Showing posts with label ராஜீவ்காந்தி சாலை. Show all posts
Showing posts with label ராஜீவ்காந்தி சாலை. Show all posts

Monday, February 17, 2014

ராஜீவ்காந்தி சாலை - விநாயக முருகனுக்கு ஒரு வாசகனின் கடிதம்

அன்புள்ள விநாயக முருகன்,

நான் நலம், நீங்கள் நலமா? தங்களுடைய முதல் புத்தகமான ராஜீவ்காந்தி சாலையை வாசித்துவிட்டேன், வாசிப்பதற்கு முன்னும் பின்னும் என்னுள் ஏற்பட்ட உணர்வுகளை விமர்சனமாக எழுதுவதைவிட இக்கடிதம் மூலம் எழுதுவது நலமென நினைக்கிறன். உங்களுடைய முதல் புத்தகத்திற்கு முதலில் எனது வாழ்த்துக்கள். 

இந்தாண்டு புத்தகச் சந்தைக்கு முன் பரபரப்பாக நடைபெற்ற புத்தகச் சண்டையில் உங்கள் புத்தகமும் ஒன்றென்று அறிவேன். புத்தகம் வெளிவருவதற்கு முன்பே ஒரு இளம் மற்றும் முதல் எழுத்தாளருக்கு கிடைக்க வேண்டியதை விட மிக அதிகமான எதிர்பார்ப்புகளையும் எதிர்ப்புகளையும் சம்பாதித்துவிட்டீர்கள். ஒருவேளை அப்படியொரு சம்பவம் இணையத்தில் நடைபெறாது போயிருந்ததால் எனக்கும் கூட தங்களது புத்தகம் பற்றிய தகவல் கிடைக்கமால் போயிருக்கலாம். 



எது எப்படியோ, இந்த வருட புத்தக கண்காட்சியினுள் நுழையும் போதே, எந்த புத்தகம் வாங்குகிறோமோ இல்லையோ ராஜீவ் காந்தி சாலை வாங்கியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் நுழைந்தேன். வாங்க நினைத்ததன் முதல் காரணம் அது என் தொழில் சார்ந்த சூழலைப் பற்றிய புத்தகம், இரண்டாவது கடந்த இரு வருடங்களாக என்னை பயணிக்க வைத்துக் கொண்டிருக்கும் சாலை. மூன்றாவது - படிக்க இரண்டாவது பத்தி. வாங்கலாமென்று ஆவலோடு கையிலெடுத்த புத்தகத்தை, எடுத்த வேகத்தில் கீழே வைத்துவிட்டேன், காரணம் விலை. இருநூற்று நாற்பது ருபாய். பதிப்பகம் உயிர்மை. இருக்காதா பின்னே! என் அண்ணனைப் பார்த்தேன் 'புது ரைட்டர், இவ்ளோ ரேட்டு, யோசிச்சிக்கோ?' என்றான். (அவன் சாருவின் வாசகன் என்பது இங்கு தேவையில்லாத விசயமாக இருந்துவிட்டுப் போகட்டும்.)          

வாங்கவில்லை. இருந்தும் மனம் முழுவதும் ராஜீவ் காந்தி சாலையின் மீதே இருந்தது. இந்த நல்ல நேரத்தில் ஸ்கூல்பையன் வாங்கிய புத்தகங்களைக் கவனித்தேன். அட அவர் கைகளில் நீங்கள் எழுதிய ராஜீவ் காந்தி சாலை. அடுத்த சில நிமிடங்களில் என் கைகளுக்கு மாறியிருந்தது.   

*****

சுஜாதாவின் கணேஷ் வசந்த் புத்தகங்களை ஆரம்பிக்கும் போது எதிர்பாராத ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளுமே அப்படியொரு மனநிலையில்தான் நானும் ராஜீவ்காந்தி சாலையின் முதல் பக்கத்தை வாசிக்கத் தொடங்கினேன். போதாக்குறைக்கு மனுஷ் வேறு மிகவும் விறுவிறுப்பாக செல்லும் நாவல் என்றும், அடுத்த சுஜாதா, பாலகுமாரன் வரிசையில் விநாயக முருகன்தான் என்று அபிலாஷும் பேஸ்புக்கில் எழுதியிருந்தார்கள். என் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியிருந்தது. மனதிற்குள் நூறுமுறை ஸ்கூல்பையனுக்கான நன்றியை தெரிவித்துக்கொண்டேன்.

