ டிகிரியைக் கையில் எடுத்த ஆவி 'சீனு இத வாங்கிருங்க என்றார்', ஜீரோ டிகிரிக்கு பக்கத்திலேயே காமரூப கதைகளும் ஒளிந்து கொண்டிருந்தது. 'பாஸ் இதை ஏன் விட்டுடீங்க, இதையும் வாங்கிரலாமே' என்றேன். மொதல்ல இதப் படிச்சிப் பார்ப்போம் நல்லா இருந்தா அதை வாங்குவோம் என்றார். ' இல்ல பரவாயில்ல ரெண்டையும் வாங்கிருவோம். மனசு மாறிட்டா கடைசி வரைக்கும் வாங்கவே மாட்டோம்' என்றேன். 

சாருவின் பத்தி எழுத்துக்களை மட்டுமே வாசித்து வந்த எனக்கு அவருடைய நாவல்களை வாசிக்க வேண்டும் என்பது நெடுநாள் அவா. அவருடைய புதிய எக்சைலைக் கூட முன்வெளியீட்டுத் திட்டத்தின் போதே வாங்கி பத்திரமாக பூட்டி வைத்திருக்கிறேன். என்னிடம் இருக்கும் மிகப்பெரிய புத்தகமும் அதுதான். புதிய எக்சைலை படிக்கலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருந்த போதே மயிலன் ஒரு தகவல் அனுப்பி இருந்தார் 'ராசலீலா படிக்காமல் புதிய எக்சைலை படிக்க வேண்டாம்' என்று. 

டிஸ்கவரியில் முதலில் கேட்டது ராசலீலாவைத் தான், அன்றைக்கு பார்த்து ஸ்டாக் இல்லை. அதனால் காமரூப கதைகளை நானும் ஜீரோ டிகிரியை ஆவியும் வாங்கிக் கொண்டோம். 

**

ஐந்து வருடங்கள் இருக்கும். அண்ணா நகரில் புத்தகத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்த காலம். சாருவின் ஜீரோ டிகிரியை அண்ணன் வாங்கி வந்திருந்தான். அப்போது நான் சாருவை அறிந்திராத பிள்ளைப் பருவத்தில் இருந்தேன். அண்ணனோ விகடன் காலத்தில் இருந்தே சாருவின் வாசகன் என்பதால் அவரின் எழுத்துக்களில் மயங்கி ஜீரோ டிகிரியை வாங்கி இருந்தான். 

'யாரு இது புது ரைட்டரோ' 

'போடா லூஸு, இவர் எவ்ளோ பெரிய ரைட்டர் தெரியுமா. அதான் விகடன்ல கூட நிறைய எழுதி இருக்காரே'

'இல்ல நான் படிச்சது இல்லை'

'நீ எல்லாம் என்னத்த விகடன் படிச்சு கிழிச்சியோ' 

'கத, ஜோக்ஸ், ஹாய் மதன் அப்புறம் எதாவது எனக்கு புடிச்சது இருந்தா படிப்பேன், இவரோடது படிச்சது இல்ல' 

அதற்கு பின் சாருவைக் குறித்து என்ன என்னவோ கூறினான். சுவாரசியமாக எழுதுவதில் வல்லவர். அடுத்த சுஜாதா அது இது என்று. சரி இவ்ளோ விஷயம் பேசுறான், படிச்சுதான் பார்ப்போம் என்று ஜீரோ டிகிரியைக் கையில் எடுத்தேன். முதல் பக்கத்தைக் கூடத் தாண்ட முடியவில்லை. என்ன எழுதி இருக்கிறார். என்ன கூற வருகிறார் எதுவும் புரியவில்லை. 

'ஏ என்னடே புக்கு இது' 

'ஏன் என்னாச்சு'

'இத நீ தான் படிக்கணும், ஒண்ணும் வெளங்கல' 

அப்படியே நாட்கள் நகர நகர, அந்தப் புத்தகம் மேஜையிலேயே கிடக்கும். அதைப் பார்க்கும் போதெல்லாம் படிச்சியா படிச்சியா என்று கேட்பேன் 'ம்கும்' என்று தலையசைப்பான். 

ஒருநாள் என்னிடம் வந்து 'ஒருவழியா முடிச்சிட்டேன்' என்று கூறியவனை ஆச்சரியமாகப் பார்த்தேன். 

'புரிஞ்சதா'

'ம்ம் புரிஞ்சது, அது ஒரு வித்தியாசமான புக்கு. ஆனா இப்போதைக்கு அதப் படிக்காத' என்று மட்டும்  கூறினான். 

அன்றைக்கு மேஜையில் இருந்து காணாமல் போன புத்தகம் இன்றைக்கு வரைக்கும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. எங்கே ஒளித்து வைத்துள்ளான் என்பது அவனுக்குத்தான் வெளிச்சம் .      

**

காமரூப கதைகளை முதல் இணைய நாவல் என்று குறிப்பிடுகிறார் சாரு. சாரு ஆன்லைனில் அவர் எழுதிய 108 குட்டிக் கதைகளை தொகுத்து நாவல் என்ற பெயரில் உயிர்மை வெளியீடாக வந்துள்ளது. 

குட்டி என்றால் சிறிய என்றும் வல்லிய பெண்குட்டி என்று பொருள்படும். புத்தகம் முழுவதும் நீக்கமற நிறைந்திருப்பது பெண்குட்டிகள் தான். சாருவின் வாசகனாக படித்தால் கொண்டாட்டம், கலாச்சாரக் காவலராகப் படித்தால் அத்தனையும் ஆபாசம் ;-). 

