Sunday, August 10, 2014

உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை

புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். ‘பதவியில் இருப்பவர்கள் தங்கள் சொத்துக் கணக்குகளை பகிரங்கமாக வெளியிட வேண்டும்’ என்று சொன்னதன் காரணமாக தி.மு.க.விலிருந்து விலக்கப்பட்டிருந்த காலகட்டம் அது. அவரைச் சேர்ந்த நண்பர்கள், நலம் விரும்பிகள் எல்லோரும் அவரிடம் தனிக் கட்சி ஒன்று தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்கள். அவர் அந்த முடிவுக்குச் சட்டென்று வந்து விடவில்லை. அதே காலகட்டத்தில் மற்றொரு பெரும் பொறுப்பும் அவரைச் சூழ்ந்து அழுத்திக் கொண்டிருந்தது. தன் சொந்த நிறுவனமான எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்க்காக அவர் பெரும் பொருட்செலவில் தயாரித்து இயக்கிக் கொண்டிருந்த பிரம்மாண்ட ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் முக்கால்வாசி உருவாகி முடிந்திருந்த நிலையில் அதன் வெளியீடு என்பதே அந்தப் பொறுப்பு.

கலைஞர் கருணாநிதியின் தலைமையிலான தி.மு.க. அரசு படத்தை ஓடவிடாமல் தடுக்க எல்லாவற்றையும் செய்தது. போஸ்டர்கள் ஒட்டுவதற்குத் தடை விதித்தது. மதுரை முத்து ‘படம் மதுரையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிவிட்டால் நான் புடவை கட்டிக் கொள்கிறேன்’ என்று சவால் விட்டார். வாத்யார் ஸ்டிக்கர்களை அச்சடித்து அவைகளை பஸ்களில் ஒட்டி (அதுவரை இல்லாத புதுமை இது அந்நாளில்) விளம்பரம் செய்து, படம் ஓடும் தியேட்டர்களில் தனிப்படை அமைத்து ரசிகர்களுக்கு பாதுகாப்பளித்து படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கினார். அதுவரையிலான தமிழ் சினிமா வசூல் ரெகார்டுகளை முறியடித்தது அந்தப் படம் என்பதுடன் மதுரை முத்துவுக்குப் புடவைகள் வந்து குவிந்தன. (அவர் தனியா புடவைக் கடை வெச்சாரான்னு தெரியல).

இப்படி படத்தின் வெற்றிக்குப் பின்னிணியில் பல சுவாரஸ்யங்கள் இருக்க. படம் உருவான விதத்திலும் நிறைய சுவாரஸ்யங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை படம் வெளியான பின் வாத்யாரே ‘பொம்மை’ சினிமா இதழில் தொடராக எழுதினார்.  அவற்றைத் தொகுத்து விஜயா பதிப்பகத்தினர் (கோவை அல்ல, சென்னை) ‘உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை’ என்று நூலாக வெளியிட்டுள்ளனர். வாத்யாரின் விவரிப்பில் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கங்களும் பரபரவென்று நகர்கிறது. புத்தகத்தில் நிறையத் தூவப்பட்டுள்ள புகைப்படங்கள் நூலுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.

வாத்யாரின் படங்களில் திரைக்கதை மிகக் கச்சிதமாக அமைக்கப்பட்டிருக்கும். கதை விஷயத்தில் அத்தனை தேர்ந்த ஞானம் அவரிடம் உண்டு. இந்தப் படத்தைப் பொறுத்தவரை படத்தின் வசனகர்த்தா சொர்ணத்துக்கும், இயக்குனர் மேற்பார்வையாளரான ப.நீலகண்டனுக்கும்கூட முழுக்கதை தெரியாமலேயே பயணப்பட்டிருக்கிறார்கள். கதை என்பது வாத்யார் ஒருவரின் மனதில் மட்டுமே இருந்திருக்கிறது என்பது எத்தனை வியப்பான தகவல். அது வாத்யாரின் வார்த்தைகளில்....