முதல் சில பக்கங்கள் 'காலம்' பேசுகிறேன் என்று காலமானது பழைய மகாபலிபுரம் சாலையான தற்போதைய ராஜீவ்காந்தி சாலையின் ஆதிநிலையில் இருந்து தன்னுடைய விவரிப்பைத் தொடங்குகிறது. அட இது நாம எதிர்பார்த்தத விட நல்லா இருக்கும் போலயே, இதப் போய் ஏன் சாரு திட்டினாரு என்றெண்ணியபடி தொடர்ந்தேன். வழக்கமாய் நான் பயணிக்கும் சாலையின் மழைநீர் வழிந்தோடும் காலத்தில் இருந்து கதை தொடங்கியது. சொன்னால் நம்பமாட்டீர்கள் ஒரே மூச்சில் படித்து முடிப்பதற்கு என்னை ஆயத்தப்படுத்திக் கொண்டேன்.   

ஆனால்...! தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. அடுத்தடுத்த பக்கங்களில் நான் எதிர்பார்த்த ஏதோ ஒன்று குறைவது போலவே தோன்றியது. அது சுவாரசியமா இல்லை கதைசொல்லிய விதமா எனத் தெரியவில்லை. சரி போகப்போக சுவாரசியம் அதிகரிக்கும் தொடர்ந்து வாசிக்கலாம் என்று நினைத்த எனக்கோ மிதமிஞ்சிய ஏமாற்றம். போதாக்குறைக்கு கதைமாந்தர்கள்  பார்வையில் பார்ப்பனர்கள் மற்றும் மலையாளிகள் அனைவருமே மோசமானவர்கள் அல்லது மிக மோசமானவர்கள். அதிலும் பார்ப்பனர்களை உவமைபடுத்தியிருக்கும் விதம் வன்மத்தின் உச்சம் (உடனே நான் பாப்பானா என்ற ஐயம் வேண்டாம்). சரி அது உங்கள் எழுத்துச் சுதந்திரமாக இருந்துவிட்டுப் போகட்டும். எனக்கு தேவையில்லாத விஷயம். 

அதன்பின் சில நாட்களுக்கு புத்தகத்தைத் தொடவேயில்லை. இருந்தும் தட்டிக்கழிக்கவும் முடியவில்லை. ஒருவழியாக வாசித்து முடித்துவிட்டேன்.

*****

பிரதானமான ராஜீவ்காந்தி சாலை, அங்கே பிரதானமாக இருக்கும் சில்வர்சாப்ட் உட்பட பல ஐ.டி கம்பெனிகள். இந்த கம்பெனிகளில் வேலை பார்க்கும், ஓய்வெடுக்கக் கூட நேரமின்றி நவீன கலாச்சாரத்திற்கு தங்களை மிக வேகமாக மாற்றிக் கொண்ட புதியதலைமுறை ஒருபக்கமும், அதே ராஜீவ்காந்தி சாலையில் தங்களிடமிருந்த இருந்த நிலங்கள் மொத்தத்தையும் அரசாங்கத்திடமும், ரியல்எஸ்டேட் பண முதலைகளிடமும் ஏமாந்த மனிதர்கள் மற்றும் அவர்களுடைய அன்றாட வாழ்க்கைப் போராட்டங்கள் என்று தற்கால வாழ்க்கைச் சூழலின் வேகத்திற்கு தங்களை மாற்றிக்கொள்ள முடியாமல் திண்டாடும் எளிய மக்கள் மறுபுறமும் என அற்புதமாக பின்னப்பட்ட கதை. 

ஆனால் பிரதானமாக இருந்திருக்க வேண்டிய ராஜீவ்காந்தி சாலையானது கதை விவரிக்கப்பட்ட பாணியில், ஓய்வின்றி பணம் பணம் பணம் என்று ஓடும் இளைஞர்களின் மனைவிகள் அனைவருமே கள்ளத்தொடர்பு வைத்துக் கொள்வார்கள் என நகர்ந்து கள்ளத்தொடர்பு என்பது மட்டுமே பிரதானமாகிவிட்டது போல் தோன்றுகிறது. கதை முழுவதுமே யாராவது யாருடனாவது கள்ளத்தொடர்பு வைத்துக்கொள்கிறார்கள். கள்ளத் தொடர்பு வைத்துக் கொண்ட பாவத்திற்காக இழுத்துக் கொண்டு ஓடுகிறார்கள் இல்லையேல் தற்கொலை செய்து கொள்கிறார்கள் அல்லது தற்கொலை செய்ய தூண்டப்படுகிறார்கள். ஒருவேளை ஐ.டி துறையில் வேலை செய்யும் இளைஞர்கள் தாம்பத்ய விசயத்திலும் கவனமாக இருக்க வேண்டும் என்ற விஷயத்தை பொட்டில் அறைந்தார் போல் கூறும் நாவல் என இதனை வைத்துக் கொள்ளலாமா?    