சாரு ஆன்லைனை தொடர்ந்து வாசித்து வருவதால் அவருடைய எழுத்தின் ரசிகனாவதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லை. இதில் இன்னொரு ப்யூட்டி என்னவென்றால் சாரு ஆன்லைன் வாசகன் ஆவதற்கு முன்னரே சாரு விமர்சகர் வட்டத்தின் வாசகன் ஆகிவிட்டேன். அது எவ்வளவு நல்ல விஷயமென்பது காமரூப கதைகளை  படிக்கும் போதுதான் புரிந்தது. 

கண்ணாயிரம் பெருமாள், மீரா, விஷால், நிக்கி, அலெக்ஸ், ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவன், மதனா, ஷாலினி, அர்பனா, நந்தினி, ஜெஸ்சி என்ற பல பாத்திரங்களால் நிறைந்தது தான் இந்தக் குட்டிக் கதைகள். இதில் வரும் பெரும்பாலான குட்டிகளை பெருமாள் & கோ சுவைத்துள்ளார்கள் அல்லது குறைந்தபட்சம் ஓரல் செக்சாவது உண்டு. 

பெருமாள் தன்னுடைய வாழ்க்கையில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை உள்ளது உள்ளபடியாக பதிவு செய்திருக்கிறார். இதில் எந்த அளவு நிஜம் என்பது பற்றி தெரிந்துகொள்ள பெருமாளின் ரூபமான சாருவைப் பற்றி நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். முழுக்க முழுக்க குறிகளாலும் குறியீடுகளாலும் நிறைந்த புத்தகம். இந்தப் புத்தகம் எழுதிய காலகட்டத்தில் உத்தம தமிழ் எழுத்தாளன் மீது அப்படி ஒரு கோவத்தில் இருந்திருக்கிறார் போலும். இப்போது அப்படி இல்லை சக உதிரனாகி விட்டார்கள். 

பெருமாளின் வாழ்க்கை கொண்டாட்டமானது என்ற ஒற்றை வரியைத் தவிர பெருமாளைப் பற்றி தொடர்ந்து எழுவது என்னால் இயலாத காரியமாக உள்ளது. இதுதான் பெருமாள் என்று அவருடைய பிம்பத்தை என்னால் ஒரு வரையறைக்குள் கட்டமைக்க முடியவில்லை. அவருக்கு தோன்றியது அத்தனையும் நியாயம். அவர் எதிர்ப்பது அத்தனையும் அநியாயம் என்பதால் இங்கே எனக்குத் தோன்றுவது அவருக்கு எதிராகத் தோன்றிவிட்டால்!

பெருமாள் தன் வாழ்வில் நடைபெற்ற நிகழ்வுகள் மட்டும் அல்லாமல் தன்னை பாதித்த அயல் தேசத்து மனிதர்களையும் குறித்து எழுதியுள்ளார், அதில் பெரும்பாலனவர்கள் இசை சார்ந்தவர்கள். இது ஒரு இணைய நாவலாக இருவம் பெற்றது என்பதால் ஆங்காங்கு யுட்யுப் சுட்டியும் கொடுத்துள்ளார். பின்னொருநாள் அதனை சாவகாசமாக கேட்டு உய்ய வேண்டும். 

மேலும் காமரூபக் கதைகளை படிக்கும் முன் ஜீரோ டிகிரி - ராசலீலா படித்துவிடுவது உத்தமம். அவையிரண்டின் தொடர்ச்சியாகத்தான் இதப் பார்க்கமுடிகிறது. சீக்கிரம் அவற்றையும் படிக்க வேண்டும்.  

ஒவ்வொரு நாவலும் எதாவது ஒரு வாசிப்பு அனுபவத்தைத் தரும். அதில் ஒரு கதை இருக்கும். அந்தக் கதை நம்மில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இதில் என்ன கிடைத்து என்று யோசித்தால் தாக்கம் எல்லாம் எதுவும் இல்லை. ஒரு நல்லவாசிப்பு அனுபவம். என்ன இந்த நாவலை வாசிப்பதற்கு முன் சாரு விமர்சகர் வட்டத்தை ஒரு எட்டு படித்துவிடுவது நல்லது. பெருமாள் வைக்கும் குறியீடுகள் விளங்க அதை விடச் சிறந்ததொரு இடம் வேறு இல்லை :-)

இதனை நாவலாக ஏற்றுக்கொள்ள மனம் தயங்குகிறது. சாரு நினைத்ததைப் போல 108 குட்டி கதைகள் என்றே பெயர் வைத்திருக்கலாம். நாவல் என்ற அடைமொழி நெருடுகிறது. அல்லது இதனை நாவலாக ஏற்றுகொள்ள நான் இன்னும் வளர வேண்டும் போலும். 


16.05.2008 இல் இருந்து 21.12.2008 வரைக்கும் பெருமாளின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும், அதில் அவர் வைக்கும் குறியீடுகளின், அவர் திட்டிய விதத்தையும், அவர் அனுபவித்த குட்டிகளையும் அது போக அவர் ரசித்த இசையையும் குறித்து தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் துணிந்து வாசிக்கலாம். அலுப்பு தட்டாத ஒரு புத்தகம். ஒருவேளை இந்த வகையறா எழுத்து உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதையும் கேட்டுக்கொள்ள பெருமாள் இருக்கிறார். காரணம் இந்த உலகத்தில் இருக்கும் மொத்த அன்பையும் சேர்த்து தன்னை உருவாக்கிக் கொண்டதாக அவரே ஆங்காங்கு கூறியுள்ளார். ம்யு.  