அவரிடம் (ப.நீலகண்டன்) ‘உலகம் சுற்றும் வாலிபன்’ கதையின் ஆரம்பத்தைச் சொல்லி இருந்தேன். அதாவது விஞ்ஞானி ஒருவன் தான் கண்டுபிடித்திருந்த புதிய விஞ்ஞான யுக்தியை தன்னைப் போன்ற விஞ்ஞானிகள் மத்தியில் செயல்படுத்திக் காண்பிக்கிறான். தன் உழைப்பின் விளைவாக உருவான புதிய சாதனை உலகை அழிக்கும் அழிவு சக்தியாக மலர்ந்திருப்பதை மற்றவர்கட்குச் செயல்படுத்திக் காண்பிக்கிறான். அந்த ஆராய்ச்சிக் குறிப்புகளையெல்லாம் அந்த விஞ்ஞானிகளின் எதிரிலேயே தீயிட்டுக் கொளுத்தி விடுகிறான். ஆனால் ஒரு விஞ்ஞானி இந்தக் கூற்றை நம்புவதில்லை. அதன் நகல் எங்காவரு இருந்தே தீரும் என்ற எண்ணத்தில் முன்னவனைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துவிட்டு அவன் செத்துவிட்டதாக உலகத்தை நம்பச் செய்து விடுகிறான். இளம் விஞ்ஞானியின் தம்பி இதை நம்பாமல் அண்ணனைத் தேடிப் புறப்படுகிறான். -இவ்வளவுதான் நான் அவருக்குச் சொல்லியிருந்தேன். அதுவும் குறிப்பாகத்தான். இவ்வளவு விளக்கமாகக் கூட அல்ல. நான் என்ன எடுக்கப் போகிறேன், எப்படிப்பட்ட காட்சிகளை உருவாக்க இவ்விதப் பெரிய பயணத்தைத் துவங்கி இருக்கிறேன்... இந்த விவரம் எல்லாம் அப்போது அவரிடம் இல்லை. ஆகவே அவர் சிந்தனையில் ஆழ்ந்திருந்ததற்குக் காரணம் ‘இத்தனை பேருடன் புறப்பட்டுச்  செல்கிறோமே, பிறர் நம்மைக் கேலி செய்யாத அளவுக்காவது ஏதாவது காரியம் ஆற்றிவிட்டு வரவேண்டும் என்ற அச்சம்தான் என்பது உண்மையாகத் தானிருக்கும்!

இப்படி தீர்மானமான திரைக்கதை இல்லாமலேயே வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு இன்றளவும் பார்த்தால் விறுவிறுப்பான திரைக்கதை அமைந்த படமாக ‘உ.சு.வா.’வை உருவாக்கணும்னா வாத்யாரால மட்டும்தான் சாத்யம். எப்படி வந்துச்சு வாத்யாருக்கு இந்த தைரியம்...? சொல்றாரு....

‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை வெளிநாடுகளில் படமெடுக்கும் துணிவை எனக்கு ஏற்படுத்தியவை ஜெய்ப்பூரில் நான் ‘அடிமைப்பெண்’ எடுத்ததால் ஏற்பட்ட அனுபவமும், நண்பர்களின், கலைஞர்களின் திறமையும். ஒத்துழைப்பும்தான் என்பதை நிறை மனதோடு நான் சொல்லியே தீர வேண்டும்’

க்ளைமாக்ஸைப் படமாக்க அப்போது ஜப்பானில் பிரம்மாண்டமாக நடந்து கொண்டிருந்த ‘எக்ஸ்போ 70’ தொழிற்பொருட் காட்சியை தேர்வு செய்திருந்தார்கள். ஜப்பான் செல்ல விசா, அன்னியச் செலாவணி கிடைக்க பட்ட கஷ்டங்கள். அங்கே பொருட்காட்சிக்கு உள்ளே செல்ல அதிக நபர்களுக்கு அனுமதி கிடைக்காமல், கேமராவையும் மற்ற தளவாடங்களையும் அவர்களே சுமந்து சென்று உடை. கெட்டப் மாற்றி நடிக்க வேண்டி இருந்த சிரமங்கள் என்று ஒவ்வொன்றையும் வாத்யாரின் விவரிப்பில் படிக்கப் படிக்க படமாக மனதினுள் விரிகிறது. கூடவே போனஸாக அவர் சொல்லும் வெளிநாட்டுத் தகவல்கள், அசோகன், நாகேஷ், மஞ்சுளா தொடங்கி அவரது உழைப்பில் பங்கெடுத்த ஒவ்வொருவரைப் பற்றியும் சொல்வது என்று முதல் பக்கத்தில் துவங்கிய என் கண்ணின் ஓட்டம் கடைசிப் பக்கத்தில்தான் ஓய்ந்தது.