கதையின் முதல் எழுபது பக்கத்திற்கு மிகவும் சோகையாக நகரும் ராஜீவ்காந்தி சாலையை அதன் பின் 'சூடு'பிடித்து நகரச் செய்வது இந்த கள்ளகாதல் வகையறாக்கள்தான். எப்போதுமே அடுத்தவர்கள் அந்தரங்கத்தை அறிந்துகொள்வதில் இருக்கும் தக்குனூண்டு ஆர்வம் யாருக்குமே தவிர்க்க முடியாத ஒன்று. அது நிஜமாய் இருந்தால் என்ன புனைவாய் இருந்தால் என்ன? நான் நினைக்கிறன் உங்கள்  நாவலை நகர்த்திச் செல்வதும் அந்த ஒரு காரணி கள்ளக்காதல் + காமம் + ஆபாசம் தான் என்று. அதனால் தானோ என்னவோ இந்த புத்தகத்தை யாருக்கேனும் சிபாரிசு செய்யவும் பயமாய் இருக்கிறது. யாருமே இதுபோன்ற புத்தகங்களை வெறுப்பதில்லை என்றாலும் விரும்புவதுமில்லை. 

காமத்தை வர்ணிக்கும் சில விசயங்களை இலைமறை காய்மறைவாக நகர்த்தியிருக்கலாம். அதிகபட்ச ஆபாசச் சொற்களையாவது குறைந்தபட்சம் ஆக்கியிருக்கலாம், நீங்கள் சாருவின் சாயலில் எழுதியிருப்பதாக நீங்கள் குறிப்பிட்டதாக சாரு குறிப்பிட்டிருந்தார். எனக்கு ஏனோ இதுபோன்ற எழுத்துக்களில் உடன்பாடில்லை (எனக்கு மட்டுமே). கதையோட்டம் கருதி சில ஆபாச (அ) காம வார்த்தைகளை, சம்பவங்களைச் சேர்க்கலாம். ஆனால் இவை மட்டுமே கதையோட்டமாக இருக்கும் என்றால் இதற்கும் சரோஜாதேவி புத்தகத்திற்கும் என்ன வித்தியாசம் உள்ளது? நாசூக்காக சொல்ல வேண்டிய பல விஷயங்கள் நாராசமாய்ப்பட்டது. ஏன் கெட்ட வார்த்தைகள், நேரடியான ஆபாச சித்தரிப்புகள்? பெண்ணின் சுயஇன்பம் அனுபவித்தலை, லெஸ்பியன் செக்ஸை, அடையாறு நாய் டாக்டர் போன்ற விசயங்களை வலிந்து திணித்திருப்பது போல் பட்டது. அவற்றை ஒற்றை வரியில் விளக்கிவிட்டு கதைக்குள் நகர்ந்திருக்கலாமே. சொல்லபோனால் அந்த அடையாறு நாய் டாக்டர் கதையின் ஓட்டத்தில் எங்குமே சம்மந்தப்படவில்லை. பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஒருவேளை அதனை ஒரு செய்தியாக தர முயன்றிருக்கிறீர்களா? இப்படி பல தேவையில்லாத விசயங்களை கத்தரிப்பதன் மூலம் புத்தகத்தின் பல பக்கங்களைக் கணிசமாகக் குறைத்திருக்கலாமே?             

எனக்கு மற்றொரு விஷயம் புரியவேயில்லை, அதவாது கதை நடக்கும் காலம். காலம் என்று கதை முழுவதும் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கார்காலம், கூதிர்காலம், இளவேனிற்காலம் முதலியவற்றைக் கூறவில்லை. எந்த வருடத்தில் நடக்கின்றது என்பதை கேட்கின்றேன். ஏனென்றால் இந்த நாவலில் மிக சமீபத்தில் EA வில்  நடந்த தற்கொலை பற்றி குறிப்பிட்டுள்ள அதே நேரத்தில் சில ஆண்டுகளுக்கு முன் புத்தாண்டு கொண்டாடத்தின் போது ஏற்பட்ட நீச்சல்குள விபத்து பற்றியும் குறிப்பிட்டுள்ளீர்கள். கதையின் பல இடங்களில் ராஜீவ் காந்தி சாலையின் சாலை கட்டமைப்புப் பணிகள் நடைபெறுவதாகவும் குறிப்பிடுகிறீர்கள். அதுவும் புரியவில்லை. 