Monday, July 27, 2015

ஆட்டம் - சு. வேணுகோபால்




"பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்ற பழமொழி, படைப்பாளிகளுக்கு குறிப்பாக எழுத்தாளர்களுக்கு பொருந்தவே பொருந்தாது என்பதை மிகத் தீவிரமாக நம்புகிறவன் நான், ஏனெனில் முதல் முறை சறுக்கி, பின் வீறு கொண்ட எழுந்த பலரின் எழுத்துக்களை வாசித்திருக்கிறேன். ஒரு கதையில் சொதப்பினாலும் மறு கதையின் மூலம் வாசகனின் ஆதர்சனாக முடியும் ஆகையால் ஒரு சோறு பதம் இங்கு எடுபடாது என்றே நம்புகிறேன். ஆனால் திரு. சு. வேணுகோபாலின் எழுத்தை கண்ணை மூடிக்கொண்டு சேர்த்துவிடலாம் ஒரு சோறு பதத்திற்குள். நன்றாக நினைவிருக்கிறது, சென்ற தீபாவளிக்கு முந்திய தின இரவினில் தான் திரு. சு. வேணுகோபாலின்  "திசையெல்லாம் நெருஞ்சி" என்ற நூலை வாசித்தேன், நூலை கையிலெடுத்த மூன்று மணி நேரத்திற்குள் வாசித்து முடித்துவிட்டேன். முதன் முதலில் வாசிக்கும் எவருக்கும் இவரின் எழுத்துகளை பிடித்துப் போகும் அந்தளவிற்கு விறு விறுவென நகரக் கூடிய எழுத்து.

தி. நெருஞ்சி தந்த கிறக்கத்தில், "பால் கனிகள்". "ஆட்டம்" என்று மேலும் இவரின் இரு படைப்புகளை கடந்தப் புத்தக திருவிழாவில் வாங்கி வந்திருந்தேன். அதில் "ஆட்டத்தை" வாசிக்க துவங்கினேன், ஆச்சரியம் என்னவெனில் இந்த நூலையும் ஒரே நாளில் வாசித்து முடித்தது தான். தன்னோட புத்திசாலித்தனங்களை வெளிக்கொணரும், வழியாய் புத்தகம் வெளியிடும் முறையை துவக்கியிருக்கும்  சில எழுத்தாளர்களுக்கு? மத்தியில், எவ்வித ஆடம்பரமுமின்றி, தன்னை சுற்றி நிகழ்ந்த எளிய நிகழ்வுகளையே கதைக்களனாக்கி நேர்த்தியாய் ஒரு நாவலை புனைந்திருக்கிறார் ஆசிரியர். 

சு. வே வின் படைப்பு யுக்தி ஒன்றும் புதியது என்று சொல்லிவிட முடியாது,  இவரின் படைப்புகளில் வரும் கதை மாந்தர்கள் எவரும் நம்மோடு மாறுபட்டு நிற்கவில்லை, திடீர் புத்திசாலிகளாக உருமாறி நமக்கு வகுப்பெடுப்பதுமில்லை. நம்மை விடவும் மிக எளிமையாகவே இருக்கிறார்கள், நிதர்சனத்தை துளியும் மீறுவதில்லை. கதை மாந்தர்களாக வருகிறவர்கள், கதை மாந்தர்களாகவே செல்கின்றனர். தமது பாத்திரங்கள் இயல்பினை மீறிவிடாமல் மிகத் தீவிரமாக பார்த்துக் கொள்கிறார் சு. வேணுகோபால்! இதை வைத்தே சொல்லிவிடலாம் இவருக்கு எழுத்தின் மீதுள்ள பற்றையும், காதலையும்!

கதைச்சுருக்கம்:

கபடியில் சிறந்து விளங்கிய வடிவேல், அதே ஊரை சார்ந்த கனகம் என்னும் பெண்ணை காதலிக்கிறான், இதற்கு அவனின் சக கூட்டாளிகளும் உதவுகிறார்கள், முதலில் மறுக்கும் கனகம் பிறகு ஒப்புக் கொள்கிறாள். இருவரும் வெவ்வேறு சாதியென்பதினால் ஊரை விட்டு ஓடி, பக்கத்து நகரத்தில் திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார்கள். இரண்டு பிள்ளைகளும் பிறந்து மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த வாழ்வில் திடீர் திருப்பமாக, கூட வேலை செய்யும் ஒருத்தனோடு காதல் கொள்கிறாள் கனகம், அதனையறிந்து வடிவேல் கண்டித்ததும், கள்ளக் காதலனோடு ஓடியும் விடுகிறாள். வேறுவழி தெரியாமல் மீண்டும் தான் பிறந்த கிராமத்திற்கே, தன்  பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வருகிறான் வடிவேல். அவமானம் அவனை துரத்துகிறது. பழைய படி மீண்டும் கபடி ஜெயித்து தான், பொண்டாட்டி ஏற்படுத்திய களங்கத்தை கொஞ்சமேனும் துடைக்க வீறு கொண்டு எழுகிறான், அப்படி வைராக்கியத்தோடு இருந்த வடிவேல் போட்டியில் ஜெயித்தானா ? என்பது தான் முதன்மை கதை. இதனிடையே சில கிளைக் கதைகளும் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு திருப்பத்தைக் கொடுத்தாலும் முதன்மை கதை நகர்வை துளியும் தடுக்கவில்லை.

இவரின் பலமே, எத்தனை கிளைக்கதைகளை புகுத்தினாலும் ஒவ்வொன்றுக்கும் தொடர்பிருப்பதாய் நகர்த்துவது தான். மற்றொன்று கபடி போட்டிகளின் போது நட்சத்திர வீரர், சக வீரன் கண்முன்னே வளருவதை கண்டு பொருமும் மன நிலையை அவ்வளவு நெருக்கமாய் பதிவு செய்திருப்பது. ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டவன், மனைவியும் இன்னொருவனோடு ஓடிப் போய்விடுகிறாள், தனது இரு விபரம் தெரியாத பிள்ளைகளை வைத்துக் கொண்டு அவன் படும் இன்னல்களை. மனக் குழப்பங்களை, அவமானம் தரும் வலிகளை  முடிந்தளவிற்கு பதிவு செய்திருக்கிறார் என்றே நம்புகிறேன். இறுதியாக ஒரு திருப்பத்தை தந்து முடித்திருப்பது விறுவிறுப்பு!

