Thursday, November 20, 2014

தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் - திரு. மாரி செல்வராஜ்


சொல்ல வந்த விசயத்தை வாசகர்களுக்கு புரியும் வண்ணம் அதே நேரத்தில் ரொம்ப இழுக்காமல் சொல்வதில் இருக்கிறது படைப்பாளியின் வெற்றி இரகசியம், அதை மிக நேர்த்தியாக செய்திருக்கிறார் திரு. மாரி செல்வராஜ். கொஞ்சமும் ஒப்பனைகளற்ற எழுத்துக்களின் குவியல் தான் இந்த "தாமிர பரணியில் கொல்லப் படாதவர்கள்". கடினமான வார்த்தைகளை கொண்டு தான் இலக்கியம் படைக்கவேண்டுமென்ற நெறியை தனது இலகுவான வார்த்தைகளினால் உடைத்தெரிந்திருக்கிறார். 



சற்றும் தொய்வில்லாமல் நகர்கிறது ஒவ்வொரு கதையும், முடிவுகள் மனதை பிசைந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கதையின் முடிவும் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த வலியை இறக்கி வைக்க முடியாமல் போனாலும், மறந்து போகவேணும் கொஞ்சம் அவகாசம் தேவைப்படுகிறது. 

இந்நூல் பேசப்படுவதற்கு முக்கிய காரணம், கதைகளையும், அதன் மாந்தர்களையும் கற்பனையில் புனையாமல், வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களையும் கருப்பொருளாக்கி படைத்திருக்கிறார் என்பது வாசித்து கொண்டிருக்கும்போதே விளங்கி விடுகிறது. அதுதான் வலிமையான படைப்பாக காரணமாயிருக்கிறது. 

நூலாசிரியரைப் பற்றி:




இயக்குனர் ராம் அவர்களிடம் உதவி இயக்குனராக தனது பணியை துவங்கி தனது பயணத்தை செலுத்திக் கொண்டிருக்கும் திரு. மாரி செல்வராஜ் விரைவில் இயக்குனர் அவதாரம் எடுப்பதற்கு வாழ்த்துக்களை சொல்லிவிடுவோம்.

"காட்சி" இணைய தளத்தில் வந்தவைகளை சின்ன சின்ன மாற்றங்கள் செய்து "தாமிர பரணியில் கொல்லப் படாதவர்கள்" என்ற நூலாய் நமக்கு வழங்கியிருப்பதாக ஆசிரியரே முன்னுரையில் சொல்லியிருக்கிறார். 

தற்பொழுது பிரபல வாரப் பத்திரிக்கைகளில் இவரின் பெயரை அதிகம் காண முடிகிறது, நல்ல படிப்பாளி தான் தரமான படைப்பை கொடுக்க முடியும்.

நூலைப் பற்றி:

இதிலிருக்கும் மூன்று கதைகளைப் பற்றி மட்டும் சுருக்கமாக சொல்லிவிடுகிறேன். 

1) அடுக்கு செம்பருத்தி:

பால்ய வயதில் சக மாணவியின் மீது நண்பன் கொண்ட காதல் தோல்வியினால் தற்கொலை செய்து கொண்டதையும், பின்னர் அந்த மாணவியை பழி வாங்கிய நிகழ்வையும் பளிச்சென்று சொன்ன விதம் சிறப்பு. கடைசியில் அப்பெண்ணை சந்திப்பதும், அதன் சூழலையும் சொன்னது "நறுக்". 


2) இரயில் எனக்கு பிடிக்காது:

இக்கதை அவ்வளவு எளிதில் மனதை விட்டு அகலாது, அப்படியொரு பாரமான கதை. ஒருவன் வெறுப்பாய் மாடு மேய்க்க சென்று அம்மாட்டின் மீது பரிவும் பாசமும் வருகையில், அம்மாடு இறந்து போவதை விவரித்த விதத்தில் நெஞ்சம் கனத்துப் போகிறது. வாழ்க்கையில் ஒரு முறையேனும் வாசித்து விடுங்கள்.


3) நின்றெரியும் பிணம்: 

கதிரேசன், தன்னைவிட தாழ்த்த பட்ட ? ஒரு குடும்பத்தார் மீது கொண்ட அன்பினால், சொந்த அத்தை, மாமாவே அவனுக்கு என் பெண் கிடையாது என்று சொல்வதோடு மட்டுமில்லாமல் பெரும் பழியொன்றை சுமத்த, தற்கொலை செய்து கொள்கிறான். எவ்வித பூச்சுமின்றி இயல்பான விவரணைகள். 

இன்னும் சொல்ல நிறைய கதைகள் இருந்தாலும் இந்த மூன்றும் போதுமென்று நினைக்கிறேன். வாசிப்பவனை எளிதில் வசீகரிக்க கூடிய திறமை கொண்ட எழுத்து. இறுதியாக "தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்" கதையல்ல அது வாழ்க்கை. அதை வாசித்து உணர்ந்து கொள்ளுங்கள்.

தாழ்த்தப்பட்டவன் என்று அனுதாபம் தேடும் "சில" படைப்பாளிகளுக்கு மத்தியில் தன்னுடைய வலியை அழுத்தமாகவும், உணர்வுப் பூர்வமாகவும் பதிவு செய்த திரு. மாரி செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்களும், வணக்கங்களும்.

========================================================================

வெளியீடு : வம்சி புக்ஸ் 

விலை : 150/-

மொத்தப் பக்கங்கள்: 200

========================================================================

படித்துச் சொன்னது:

அரசன் 
  
  

2 comments:

  1. வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களையும் கருப்பொருளாக்கி படைத்திருக்கிறார்... அருமை ... நிஜத்தை நிழலாக்கியிருக்கிறார் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete

இது... உங்க ஏரியா!