=================================================
‘உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை’, வெளியீடு : விஜயா பப்ளிகேஷன்ஸ், 23/9, நேதாஜி நகர் முதல் தெரு, அசோக் நகர், சென்னை - 600 083.  பக்கங்கள் : 176. விலை : ரூ.120
=================================================

Sunday, August 3, 2014

தமிழ் பேசுகிறார் ஹாரிபாட்டர்!

ஹாரிபாட்டர்..! தன்னை உருவாக்கிய ஜே.கே.ரோலிங் என்ற பெண்மணியை உலகப்புகழ் பெற வைத்த கதாபாத்திரம்! 7 நாவல்கள் அடங்கிய ஹாரிபாட்டர் கதைகள் பல விமர்சனங்களுக்கு உள்ளானாலும்கூட முதல் நாவல் வெளியான 1997ம் ஆண்டிலிருந்து கடந்த 2013 வரை 450 மில்லியன் பிரதிகளுக்கு மேல் ஹாரிபாட்டர் புத்தகங்கள் விற்றுத் தீர்ந்துள்ளன. ஹாரிபாட்டரின் கடைசி 7வது புத்தகம் வெளியான 24 மணி நேரத்திற்குள் 11 மில்லியன் காப்பிகள் விற்று சாதனை படைத்திருக்கிறது. உலகெங்கிலும் இதுவரை 73 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.  (இப்போது  தமிழுடன் சேர்த்து 74)

பிரிட்டிஷ் பெண்மணியான ஜே.கே.ரோலிங் ஒரு ரயில் பயணத்தின் போது அவர் மனதில் தோன்றிய ஹாரிபாட்டர் கதைக்கான கருவைக் கதையாக வளர்க்க இந்த 7 நாவல்களும் உலகப் புகழ் பெற்று விற்பனையில் சாதனை படைத்து ரோலிங்கை கோடீஸ்வரியாக்கி விட்டன. (நானும் ரயில் பயணம் பண்றப்பல்லாம் மண்டையக் குலுக்கி புரட்டித்தான் பாக்குறேன்.. ஒண்ணும் தோண மாட்டிங்குது..... அவ்வ்வ்வ்வ்). இப்படி ஒரே கதாபாத்திரத்தை வைத்து தொடர் நாவல்களாக தமிழில் எழுதினால் அந்த எழுத்தாளர் கோடீஸ்வரர் இல்லை... லட்சாதிபதியாகக் கூட சாத்தியமில்லை. ஆங்கில மொழியின் வீச்சு அத்தகையது.

அப்படி என்னதான்யா இருக்குது இந்தக் கதைங்கள்லன்னு படிக்கறதுக்கு நிறையவே ஆசை இருந்தாலும் இங்கிலீசுல படிச்சு அதை மனசுல தமிழாக்கிப் புரிஞ்சுக்கற அளவுக்கு நமக்கு ‘சமாசாரம்’ இல்லங்கறதால அந்த ஆசைய விட்டுட்டேன். சமீபத்துல ஹாரிபாட்டர் முதல் இரண்டு பாகங்கள் தமிழ்ல பெயர்க்கப்பட்டு வந்திருக்குன்னு பார்த்ததுமே வாங்கிட்டு வந்துட்டேன்.  முதல் புத்தகத்துல கேரக்டர்களை அறிமுகப்படுத்தி பேஸ்மெண்ட் போட்ருக்கறதால மெதுவாத்தான் படிக்க முடிஞ்சது. ரெண்டாம் பாகத்தை ஜெட் வேகத்துல படிச்சு முடிச்சுட்டேன்.