ஆசிரியருக்கு இந்த சித்திகளின் மீது என்ன தீரா வன்மமோ தெரியவில்லை, திசையெல்லாம் நெருஞ்சியில் சித்தி காடில்யா, வரம்பு மீறி உறவு கொள்வதாகவும் சொல்லியிருக்கிறார், அதே மாதிரி இந்த நாவலிலும் சித்தி நாகமணி என்பவள் மகன் உறவு வரும் காளையனிடம் உறவு கொள்வதாய் சித்தரித்திருக்கிறார். அவரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டினால் அவரிடம் கேட்டுவிட வேண்டுமென்ற முடிவிலிருக்கிறேன்.

இந்தப் புத்தகத்தின் அட்டைப்படமே வாங்க வேண்டுமென்ற ஆவலை தூண்டுகிறது, அந்த ஆவலை முழுமையாய் தீர்த்து வைக்கிறது உள்ளிருக்கும் எழுத்தும்.

திசையெல்லாம் நெருஞ்சி பற்றிய எனது பார்வைகளை படிக்க இங்கு செல்லுங்கள் : திசையெல்லாம் நெருஞ்சி - சு. வேணுகோபால்


=====================================================================

வெளியீடு: தமிழினி பதிப்பகம்

வருடம் : 2013 திசம்பர்

மொ . பக்கங்கள்: 120

விலை : 90/-

======================================================================       

படித்துச் சொன்னது

அரசன்
http://www.karaiseraaalai.com/
      


Sunday, July 5, 2015

கால்புழுதி - கனக தூரிகா


சென்ற புத்தக சந்தையில்  சந்தியா பதிப்பகத்தின் ஸ்டாலில் நுழைந்து மேய்ந்து கொண்டிருக்கையில் கண்ணில் பட்டது இந்த கால் புழுதி. தலைப்பின் வசீகரம் தான் வாங்க தூண்டியது, இருந்தும் ரெண்டொரு பக்கம் புரட்டுகையில் மனதுக்கு நிறைவாக இருந்தமையால் வாங்கினேன்! விறு விறுவென நகர்த்திச் செலுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி இருக்கிறார் கனகதூரிகா. ஆணை விட பெண்ணின் பார்வையில் ஒரு அழுத்தமும் அதனுள் விவரிக்க முடியாத நேசமும் பொதிந்திருக்கும் என்பதை தீவிரவாக நம்புகிறவன், ஆனால் நானறிந்தவரை சமகாலத்திய பெண் படைப்பாளிகள் என்று எடுத்துக்கொண்டால் அவர்களின் எழுத்து கடும் மூர்க்கத் தனமாக இருக்கிறது. சில கவிதாயினிகளை படித்து, வாழ்வினை நொந்த காலமெல்லாம் உண்டு. கடுமையான சொற்களின் குவியலாகவே இருக்கும் அவர்களின் கவிதைகளும், கதைகளும், எங்கு தேடி பிடிப்பார்களோ தெரியவில்லை வார்த்தைகளில் அவ்வளவு உக்கிரம் இருக்கும், துவேசம் இருக்கும். இப்படியான பலருக்கு மத்தியில் சத்தமே இல்லாமல் தனது எண்ணங்களை எளிதான வார்த்தைகளின் மூலம் மிகவும் நேர்த்தியாக பதிவு செய்து வருகின்றனர். அவ்வாறான விதிவிலக்குகளின் வரிசையில் திருமதி. கனக தூரிகாவும் வருகிறார் என்பதே நிம்மதி!



கதைச் சுருக்கம்:

பூப்பெய்துமுன்னே கோமளவேணியை வயதில் மூத்த சென்னப்பாவிற்கு திருமணம் செய்து வைத்து விடுகிறாள் அந்த கொடூரனின் அம்மா. அவனோ இரவில் வேறொருத்தியை அழைத்துக் கொண்டு வந்து திரை மறைவில் சுகம் அனுபவிப்பதும், விடிந்ததும் அவளை அனுப்பி வைத்துவிடுவது தான் அவனின் தினசரி வாடிக்கை, இப்படியிருக்க ஒருநாள் கோமளம் சமைந்து விடுகிறாள், அவனோ வேறொருத்தியை அழைத்து வருவதை நிறுத்தி விட்டு கோமளத்துடன் குடும்பத்தை செலுத்துகிறான். திடிரென ஒருநாள் இவனின் அம்மாவும் இறந்து போக, இவர்கள் இருவருமாக குடும்பம் நகர்கிறது. அடுத்த தெருவிலிருக்கும் ஒரு திருட்டு சாமியாரின் சகவாசம் இவனுக்கு கிட்ட வேலைக்கு போவதை விட்டுவிட்டு சாமியாரே கதியென்று கிடக்க, பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு கீரை அறுத்து விற்கும் வேலைக்குப் போக ஆரம்பிக்கிறாள் கோமளவேணி.

கோமளத்தின் சம்பாத்தியத்தில் கணவனை உட்கார வைத்து சோறு போடுவதில்லாமல், மூன்று பிள்ளைகளையும் பெற்று விடுகிறாள். முதல் குழந்தை பிறக்கும் நிலை, கொடுமையிலும் கொடுமை! இப்படியொரு அவலம் வேறு எவருக்கும் நேரக்கூடாது என்று மனது வேண்டுவதை தவிர்க்க முடியவில்லை! இரண்டாவது பிள்ளை ரங்கன் காதல் தோல்வியில் இறந்து விட, மூன்றாவது பையனான கண்ணனை படிக்க வைத்து, தன்னோட முதலாளி சந்திரண்ணா விடமே சம்பந்தம் பண்ணுகிறாள். அதன் பிறகு கோவை குண்டு வெடிப்பினால் கண்ணனின் பட்டறை பிழைப்பில் மண் விழ, மகனையும், மருமகளையும் வீட்டில் உட்கார வைத்துவிட்டு மீண்டும் கீரைக் கூடையை தலையில் சுமக்க துவங்குகிறாள் கோமளவேணி. பேத்தி புவனாவிற்கு வேலை கிடைத்து அவள் குடும்பத்தை நிமிர்த்தி திருமணம் செய்து கொள்வது போல் முடிகிறது.