கடந்த சில வருடங்களாக சிறுசேரி வரையிலும் முழுமையடைந்த ராஜீவ்காந்தி சாலையில்தான் நான் பயணித்துக் கொண்டுள்ளதாக நம்புகிறேன்! ஒரு இடத்தில் கூட சாலை கட்டுமானப்பணிகளை பார்த்ததில்லை. ஆகையால் கதை நடக்கும் காலத்துடன் எதையுமே பொருத்திப் பார்க்க முடியவில்லை. இரா.முருகனின் மூன்று விரல் நாவல் படிக்கும் போதும் காலம் விசயத்தில் இதே போன்றதொரு குழப்பம் ஏற்பட்டது, ஆனால் அந்நாவலில் கதை நடைபெறும் வருடம் எப்போது என்பதுதான்  ட்விஸ்டே. ஒருவேளை அப்படியெதுவும் இதில் இருக்குமோ என்று எதிர்பார்த்தேன், அப்படியும் இல்லை. சரி புனைவு என்பதால் காலம் தேவையில்லை என்று நினைத்துவிட்டீர்களோ? 

உங்கள் நண்பர் ஒருவரின் விமர்சனத்தை பேஸ்புக்கில் படித்தேன். அதாவது உங்கள் பேஸ்புக் ஸ்டேடசில் வழிந்தோடும் எள்ளல் நடை இப்புத்தகத்தில் இல்லை, மற்றபடி அருமையாக நகரும் நாவல் என்று. இப்படி யாரேனும் உங்கள் நாவலை விமர்சனம் செய்தால் கொஞ்சம் தள்ளியே நில்லுங்கள், காரணம் உங்கள் வீழ்ச்சிக்கான படுகுழியை அவர்களே வெட்டலாம். 

முந்நூறு பக்கங்களுக்கு மிகாமல் ஒரு நாவல் எழுதுகிறீர்கள், அதுவும் உங்கள் முதல் நாவல், அதனை பார்த்துப் பார்த்து செதுக்க வேண்டாமா? கொஞ்சம் அலங்காரமான நடையுடன் எழுதியிருக்க வேண்டாமா? அலங்காரம் கூடத் தேவையில்லை. பிழைகளைத் தவிர்த்திருக்கலாமே? ஏன் உங்கள் கதாபாத்திரங்கள் அனைவரும் வரிக்கு வரி எதையாவது நினைத்துப் பார்க்கிறார்கள்? அவர்கள் நினைப்பவை எல்லாவற்றையும் வரிக்குவரி நினைக்காமல் பாராபாராவாக நினைத்துப் பார்க்கச்சொன்னால் உங்களுக்குப் புண்ணியமாய்ப் போகும்.      

உங்கள் நாவலை எழுதிவிட்டு நிதானமாகய் ஒருமுறை படித்து பார்த்தீர்களா? இல்லை நீங்கள் எழுதிய நாவலை நிதனாமகப் படித்துப் பார்க்கும் அளவுக்கு உங்களுக்குகே பொறுமை இல்லையா? கதாபாத்திரங்கள் பேசிக்கொள்ளும் போது ஏன் இவ்வளவு குளறுபடிகள். பழனி பேச வேண்டியதை லூர்து பேசுகின்றான். லூர்து பேச வேண்டியதை பழனி பேசுகிறான். ஒரு இடத்தில் சம்மந்தமே இல்லாமல் கார்த்திக் பேச வேண்டியதை பிரணவ் பேசுகிறான். இதையெல்லாம் விட கொடுமை என்னவெனில், கடைசி அத்தியாத்திற்கு முந்தைய அத்தியாத்தில் இறந்து போன ஒரு கதாபாத்திரம், கடைசி அத்தியாயத்தில் அமைதியாக லேப்டாப்பை திறந்து பார்ப்பதுதான். ஒருவேளை ராஜீவ்காந்தி சாலையில் அலைந்து திரியும் பேய்களையும் நீங்கள் விட்டுவைக்கவில்லையோ!    