நம்ம நாட்ல விக்கிரமாதித்தன் கதைகள்னு ஒண்ணு இருக்கு. விக்ரமாதித்தன் தன் தம்பி பட்டி, வேதாளம் துணையுடன் மந்திரக் கம்பளத்தில் பறப்பார். நினைத்த உருவத்துக்கு மாறுவார். தன் மந்திர வாளால எப்பேர்ப்பட்டவனையும் வெட்டி வீழ்த்துவார் (கூடவே பாக்கற பொண்ணையெல்லாம் கல்யாணமும் செஞ்சுப்பார், ஹி... ஹி.. ஹி...) இப்படிப் பல சாகசங்கள் நிரம்பியதாயும் கதைக்குள் கதைக்குள் கதை என்று அவை எழுதப்பட்ட விதமும் பிரமிப்பைத் தரும் விஷயம். அத்தோட ஒப்பிட்டா ஹாரிபாட்டர் பொடியன்னுதான் சொல்லணும். ஆனாலும் இந்த மந்திர மாய விஷயங்கள் மேல்நாட்டினருக்குப் புதுசுன்றதாலயோ என்னவோ உலகப்புகழ் அடைஞ்சுட்டான் ஹாரிபாட்டர்.

ஹாரிபாட்டரை உரிச்சா... முதல் பாகமான ‘ஹாரிபாட்டரும் ரசவாதக்கல்லும்’ நாவல். வோல்டமார்ட் என்கிற தீய மந்திரவாதியுடன் மோதியதில் ஹாரியின் தாய் தந்தையர் இறந்துவிட. அதற்குப்பின் வோல்டமார்ட்டும் மறைந்துவிட, கைக்குழந்தையான ஹாரியை மந்திர மாயாஜாலங்கள் கற்றுத்தரும் ‘ஹாக்வர்ட்ஸ்’ பன்ளியின் தலைமையாசிரியரான டம்பிள்டோர் அவன் பெரியப்பா மற்றும் பெரியம்மாவிடம் சேர்ப்பிக்கிறார்.  ஹாரியின் பெற்றோர் மந்திரவாதிகளான காரணத்தால் அவர்களை வெறுக்கும் அந்தக் குடும்பத்தில் கஷ்டங்களை அனுபவித்து வளரும் ஹாரி. வளர்ந்ததும் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக ஹாக்வர்ட்ஸ் பள்ளியில் சேர்கிறான். 

அங்கே அவனுக்கு ரான் என்கிற தோழனும் ஹெர்மயனி என்கிற தோழியும் கிடைக்கிறார்கள். மால்பாய் என்கிற எதிரியும் உருவாகிறான். மந்திரத் துடைப்பத்தால் விண்ணில் பறந்து விளையாடும் ‘குவிடிச்’ என்ற விளையாட்டில் சாம்பியனாகும் ஹாரி. அவ்விளையாட்டின் போது யாரோ தன்னை அழிக்க முற்படுவதை உணர்கிறான். தன் நண்பர்கள் உதவியுடனும் அவனுக்குக் கிடைக்கும் தந்தையின் சொத்தான மறைய வைக்கும் கம்பளத்தின் உதவியுடனும் துப்பறிதலில் ஈடுபடுகிறான். டம்பிள்டோரின் நண்பர் உருவாக்கிய ரசவாதக் கல்லைக் கைப்பற்றுவதற்காகத்தான் இவ்வளவும் நடைபெறுகிறது என்பதையும் வோல்டமார்ட்தான் அங்கிருக்கும் நபர் ஒருவரைக் கைப்பற்றி இதில் ஈடுபட்டதையும் அறிகிறான். ஹாரி அண்ட் ப்ரண்ட்ஸ் ஊகித்த நபராக அல்லாமல் வேறொருவர்தான் வோல்டமார்ட்டின் புகலிடம் என்பதைத்  தெரிந்து திடுக்கிட்டலும் துணிவாக மோதும் ஹாரி. வோல்டமார்ட்டை அழிக்கிறான்.

இரண்டாம் பாகமான ‘ஹாரிபாட்டரும் பாதாள அறை ரகசியங்களும்’ நாவலில் இரண்டாமாண்டு மாணவனாக இருக்கும் ஹாரி, ரான் குடும்பத்தினருடன் மிக நெருக்கமாகிறான்.  சாதாரணமாகத் துவங்கும் அப்பள்ளியாண்டில் அசாதாரண சம்பவங்கள் நிகழத் துவங்குகின்றன. ஒரு மாணவியும், பேராசிரியரின் பூனையும் கல்லாக்கப்படுகின்றனர். அந்த இடத்தின் சுவரில் பாதாள அறை திறக்கப்பட்டு விட்டதாகவும், அதிலிருக்கும் ரகசிய விலங்கு வெளிப்பட்டு விட்டதால் எச்சரிக்கை என்றும் எழுத்துகள் மின்னிக் கொண்டிருக்கின்றன. அந்த மர்ம விலங்கின் குரல் அவ்வப்போது ஹாரிக்கு மட்டும் கேட்கிறது. நிஜமாகவே பாதாள அறை இருக்கிறதா? அதிலிருக்கும் ரகசிய விலங்கு என்ன? எப்படி அதன் குரல் ஹாரிக்கு மட்டும் கேட்கிறது என்கிற கேள்விகளுக்கு விடை தேடி துப்பறிய முற்படுகின்றனர் ஹாரி அண்ட் பிரண்ட்ஸ்.