நான் சொன்னது சுருக்கத்திலும் சுருக்கம் தான்! கதையின் நகர்வு அவ்வளவு அழகாக இருக்கிறது, குண்டு வெடிப்பு வரை கதை நகர்வதில் தொய்வில்லை, குண்டு வெடிப்பை வலிந்து திணித்த உணர்வை தந்தாலும் அதில்லாமலும் இந்த கதை நகர்வை யோசித்து பார்க்க முடியவில்லை. கோவை குண்டு வெடிப்பை மையப்படுத்தி தனியொரு நாவலாகவே எழுதி இருக்கலாம் என்ற உணர்வை தந்தது சிற்சிறு விசயங்களை சொல்லி சென்றபோது. எவ்வளவு பெரிய வலி, அதனால் பலரின் வாழ்வியலின் திசை பிறழ்வு இப்படி சொல்ல ஏராளம் இருந்தும் சொல்லாமல் சென்றது ஏமாற்றத்தை தருகிறது. சில விசயங்களை புறந்தள்ளி விட்டு, ஒட்டு மொத்தமாக "கால் புழுதி" நல்லதொரு உணர்வை தரக் கூடிய நூல் என்று சொல்லலாம்!

ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் பார்வையில் இந்தக் கதை சொல்லப் பட்டிருக்கிறது, ஒருவகையில் வாசிப்பதற்கு ஏதுவாக இருந்தாலும் வாசிக்கிற நமக்கு கதையோடு பயணிக்கிற உணர்வை ஏனோ தரவில்லை. இன்னொன்று எல்லா கதாப்பாத்திரங்களும் முடிந்த வரை தங்களை நியாயப்படுத்த பார்க்கின்றன! கோமளவேணி தந்த அழுத்தம் வேறு எந்த கதாப்பாத்திரமும் தரவில்லை, ஒருவேளை கோமளத்தை மனதில் வைத்து தான் மற்றவைகளை உருவாக்கினாரோ என்னவோ?

சட சடவென்று நகர்கிறது, உணர்வுகளிலும் குறைவின்றி சொல்லப் பட்டிருக்கும் இந்நாவலை வாய்ப்பு கிடைக்கையில் வாசித்து விடுங்கள்!

==============================================================



சந்தியா பதிப்பகம்

புதிய எண் 77, 53 வது தெரு


9 வது அவென்யு, அசோக் நகர்


சென்னை 600 083


044.24896979

மொத்த பக்கங்கள்- 120

விலை: Rs. 75/-
===============================================================


படித்துச் சொன்னது 

அரசன் 
karaiseraaalai.com

Wednesday, June 24, 2015

லாக்கப் - மு.சந்திரகுமார் ; விசாரணை - வெற்றிமாறன்

நீங்கள் நான் மற்றும் நம் நண்பர்கள் நால்வருமாக ஆந்திராவில் ஒரு பிளாட்பார்மில் வசிக்கிறோம். உங்களுக்கும் எனக்கும் சுத்தமாக தெலுங்கு தெரியாது. புரியும். மற்ற இருவரும் ஓரளவிற்கு தெலுங்கில் கெட்டி. பகல் முழுவதும் கிடைக்கின்ற வேலை. இரவில் அலுப்பு தீர கொஞ்சம் கட்டிங். ரொம்பவே போரடித்தால் சினிமா. இதில் நம் நண்பர் நெல்சன் மட்டும் தீவிர சினிமா பைத்தியம். தினம் ஒரு சினிமா பார்த்தே ஆக வேண்டும். அப்படியொரு இரவில் சினிமா பார்க்கச் சென்ற நெல்சன் திரும்பி வராமல்போக எதிர்பாராத விதமாக அடுத்தநாள் உங்களைத் தேடி போலீஸ் வருகிறது. தெரியாத ஊர். தெரியாத பாசை. தெரியாத நபர்கள். கைது செய்தே ஆகவேண்டும் என்ற முடிவில் வரும் போலீசார். எப்படிப் புரிய வைப்பீர்கள் நீங்கள் குற்றவாளி இல்லை என்று. 



ஒருநிமிஷம்! நீங்கள் குற்றவாளி இல்லையென நிருபிக்கும் முன் 'நீங்கள் செய்த குற்றம் என்ன எனத் தெரிந்து கொள்வது அவசியமில்லையா?' அந்த உரிமைகூட மறுக்கப்பட்டு இழுத்துச் செல்லப்படுகிறீர்கள். சிறிய பத்துக்குப் பத்து அறையில் அடைக்கப்டுகிறீர்கள். ஏற்கனவே அங்கே அனுபவஸ்தர்கள் ஐந்து பேர் இருக்கிறார்கள். இப்படித்தான் ஆரம்பமாகிறது லாக்கப் நாவல். 

குமார், ரவி, மொய்தீன், நெல்சன் - இவர்கள்தான் அந்த நால்வர்கள். இரவுக் காட்சி முடிந்து திரும்பிக்கொண்டிருந்த நெல்சனை சந்தேகத்தின் பேரில் விசாரிக்கும் ஆந்திரப் போலீஸிடம் மொழி புரியாமல் தடுமாறுகிறான் நெல்சன். மேலும் அவர்கள் எதையோ கேட்க இவன் வேறு எதையோ அரைகுறையாகப் புரிந்துகொண்டு மண்டையை ஆட்டுகிறான். நெல்சனிடம் இருந்து வரும் முன்னுக்குப் பின்னான பதில்களால் விசாரணைக்கு இழுத்துச் செல்கிறது போலீஸ். பயத்தில் தன் நண்பர்கள் என குமார் ரவி மொய்தீனை அடையாளம் காட்ட போலீஸ் அவர்களையும் விசாரணைக்கு இழுத்து வருகிறது. எலக்ட்ரிகல் கடை ஒன்றில் நடைபெற்ற திருட்டுக்கு இவர்களை பலியாடாக்குகிறது. செய்யாத குற்றத்தை எப்படி ஒப்புகொள்வது. இவர்கள் நால்வரும் மாறுகிறார்கள். குற்றத்தை ஒப்புக்கொள்ள வைப்பதற்கான விசாரணை தொடங்குகிறது. 

