Thursday, October 30, 2014

சகுந்தலா வந்தாள் - வாமுகோமு

படைப்பாக்கம் : சீனு 

பல கூறுகளாக பிரிந்து கிடக்கும் சமூகத்தில், சமூகம் உங்களை எந்த அடுக்கில் வைத்து அழகு பார்க்கிறது என்பதைப் பொறுத்தே ஒரு புத்தகம் உங்களினுள் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் ஏற்படுத்தாமல் போவதற்குமான சாத்தியங்களைக் கொண்டுள்ளன. நீங்கள் மத்திய வர்க்கத்தைச் சேர்ந்தவர் என்றால் ஒரு மத்திய குடும்ப சூழலை, நீங்கள் தினசரி அனுபவிக்கும் கொடுமைகளைப் பற்றி எழுதப்பட்ட ஒரு நாவல் உங்களினுள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது உறுதியில்லை அதற்கான அவசியமும் இல்லை. இதுவே இதுவரை நீங்கள் பார்த்திராத ஒரு உலகத்தை அதில் நடமாடும் மக்களைப் பற்றிய வாழ்வியலை அந்த எழுத்தாளர் அறிமுகப்படுத்துகிறார் என்றால் அதனால் ஏற்படும் தாக்கம் வேறுவிதமாய் இருக்கும். கிட்டத்தட்ட இந்த சகுந்தலா வந்தாள் கூட அப்படியான ஒரு நாவல் தான். 



கல்பனா என்னும் சிறுமி தன் இரண்டாவது அப்பாவால் சீரழிக்கப்பட அவளை விபச்சார விடுதியில் கொண்டு சேர்க்கிறாள் ஏற்கனவே பாலியல் தொழிலாளியாக இருக்கும் அவள் அம்மா. பருவம் அடைந்த சில நாட்களிலேயே விபச்சார விடுதில் சேர்க்கப்படும் கல்பனா, அங்கே தன் நாட்கள் எப்படி நகருகிறது, என்ன மாதிரியான மனிதர்களைச் சந்திக்கிறாள் அவர்களை எப்படி எதிர்கொள்கிறாள் என்பதில் இருந்து வளர்கிறது கதை. கதையில் மொத்தமும் நான்கே நான்கு மையக் கதாப்பாத்திரங்கள்தான். கல்பனா, ஜானி, சகுந்தலா பின் கமலக்கண்ணன். இதில் கிட்டத்தட்ட கதாநாயக அந்தஸ்து கொண்ட நபர் திருவாளார் கமலக்கண்ணன்.

கல்பனா பாலியல் தொழிலாளியாவதற்கு முன்பே அவளுக்கு ஜானி என்றொரு காதலன் இருந்துள்ளான், தன்னை ஒருதலையாய்க் காதலித்தவன்தான் என்றபோதிலும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் தான் வசிக்கக்கூடிய விபச்சார விடுதியில் வைத்தே ஜானியை சந்தித்து விடுகிறாள் கல்பனா. தான் உருகி உருகி காதலித்த பெண், பாலியல் தொழிலாளியாக இருக்கிறாள் என்பதை ஏற்றுகொள்ள முடியாமல் தவிக்கிறான் ஜானி. அவளுக்காக காத்திருந்த நாட்களையும் காதலித்த நாட்களையும் அவளிடம் கூறி தன்னோடு வந்து மணமுடித்துக் கொள்ளும்படி கேட்கிறான். இவளோ தான் ஒரு பாலியல் தொழிலாளியாகவே மாறிவிட்டதாகவும் தனக்கு குடும்பம் நடத்தத் தெரியாது என்றும் கூறுகிறாள். அதாவது இத்தனை நாட்களில் அவள் இருக்கும் நான்கு சுவற்றைத் தாண்டி என்ன இருக்கிறது என்பதையே அவள் அறிந்திருக்கவில்லை. அல்லது அதற்கான அவசியமும் ஏற்பட்டிருக்கவில்லை. கல்பனாவின் பார்வையில் அவள் கூறுவது மிகச்சரியே, இருந்தும் அதனை ஜானியால் ஏற்றுகொள்ள முடியவில்லை.