பரபரப்பான சில திருப்பங்களுக்குப் பின் அந்த விடையை நெருங்கிக் கண்டறிகிற சமயத்தில் ஹெர்மயனியும் சிலையாக கண்டெடுக்கப்படுகிறாள். அவள் கையிலிருக்கும் ஒரு துண்டுச்சீட்டின் துப்பு மூலம் ரகசியத்தின் திறவுகோலை அறியும் ரானும் ஹாரியும் பாதாள அறையினுள் நுழைகின்றனர். அங்கே ரானைப் பிரிந்து ஹாரி தனியாக எதிரியுடனும் அந்த விலங்குடனும் மோத நேரிடுகிறது. இம்முறையும் அந்த விலங்கையும் எதிரியான வோல்டமார்ட்டையும் அழித்து ஜெயிக்கிறான் ஹாரி. கல்லாக்கப்பட்டவர்கள் மீண்டும் மனிதர்களாக்கப்படுகிறார்கள்.

மந்திரத் துடைப்பத்தில் பறப்பது, மாய அங்கியால் மறைவது. பேசும் குதிரை மனிதர்கள். கல்லூரியில் வசிக்கும் கெட்ட. நல்ல ஆவிகள், பறக்கும் கார், ராட்சத சிலந்திகள் என்று சகல மாயமந்திர மசாலா சமாச்சாரங்களும் தூவப்பட்டு விறுவிறுப்பாகத்தான் இருக்கின்றன ஹாரிபாட்டர் கதைகள். வர்ணணைகள் அப்படி இப்படி என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் சிம்பிளான எழுத்துநடை ஜே.கே.ரோலிங்கினுடையது. அதனால் படிப்பதற்கு சுவாரஸ்யம் என்பது என் கருத்து. அதேபோல அடுத்தடுத்து ஒவ்வொரு விஷயமாக அவர்கள் துப்பறிந்து கண்டுபிடிப்பதும், க்ளைமாக்ஸில் வரும் எதிர்பாராத திருப்பங்களும் மர்மக் கதைக்கான இலக்கணக் கட்டுக்கோப்பையும் கொண்டிருப்பதால்தான் இந்தத் தொகுதிகள் இப்படி உலகளாவிய வெற்றியைக் கண்டிருக்கின்றன.

முதல் பாகம் 299 ரூபாய் விலையிலும் இரண்டாம் பாகம் 350 ரூபாய் விலையிலும் கிடைக்கிறது. பி.எஸ்.வி.குமாரசாமி என்பவர் தமிழாக்கம் செய்திருக்கிறார். குறை சொல்ல முடியாதபடி எளிமையாகவே இருக்கிறது தமிழாக்கம். மஞ்சுள் பப்ளிகேஷன்ஸ் லிமிடெட்னு போபால்ல இருக்கற கம்பெனி வெளியிட்டிருக்குது. 

Thursday, July 31, 2014

தாயார் சன்னதி - திரு. சு.கா.


சில புத்தகங்களை முடிக்கும் வரை கீழே வைக்க மனம் இடம் கொடுக்காது, ஆனால் சில புத்தகங்களை இடைவெளி விட்டுத்தான்  வாசித்தாக வேண்டுமென மனம் கூப்பாடு போடும். அந்த வரிசையில் இரண்டாம் இரகத்தை சேர்ந்தது இந்த தாயார் சன்னதி. அதற்காக புத்தகம் வேறு மாதிரியோ என்ற ஐயம் வேண்டாம். மழைக்கால சாயந்திர வேளைகளில் நொறுக்குத் தீனியோடு கிடைக்கும் வெது வெதுப்பான தேநீர் போல சுவையான புத்தகம்! வளர்ந்து வரும் எழுத்தாளர் திரு. சீனு அவர்கள், உச்சி வெயில் மண்டையை பதம் பார்க்கும் ஒரு மதிய வேளையில், "தலைவரே இது உங்கள் இரசனைக்குரிய புத்தகம், தொடர்ந்து வாசிக்க வேண்டாம், இடைவெளி விட்டு வாசித்தால் உங்களுக்கே காரணம் புரியும்" என்று சொல்லி கொடுத்தார்! அவர் சொன்னது போல் சின்ன சின்ன இடைவெளி விட்டே வாசித்தேன்!  அழகான புத்தகம்!