இங்கிருந்து நாவல் முழுவதுமே கொஞ்சம் அழுத்தமாக நகரக்கூடிய சம்பவங்களைக் கொண்டதாக உள்ளது. பத்துக்குப் பத்து அறையில் இவர்கள் படும் அவஸ்தைகள், ஒரேயொரு வேளை மட்டுமே கிடைக்கக்கூடிய கேவலமான உணவு, ஏற்கனவே அங்கு தங்கியிருக்கும் அனுபவஸ்தர்கள் பட்ட, பட்டுகொண்டிருக்கும் அவஸ்தை, அவர்கள் உதிர்க்கும் அனுபவ மொழிகள் என நாம் அறிந்திராத ஒரு இருட்டு உலகம் நம்முன் விரிகிறது. இவர்களுக்காக பேசி அழைத்துச் செல்லவும் யாருமற்ற நரகத்தில் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள் இந்த நால்வரும். தங்கள் நிலைமை இப்படி ஆனதற்காக நெல்சன் மெது கொலைவெறி கொள்கிறான் ரவி. வெளியில் வந்தால் கொல்லாமல் விடபோவதில்லை என சபதம் எடுக்கிறான். அதற்கு முதலில் வெளியில் செல்ல வேண்டுமே?

கையில் லத்தி இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக வருகிறவர்கள் போறவர்கள் எல்லாம் அடிக்கிறார்கள். நாளாக நாளாக சிதரவதையின் வீரியம் கூடுகிறது. குற்றத்தைக் ஒப்புக்கொள்ளும்படி தினமும் சித்தரவதை நடக்கிறது. கயிற்றில் கால்களைக் காட்டி சிலமணி நேரங்களுக்கு பாதத்தில் மட்டும் அடிக்கிறார்கள். அதன்மூலம் இவர்கள் அடையும் வலி, வேதனை, அவஸ்தை என இவை அனைத்தையும் நாம் உணரத் தொடங்கம்போது உடல் நடுங்குகிறது. கனவிலும் இப்படி ஒரு நிலை யாருக்கும் வரக்கூடாது என மனம் தன் போக்கில் பிராத்திக்கத் தொடங்குகிறது. 

முடிவே இல்லாமல் நகர்ந்து கொண்டிருக்கும் இந்தப் பிரச்சனைகு முடிவு காண்பதற்காக லாக்கபினுள் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பிக்கிறார்கள். உடன் இருக்கும் அனுபவஸ்தர்கள் வேண்டாமென எச்சரித்த போதும் குமாரின் உந்துதலில் நால்வரும் தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்க, இதில் கடுப்பான காவல் குமாரை மட்டும் அதே லாக்கப்பில் வைத்துவிட்டு மற்ற மூவரையும் வேறொரு காவல் நிலையத்திற்கு மாற்றுகிறது. மேலும் இதற்கெல்லாம் காரணியான குமாருக்குக் கொடுக்ககூடிய சித்ரவதைகளின் அளவு எல்லை மீறுகிறது. 

உடலின் ஒரே பகுதியில் தொடர்ந்து அடிவாங்கிக் கொண்டிருந்தால், ரத்தம் கட்டி, சீழ் பிடித்து, அப்பகுதி மட்டும் அழுகி கேட்டுப் போய்விடுமாம். இது போக உள்ளுக்குள் ஆங்காங்கு உடைந்து போகும் எலும்புகள் ஏற்படுத்தக்கூடிய வலி தனி. எவ்வளவு அடி வாங்கினாலும், ஏன் அடி வாங்கி செத்தே போனாலும் செய்யாத குற்றத்தை மட்டும் செய்தேன் என ஒத்துகொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் தீவிரமாக இருக்கிறான் குமார். இப்படியே சென்று கொண்டிருக்கும் இவர்களின் நிலை கடைசியில் என்னதான் ஆனது என்பதுதான் மீதி கதை. 

இதில் மற்றுமொரு முக்கியமான விஷயம், கதைசொல்லியான குமார்தான் நாவலாசிரியர் சந்திரகுமார் என நாவலின் கடைசியில் கொடுக்கப்பட்டிருக்கும் பின்குறிப்பு மூலம் தெரியவரும்போது மேலும் அதிர்ச்சியாக இருக்கிறது. மனிதாபினம் என்றால் கிலோ என்னவிலை எனக் கேட்கும் இந்த லாக்கப் பல அதிர்ச்சிகரமான உணமைகளை உரக்கப் பேசுகிறது. 