இந்தக் காதல் தோல்வியில் இருந்து மீள ஜானுக்கு உடனே வேறொரு பெண் தேவையை இருக்கிறாள். இந்நேரத்தில் தற்செயலாக ஜெராக்ஸ் கடையில் பார்க்கும் ஒரு பெண்ணின் மீது மையல் கொள்கிறான். அந்தப் பெண்தான் சகுந்தலா. இவர்களுக்கு இடையேயான காதல் என்பது இதுநாள் வரை நா(ம்)ன் அறிந்திராத கொச்சை மொழியில் எழுதப்பட்ட காதல். ஜான் எடுத்த உடனேயே அவளிடம் கொச்சை மொழியில் பேசத்தொடங்குகிறான், மெல்ல சகுந்தலாவும் அதை விரும்பத் தொடங்குகிறாள். மொபைல் போன் மூலம் மெல்ல வளருகிறது இவர்கள் காதல். ஒரு கட்டத்தில் தனது பிறந்தநாள் பரிசாக தன்னையே ஜானுக்கு அளிக்கிறாள் சகுந்தலா.. ஜானிக்கும் சகுந்தலாவிற்கும் இடையே நடக்கும் காதலையும் ஊடலையும் காமத்தையும் கொங்கு மொழியில் ரசிக்கும்படி எழுதியுள்ளார் வாமுகோமு. 

இனி கமலக்கண்ணன். இவர் தன்னுடைய புலம்பல்களின் ஊடாகவே நம்மிடம் அறிமுகமாகிறார். முதலில் அவர் என்ன பேசுகிறார் ஏன் இப்படி பிணாத்துகிறார் என்பது புரியாவிட்டாலும் மெல்ல ஒவ்வொரு முடிச்சாக அவிழ அவிழ அனைத்தும் புரியத் தொடங்குகிறது. தற்சமயம் கமலக்கண்ணன் ஒரு நல்ல முதலாளியிடம் நல்லா விசுவாசியாக இருந்து வேலையை இழந்தவர். மனைவி தன்னுடன் சண்டையிட்டு இரு குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு அப்பன் வீட்டுக்குப் போய்விட்ட மன வருத்தத்தில் இருப்பவர். போதாக்குறைக்கு சகுந்தலா என்னும் தன்னுடைய அத்தைப் பெண்ணின் மூலம் வந்த தேவையில்லாத பிரச்சனைகள்.

அல்லது சகுந்தலா எப்போது கமலக்கண்ணனின் வாழ்க்கைக்குள் குறுக்கிட்டாளோ அப்போதிருந்தே பிரச்சனைக்குள் தள்ளப்படுகிறான் கமலக்கண்ணன். சகுந்தாலவிற்கு ஒரு கறுப்புப் பக்கம் இருக்கிறது, அதில் இருந்து அவளை மீட்பதற்காக உதவி செய்கிறார் கமலக்கண்ணன், சகுந்தலாவிற்கு உதவக் கூடாது என்று அவன் மனைவியும் அம்மாவும் எவ்வளவோ மறுத்தும் கூட கேட்காமல் சகுந்தலா என்னும் அந்த குழிக்குள் போய் விழுகிறான் கமலக்கண்ணன். இங்கே கமலக்கண்ணனுக்கும் அவன் மனைவிக்கும், கமலக்கண்ணனுக்கும் சகுந்தலாவிற்கும் இடையே நடக்கும் காட்சி நகர்வுகளை அற்புதமாக நகர்த்தியிருப்பார் வாமுகோமு. கமலக்கண்ணனின் மனைவி கணவனை தன்னுள் வைத்து ஆள நினைக்கும் ஒரு பெண், சாதாரணமாகத் திட்டுவது என்றாள் கூட பச்சை பச்சையாகத்தான் திட்டுகிறாள். 