ஆசிரியரைப்பற்றி....

சுகா எனும் பெயரில் எழுதி வரும் திரு. சுரேஷ், திருநெல்வேலியை சார்ந்தவர். விகடனின் "மூங்கில் மூச்சு" என்ற தொடரின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தவர்! அமரர். பாலு மகேந்திராவின் வளர்ப்புகளில் இவரும் ஒருவர். விரைவில் திரைப்படங்களில் இயக்குநர் என்ற இடங்களில் இவரின் பெயரை பார்க்கலாம் என்று நம்புகிறேன்! மேலும் திரு. சுகாவை பற்றி அறிய வேணுவனம் செல்லுங்கள். 



நூலைப்பற்றி ...

முதலில் இவரின் எழுத்தைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும், ரொம்பவும் மெனக்கெடாமல் தானாக வந்து விழும் வார்த்தைகள் இவரின் நடை. திருநவேலி மீது இவரிருக்கும் காதலை நுணுக்கமாக சொல்லியிருக்கிறார் என்பதை இந்நூலை வாசித்தவர்களுக்கு விளங்கும்! தேர்ந்த இசை ஞானம் உள்ளவர் என்பதற்கு இந்நூலின் உள்ள சில கதைகளே சாட்சி! இரண்டு பதிப்புகளை கடந்து மூன்றாம் பதிப்பாக வந்திருக்கும் இந்நூல் 45 குறுங்கதைகளால் நிரம்பியிருக்கின்றது! ஒவ்வொன்றும் திருநவேலியை மட்டுமே சுழன்றாலும் இடையிடையே இவரின் வாத்தியார் பற்றியும், மற்றும் சினிமா உலக நண்பர்கள் பற்றியும் பேசுவது படிக்க சுவையாக இருக்கிறது.

உச்சிமாளி, சொக்கப்பனை, கோட்டி, தாயார் சன்னதி, பிரமனாயகத் தாத்தாவும் விஜயலலிதாவும், க்ளோ, இடுக்கண் களைவதாம், சந்திராவின் சிரிப்பு, பாம்பு என்ற பூச்சி, சின்னப்பையன், யுகசந்தி இவைகள் படித்தவுடன் மனதில் பதிந்துவிடும் தன்மை கொண்டவைகள்...       

இசையைப் பற்றி வரும் சில இடங்களில் என் போன்ற இசை ஞானம் அறவே இல்லாதவர்கள் கொஞ்சம் பொறுமை இழக்க கூடிய அபாயமும் இருக்கிறது! மற்றபடி வாசிப்பவர்களை நிச்சயம் இந்நூல் ஏமாற்றாது என்பது கருத்து... 

பதிப்பகம் : சொல்வனம் 
வெளியீடு : கிழக்கு பதிப்பகம் 
மொத்தப் பக்கங்கள் : 280.
விலை : 200/- 

படித்து சொன்னது: அரசன் 
http://karaiseraaalai.blogspot.in/

Wednesday, July 16, 2014

ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர்

1944ஆம் ஆண்டு அக்டோபர் பதினாறாம் தேதி - தீபாவளித் திருநாள் - அன்று வெளியான ஹரிதாஸ் திரைப்படம் தொடர்ந்து 110 வாரங்கள் ஓடியது. அதாவது எண்பது வருட தமிழ்த் திரையுலகில் மூன்று தீபாவளிகளைக் கண்ட ஒரே படம் இது தான். மயில்கண் சரிகை வேஷ்டி, சில்க் சட்டை, ஜவ்வாது மணம், பளபளக்கும் சரீரத்துடன் அனைவரையும் வியக்க வைக்கும் சாரீரத்தையும் பெற்றிருந்த எம்.கே.தியாகராஜா பாகவதர்தான் அந்த சாதனையின் நாயகன்.