வெற்றிமாறன் விசாரணை என்னும் திரைப்படத்தை இயக்காமல் இருந்திருந்தால் இந்த நாவல் குறித்து நான் பேசியிருப்பேனா தெரியவில்லை. ஏன் அறிந்திருப்பேனா என்பது கூட சந்தேகமே. பாலுமகேந்திராவின் பட்டறையில் இருந்து வந்தவர்கள் யாருமே இலக்கியத்தில் சோடை போனதாகத் தெரியவில்லை. அதில் வெற்றிமாறனின் இலக்கிய ரசனை என்பது பிரமிக்கத்தக்கது. உலகபுகழ் பெற்ற நாவலான ஓநாயின் குலச்சின்னம் நாவலை தமிழ்மொழி பெயர்ப்பதர்காகவே அதிர்வு என்னும் பதிப்பகம் ஆரம்பித்தவர். தற்கால கலைச்சூழலில் 'மொக்கையா கதை எழுதி படம் எடுத்தாலும் எடுப்பனே தவிர, நல்லதொரு நாவலை, படைப்பை படம் ஆக்குவதற்கு இம்மியும் முனைய மாட்டேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வலம்வருகிறார்கள் திருவாளர் இயக்குனர்கள். இவர்களுக்கு மத்தியில் வெற்றிமாறனும், சமுத்திரக்கனியும் இலக்கிய நாவல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் பின்னணியில் கதைகளம் அமைத்துக் கொண்டிருப்பது வரவேற்கப்பட விஷயம்.    

Friday, June 12, 2015

விலங்கு பண்ணை - பி.வி. ராமசாமி


மேலோட்டமாக பார்க்கையில் இது ஒரு சாதாரண பண்ணையில் நடக்கும் நிகழ்வுகளைக் கொண்டு எழுதப்பட்ட சிறுவர்களுக்கான புத்தகம் போன்று தோன்றினாலும் சற்று கம்யூனிச ரஷ்யாவில் நடைபெற்ற நிகழ்வுகளுடன் ஒப்பிட்டால் இதன் ஆழம் புரியும். 1945-ல் வெளிவந்து அக்காலகட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய புத்தகம் இது.


ஒரு பண்ணையில் பண்ணை வேலைக்காகவும் இன்ன பிற காரணங்களுக்காவும் வளர்க்கப்படும் பன்றி, குதிரை, கழுதை, செம்மறி ஆடு, மாடு, நாய், பூனை, கோழி, காகம் போன்ற பண்ணை மிருகங்களும், பறவைகளும் எஜமானர் தங்களுக்கு  இழைக்கும் அநீதியை எதிர்த்து ஒரு புரட்சியின் மூலம் தாங்கள் விடுதலை பெற வேண்டும் என்று திட்டமிடுகின்றன. 




சரியான அளவு தீவனம் மற்றும் ஓய்வு வழங்கப்படாதது , கோழிகளின் முட்டைகளை முழுவதுமாக சந்தைக்கு அனுப்பி விடுவது, இளம் பன்றிகளும் ஆடுகளும் இறைச்சிக்கு விற்கப்படுவது, மாடுகளின் பால் கன்றுகளுக்கு வழங்கப்படாமல் வெளி சந்தையில் விற்கப்படுவது இதுவே அவைகளின் வெறுப்புக்குக் காரணம். 


ஒரு நாள் விலங்குகளில், வயதில் மூத்த ஓல்ட் மேஜர் என்ற வெள்ளை நிறப் பன்றி அனைவரையும் தான் கண்ட ஒரு கனவு குறித்து கூற இருப்பதாகக்  கூறி அழைக்கிறது . அனைத்து விலங்குகளும் இரவில் எஜமானருக்குத்  தெரியாமல்  ஒன்று கூடுகின்றன. கூட்டத்தில் ஓல்ட் மேஜர் தான் கண்ட கனவில் இங்கிலாந்தில் புரட்சி வெடித்ததாகவும் இங்கிலாந்து முழுவதிலும் பண்ணைகள் மனிதர்களின்  வசமிருந்தது முழுவதுமாக விலங்குகளின் வசம் வந்ததாகவும் மனிதர்களின் காலடியே படாத சொர்க்க பூமியாக இங்கிலாந்து மாறி விட்டதாகவும் கூறியது.


இதன் மூலம் விலங்குகளின் மனதில் புரட்சிக்கான விதையையும் தூவிவிட்டு தனக்கு தன் முன்னோர்கள் கற்று தந்ததாகக்  கூறி இங்கிலாந்தின் விலங்கினமே என்ற பாடலையும் அனைவருக்கும் கற்றுக்  கொடுக்கிறது. இது நடந்து சிறிது நாட்கள் கழித்து அந்த வெள்ளை பன்றி வயோதிகத்தின் காரணமாக இறந்தும் விடுகின்றது. பின்னர் சிறிது நாட்கள் கழித்து   எதிர்பாராத விதமாக எதிர்பாராத  நேரத்தில் நடந்த ஒரு புரட்சியின் மூலம் பண்ணையை எஜமானரிடமிருந்து பறித்து அவரையும் அவரது குடும்பம் மற்றும் பணியாட்கள் அனைவரையும் அங்கிருந்து  விரட்டி விட்டு விலங்குகள்  பண்ணையைக் கைப்பற்றி  தாங்களே நிர்வகிக்கத்  தொடங்குகின்றன. 



முதலில் அனைத்தும் நன்றாகவே நடக்கிறது அங்குள்ள விலங்குகளில் அதிகம் புத்தி கூர்மை உள்ள விலங்குகளாக அறியப்பட்ட பன்றிகளிடம் பண்ணையை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்படுகின்றது. பண்ணையின் பெயர் "மேனார் பண்ணை " என்பதிலிருந்து  "விலங்குப்  பண்ணை" என்று மாற்றப்படுகிறது.ஸ்நோபால், நெப்போலியன் என்ற இரண்டு  பன்றிகளும் நிர்வாகப்  பொறுப்பை ஏற்று நடத்துகின்றன. 


விலங்கு பண்ணைக்கான ஒழுங்கு விதியாக சில கட்டளைகள் வகுக்கப்பட்டு அவை 7 கட்டளைகளாக அனைவரின் கண்ணிலும் படும் விதமாக அங்குள்ள உயரமான சுவற்றில் எழுதப்படுகிறது.(இடைப்பட்ட காலத்தில் பண்ணை வீட்டில் கண்டெடுக்கப்பட்ட எஜமானரின் குழந்தைகளின் பள்ளிப் புத்தகங்களைப் பயன்படுத்தி பன்றிகள் எழுதப் படிக்க கற்றுக் கொண்டன). ஒவ்வொரு ஞாயிறன்றும் கூட்டம் கூட்டப்பட்டு பண்ணைக்குத் தேவையான தீர்மானங்கள்  நிறைவேற்றப்படுகின்றன. கூட்ட இறுதியில் கொடி ஏற்றப்பட்டு 'இங்கிலாந்தின் விலங்கினமே' பாடல் பாடப்படுகிறது.