ஆனால் சகுந்தலாவோ சரியான காரியக்காரி. தன்னுடைய அந்த நிமிட உல்லாசத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணிந்தவள். கற்பிலிருந்து கருவறை வரை அனைத்தையும் விற்கத் துணிந்தவள். இவர்கள் இடையேயும் மாட்டிக் கொண்டு கமலக்கண்ணன் புலம்புவதைப் பார்க்க நமக்கே பாவமாய் இருக்கும். சில சமயம் சகுந்தலா மீது கோபம் வருவதற்குப் பதிலாக கமலக்கண்ணன் மீது கோவம் வருகிறது. தன் இயலாமையால் தன்னைத்தானே நொந்து கொள்பவனை யாருக்குத்தான் பிடிக்கும். ஆனால் இது ஒன்றும் எதார்த்தத்தை மீறிய நிகழ்வு இல்லையே. நிகழ்வாழ்வில் உங்களுக்குத் தெரிந்தவராகவோ அல்லது உங்களில் ஒருவராகவோ கூட அந்தக் கமலக்கண்ணன் உலவக்கூடும். மொத்தத்தில் 'சகுந்தலா வந்தாள்' வாழ்வில் ஏதோ ஒர் இடத்தில் நாம் சந்திக்கக் கூடிய நான்கு மனிதர்களின் மிக அருகில் சென்று அவர்களுக்குள் இருக்கும் அந்தரங்கத்தைப் படம் பிடித்துக் காட்டி இன்னார் இப்படித்தான் இருப்பார்கள் என்பதோடு முடிகிறது.   

வாமுகோமு எழுதியவற்றில் நான் படிக்கும் முதல் நாவல் இதுதான். கொங்கு மொழியில் எழுதப்பட்ட நாவல் என்பதால் சில இடங்களில் சில வார்த்தைகளின் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை, சிலவற்றை வாக்கியத்தின் கட்டமைப்பின் மூலம் இதுவாக இருக்குமோ என்று அவதானிக்க வேண்டியிருக்கிறது. மேலும் கமலக்கண்ணன் புலம்பும் மிக சில இடங்களைத் தவிர்த்து நாவல் மொத்தத்தையும் அலுப்பு தட்டாமல் நகர்த்தியிருக்கிறார் வாமுகோமு. 

சிறிய எச்சரிக்கை. ஒருவேளை நீங்கள் பாலியல் சம்மந்தமான வார்த்தைகளைக் கொண்ட ஒரு புத்தகம் படிப்பதை உங்கள் வீட்டில் இருக்கும் யாரேனும் விரும்பாது போனாலோ அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் யாரேனும் படிப்பதை நீங்கள் விரும்பாது போனாலோ அதற்கான முன்னெச்சரிக்கை தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் சகுந்தலாவை வரவழைக்கவும், ஏனெனில் இவளும் இவளோடு பழகுபவர்களும் கொஞ்சம் மோசமானவர்கள். 

பாலியல் சார்ந்த வார்த்தைகள் சம்பவங்கள் அனைத்தும் அப்படிக்கு அப்படியே எழுதப்பட்டுள்ளதால் உங்களில் எத்தனை பேருக்கு இந்தப் புத்தகம் பிடிக்கும் என்று தெரியவில்லை. ஒருவேளை வாசிக்கத் தொடங்கினீர்கள் என்றால் புத்தகம் முழுவதையும் முழுமூச்சில் வாசித்து முடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம், காரணத்தை விளக்கவேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறன். வேண்டுமானால் இந்தப் புத்தகத்தை இரண்டு பகுதியாகப் பிரிக்கலாம். 

ஒன்று முழுக்க முழுக்க காமரசம் சொட்டும் ஓரளவிற்கு ஆபாச வார்த்தைகள் குறைந்த சில பாலியல் சம்பவங்கள் அடங்கிய புத்தகம். இரண்டாவது உளவியல் ரீதியாக பாதிகப்பட்ட ஒருவன் அல்லது எதையுமே எதிர்த்துக் கேட்கத் துணிவில்லாத நடப்பதை அப்படியே ஏற்றுக் கொள்ளகூடிய ஒருவனின் மன ஓட்டங்களின் உளவியல் சார்ந்த புத்தகமாகவும் இதனைக் கொள்ளலாம். இந்த இரண்டும் ஒன்றோடு ஒன்று கலந்து ஒன்றாக உருவெடுத்திருப்பது தான் சகுந்தலா வந்தாள். இதில் எந்தப் பகுதியை நீங்கள் உள்வாங்கிக் கொள்ளபோகிறீர்கள் என்பது உங்களுக்கு விடப்பட்ட சவால். ஆனால் கதை முடியும் போது நிச்சயமாய் இரண்டின் தாக்கமும் உங்களிடம் இருக்கும் என்பதே சகுந்தலா வந்தாளின் வெற்றி. மணவாழ்க்கையில் நுழைந்தவர்கள் நுழைய இருப்பவர்கள் என்று இரு தரப்பினரும் படிக்க வேண்டிய புத்தகம். 