புத்தகக் கண்காட்சிக்குள் முடித்தே ஆக வேண்டும் என்ற டார்கெட் வைத்து எழுதினீர்களா? அப்படி என்றால் உயிர்மை கூடவா பிழை திருத்தவில்லை. 

மொத்த கதையும் ஏன் இவ்வளவு அழுத்தத்துடன் நகர்கிறது . படிக்கும் பொழுது ஏதோ ஒரு பெரிய பாராங்கல்லை சுமந்துகொண்டே படிப்பது போன்ற உணர்வு. அத்தனை பேரும் எத்தனை பெரிய துன்பம் வரினும் ஆங்காங்கு சிரிக்கக் கூடவா மாட்டார்கள்?    

இவ்வளவு பெரிய நாவலில் ஒருவரி கூடவா உனக்குப் பிடிக்கவில்லை என்று கேட்கலாம்.  குப்பைமேட்டில் நின்று கொண்டு உயர்ந்து வளர்ந்த கட்டிடங்களை நோக்கி லூர்து சிந்தித்துப் பார்ப்பானே 'புள்ளியில் இருந்து பிரம்மாண்டத்தைப் பார்த்தால் அதிசியமாய் இருக்கும் பிரம்மாண்டத்தில் இருந்து புள்ளியைப் பார்த்தால் என்ன அதிசியம் இருக்கப்போகிறது' என்றவரியை மெய்யாலுமே ரசித்தேன். மற்றும் இந்த புத்தகத்தில் எனக்கு தெரியாத மற்றும் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள் சில இருக்கின்றது. என்னவொன்று அதைத் தெரிந்து கொள்வதற்காக என் பொறுமையை சோதிக்க வேண்டியதாய் இருக்கிறது.      

'அதான் புடிக்கலை இல்ல அப்போ எதுக்கு இவ்வளோ பெரிய கடுதாசி எழுதிட்டு இருக்க' என்று நீங்கள் கேட்கலாம். முன்னூற்றி சொச்சம் பக்கங்கள் பாஸு. எனக்குக் கிடைத்த பொன்னான நேரத்தை செலவழித்துப் படித்துள்ளேன், இந்த புத்தகம் படித்த நேரத்தில் வேறுசில புத்தகங்களைப் படித்திருக்கலாம். அந்த ஆதங்கம் தான் வேறு ஒன்றுமில்லை. 'புடிக்காட்டா படிக்காதே' என்று கூறிவிடாதீர்கள். என்னை போன்ற வாசகனுக்காக எழுதாமல் வேறு யாருக்காக மாய்ந்து மாய்ந்து புத்தகம் எழுதுகிறீர்கள். மற்றொன்றும் கேள்விபட்டேன் ஆயிரம் பக்கத்திற்கு மிகாமல் மற்றொரு நாவல் எழுதப் போகிறீர்களாமே, ஒருவேளை அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் ராஜீவ்காந்தி சாலையை மீண்டும் ஒருமுறை படித்துவிட்டு எழுதத் தொடங்குங்கள். 

காரணம் ஒரு புத்தகம் எப்படியெல்லாம் எழுதப்படக்கூடாது என்பதற்கான மிகச்சிறந்த படிப்பினை ராஜீவ்காந்தி சாலை என்பதைத் தவிர வேறு எந்த தாக்கத்தையும் என்னுள் ஏற்படுத்தவில்லை. ஒருவேளை சிபாரிசு செய்வதென்றால் தங்களுடைய முதல் புத்தகத்தை எழுத இருக்கும் அத்தனை நபர்களுக்கும் இந்த புத்தகத்தினை சிபாரிசுசெய்கிறேன். ஒரு கதை எப்படி இருக்கக்கூடாது என்பதற்காக. இந்தப் புத்தகத்தின் குறைகளை ஏதேனும் காபி ஷாப்பில் அமர்ந்து நிதானமாக விவாதிக்கலாம் என்றாரே சாரு, நீங்கள் சம்மதித்தால் ஏதேனும் ரோட்டோர டீக்கடையில் வைத்து விவாதிக்கக்கூட நான் தயார். அடுத்த பதிப்பிலாவது குறைகளைக் களைந்து வெளியிட வேண்டும் என்பதற்காகத்தான். காரணம் இது மிகச் சிறப்பாக வந்திருக்க வேண்டிய புத்தகம். 

இப்படிக்கு 
ராஜீவ்காந்தி சாலையில் உங்களோடு பயணித்துக் கொண்டிருக்கும் ஒரு சக பயணி
சீனு