சில நாட்களுக்கு அனைத்தும் நன்றாகவே நடந்து அக்கம் பக்கம் பண்ணைகளில் விலங்குப் பண்ணையின் புகழ் பரவத் தொடங்குகிறது.  ஸ்நோபால்  நிறைய நல்ல திட்டங்களைத் தொடங்க தீர்மானங்கள் கொண்டு வருகிறது . விலங்குகளுக்கு எழுத படிக்கக்  கற்றுக் கொடுப்பது, பண்ணையில் காற்றாலை தொடங்குவது போன்றவை இதில் அடங்கும். ஆனால் நெப்போலியனுக்கும் ஸ்நோபாலுக்கும்  ஒற்றுமை என்பது சிறிதும் இல்லை. இதனிடையில் மேனார் பண்ணையின் உரிமையாளர்  சில ஆட்களைத் திரட்டிக் கொண்டு பண்ணையைத் தாக்க வருகிறார். இறுதியில் விலங்குகளால் வெற்றியடையப்பட்ட "மாட்டுத் தொழுவ யுத்தம்" என்று பெயரிடப்பட்ட அந்த யுத்தத்தில் ஸ்நோபால் சிறப்பாகச் செயல்பட்டதற்காக அதற்கு 'விலங்கு நாயகன் முதல் வரிசை' என்ற பட்டம் வழங்கி கெளரவிக்கப்படுகிறது.



 இதன் பிறகு காற்றாலை விவகாரத்தில்  வேற்றுமை வெடித்து ஸ்நோபால் நெப்போலியனால் பண்ணையை விட்டே விரட்டப்படுகிறது.
இது நடந்த பிறகு நெப்போலியனின் நடவடிக்கையில் மாற்றம் வரத் தொடங்குகிறது. சிறிது சிறிதாக தன் அதிகாரத்தை நிலை நிறுத்தி சர்வாதிகாரியாக மாறுகிறது. சுவற்றில் எழுதப்பட்ட 7 கட்டளைகளும் மீறப்படுகின்றன. பண்ணையில் பன்றிகளையும் நாய்களையும் தவிர மற்ற 
விலங்குகள் அடிமை நிலைக்குத் தள்ளப்படுகின்றன. முந்தைய எஜமானரிடம் இருந்ததை விட விலங்குகளின் நிலை இன்னும் மோசமாகிறது. 

இதனையடுத்து 'காற்றாழை யுத்தம்' என்ற இரண்டாவது யுத்தம் பக்கத்து பண்ணையாளருடன் நடக்கிறது இதில் விலங்குகள் வென்றாலும் பல விலங்குகள் பலத்த காயமடைகின்றன.  ஆனால் தாங்கள் விலங்குப் பண்ணையின் அங்கத்தினர், மனிதர்களின் அடிமை இல்லை என்ற எண்ணம் அந்த விலங்குகளை அனைத்து துயரங்களையும் தாங்கிக் கொள்ளச் செய்கிறது. ஆனால் சிறிது சிறிதாக மாறிய நெப்போலியன் இறுதியில் அனைத்து வகைகளிலும் மனிதனைப் போலவே நடந்து கொள்கிறது. 


பக்கத்து பண்ணைகளுடன் வர்த்தகம் செய்யத் தொடங்குகிறது. கோழிகளின் முட்டைகள் விற்கப்படுகின்றன. விலங்குகளுக்கு ஒய்வு பெரும் வயது அறிவிக்கப்பட்டு அவைகளுக்கு ஒய்வு அளிக்கப்படும் என்ற அறிவிப்பு காற்றில் விடப்படுகிறது. அதிகமாக வழங்கப்படுவதாக சொல்லப்பட்ட தீவனத்தின் அளவும் முன்பை விட குறைக்கப்படுகிறது. ஆனால் பன்றிகளுக்கான தீவனம் மட்டும் அதிகரிக்கப்பட்டு அவைகள் கொழுத்தும், எண்ணிக்கையில் அதிகரித்தும் காணப்படுகின்றன. இடைப்பட்ட காலத்தில் பன்றிகள் இரண்டு கால்களால் நடக்கவும் மனிதர்களைப் போல மது அருந்தவும் கூட கற்றுக் கொள்கின்றன.பார்லி அதிகம் பயிரிடப்பட்டு பண்ணை  வீட்டின் ஒரு பகுதியில் பியர் காய்ச்சப்படுகிறது.


இறுதிப் பகுதியில் ஒரு நாள் பண்ணையில் பக்கத்து பண்ணைகாரர்களுக்காக சிறப்பான விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்த விருந்து நிகழ்ச்சியினை அறையின் வெளியிலிருந்து ஜன்னலின் வழியாக  மறைந்து நின்று காணும் அனைத்து விலங்குகளும், பன்றிகள் முற்றிலும் மனிதர்களைப் போல நடந்து கொள்வதைப் பார்த்தும் அவைகளின் முகம் சிறிது சிறிதாக மனிதர்களைப் போல மாறுவதைக் கண்டும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றன......



--பிரியா   

===================================================================

நூலின் பெயர் : விலங்கு பண்ணை 
மூலம் : ஆங்கிலம் (Animal  Farm)
எழுத்தாளர் : ஜார்ஜ் ஆர்வெல் 
தமிழில் : பி.வி. ராமசாமி 
வெளியீடு : கிழக்குப் பதிப்பகம் 

===================================================================