ஆசிரிய பற்றி:

வா.மு.கோமு தன்னுடைய வித்தியாசமான, துணிச்சலான சிறுகதை மற்றும் கவிதை முயற்சிகளுக்காகப் பெரிதும் கவனம் பெற்று வருபவர். திருப்பூரைச் சேர்ந்தவர், பெரும்பாலும் தான் கையாளும் படைப்புகளில் கொங்கு மொழியைப் பிராதனமாகக் கொண்டு எழுதி வருகிறார். கலாச்சாரரீதியான மனத் தடைகளை, மொழியின் குதூகலமும் அங்கதமும் கொண்ட இவரது மொழி வெகு இயல்பாகத் தாண்டிச் சென்றுவிடுகிறது. எதார்த்த உலகின் அழுத்தமான காட்சிப்படுத்தல்கள் சட்டென அதீதப் புனைவுகளுக்குள் கரைந்து ஒரு புதிய அனுபவத்தை உருவாக்குகின்றன.


*****

நடுகல் வெளியீடு புத்தகங்கள் 

1.வாமுகோமுவின் வழக்கமான நடையில் இல்லாமல் வித்தியாசமான முறையில் உள்ள வயது வந்தோருக்கான நாவல் - சகுந்தலா வந்தாள் - வாமு கோமு - ரூ 150

2.தஞ்சை ஓவியத்தின் மறுபக்கத்தை சொல்கின்ற தமிழின் முக்கியமான நாவல், கள்ளம்-தஞ்சை ப்ரகாஷ் -ரூ210

3.கொங்கு வட்டார கிராம மக்களின் வாழ்வியல் கலந்த பலரின் பாராட்டுகளைப் பெற்ற நாவல் குருத்தோலை-செல்லமுத்து குப்புசாமி - ரூ150

4.சாதாரண மொழியில் புனையப்பட்ட சிறு குறிப்புகள் அடங்கிய சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கின்ற அழகான தொகுப்பு அப்புச்சி வழி - வாமு கோமு(நினைவோடைக் குறிப்புகள்

மூன்று நாவல்கள் மற்றும் ஒரு நினைவோடைக் குறிப்புகள் அடங்கிய புத்தகங்கள் மொத்தம் 610ரூபாய் வருகின்றது நான்கும் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம் ஒன்று, இரண்டு, வாங்குபவர்களுக்கு 30 ரூபாய் மட்டும் கூரியர் செலவு சேர்த்து அனுப்ப வேண்டும் தேவைப் படுபவர்கள் வீடு சுரேஷ் குமார் அவர்களைத் தொடர்பு கொள்ளவும். அழைக்க : 98439 41916

பணம் அனுப்ப வேண்டிய விவரம்

Sureshkumar.K
A/NO :622302010009565,
IFSE CODE : UBIN0562238,
PN ROAD BRANGE, 
TIRUPUR-2.
BANK : UNION BANK OF INDIA

7 comments:

  1. விமர்சனத்தை படிக்கையில் புத்தகம் படிக்கும் ஆவல் மேலிடுகிறது.. சென்னை வரும்போது உங்க கிட்ட இருந்து வாங்கிக்கறேன்..!

    ReplyDelete
  2. அருமையான விமர்சனம். கதையை வாசிக்கத்தூண்டும் வரிகள்

    ReplyDelete
  3. விமர்சனம் அரும மட்டுமல்ல வாசிக்கும் ஆவல் வரத்தான் செய்கின்றது....ஆனால் உங்கள் எச்சரிக்கை சென்சார் போர்ட் போவதற்கே சென்சார் போடுகின்றதே!!ம்ம்ம்ம்

    ReplyDelete
  4. கதையினை முழுமையாக விமர்சன வடிவில் தந்தமைக்கு நன்றி. மதிப்புரையைப் படிக்கும்போதே நாவலைப் படித்ததுபோல இருந்தது.

    ReplyDelete
  5. நிஜத்தை பிரதிபலிக்கும் நிழல் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete

இது... உங்க ஏரியா!