Sunday, July 13, 2014

எ.மூ.வீ.நாத் படைத்த ‘பணம்!’

திகாலத்தில் மனிதர்கள் தங்களிடமிருக்கும் பண்டங்களைக் கொடுத்து அதற்கு மாற்றாக தங்களுக்கு வேண்டிய பண்டங்களைப் பெற்றுக் கொண்டு வாழ்க்கை நடத்தினர். இந்தப் பண்டமாற்று முறையை மாற்றி மன்னராட்சிக் காலத்தில் செப்புக் காசுகளும், பொற்காசுகளும் புழங்கலாயின. பின்வந்ததுதான் கரன்சி என்கிற பணம். மனிதன் தன் வசதிக்காகக் கண்டுபிடித்த, அவனின் கட்டுப்பாட்டில் இருந்த பணம் நாளடைவில் மனிதனைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து ஆதிக்கம் புரியலாயிற்று.

பணம் சம்பாதிப்பதையே வெறியாகக் கொண்டு மனிதர்களைச்  செயல்படச்  செய்தது. நிறையப் பணம் இருப்பதால் கிடைக்கும் வசதிகளும், செல்வாக்கும் மனிதர்களுக்குப் போதை தர, பிறரை மதிக்காத, அந்தஸ்து என்கிற ஒன்றை பெரிதாகக் கருதும் குணத்தை அது ஏற்படுத்தியது. பணத்தை அடைவதற்காக எத்தகைய சூழ்ச்சிகளும், துரோகங்களும் செய்கிற துணிவை மனிதர்களுக்கு அது ஊட்டியது. 

பிரபல எழுத்தாளரான எண்டமூரி வீரேந்திரநாத் எழுதி ஆந்திர மக்களிடம் பெரும் வரவேற்பைப்  பெற்று ஹிட்டடித்த நாவல் ‘டப்புடப்பு’ நாவல் இதைத்தான் அலசியது. தமிழில் சுசீலாகனகதுர்கா அவர்களால் ‘பணம்’ என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது இந்த நாவல். 

காந்தி படித்த வேலையற்ற இளைஞன். மிகபுத்திசாலி, கணக்கில் புலி. தாயார் இறந்தசமயம் இறுதிச் சடங்குகள் செய்யவும் பணமில்லாத அளவு வறுமை. பணக்காரர் ராஜாராமின் மனைவியை ஹார்ட் அட்டாக்கினால் அட்மிட் செய்ய வந்திருக்க, அவர் மகள் ஹாரிகாவிடம் தன் கணிதத் திறமையைக் காட்டி பணம் சம்பாதித்து, தன் தாயை உலகிலிருந்து வழியனுப்புகிறான். பின் வாழ்க்கையில் வெறுப்புற்று, காலில் கல்லைக் கட்டிக் கொண்டு ஆற்றில் குதிக்கிற காந்தி, அங்கே ஒரு பெண் ஆற்றில் தத்தளிப்பதைக் கண்டு அவளைக் காப்பாற்றுகிறான். அவள் பெயர் லக்ஷ்மி. காந்தியினுள் தன்னம்பிக்கையை விதைக்கிறாள் அவள்.

பேப்பரில் வித்தியாசமான ஆட்கள் தேவை விளம்பரத்தைப் பார்க்கும் காந்தி அதற்கு (வேண்டுமென்றே) ஸ்டாம்ப் ஒட்டாத கவரில் விண்ணப்பிக்கிறான். அந்த விளம்பரம் தந்தவரான ராஜாராம் அவனை இண்டர்வியூவுக்கு அழைக்கிறார்.  பேசுகையில் காந்தி மிக அறிவாளி என்பதை கணக்கிடுகிறார் அவர். பணம் சம்பாதிப்பதற்கும் பிறரை மோசம் செய்வதற்கும் தொடர்பு இருந்தே தீரும் என்கிற காந்தியின் சித்தாந்தத்தை மறுத்து விவாதிக்கிறார். ஒரு கட்டத்தில் ஐந்து வருஷத்தில் ஐம்பது லட்சம் சம்பாதிப்பது ஒன்றும் முடியாத காரியமில்லை என காந்தி சொல்ல, அதுவே பந்தயமாகிறது அவர்களுக்குள். அப்படி அவன் சாதித்துவிட்டால் தன் மகளைத் தருகிறேன் என்று உணர்ச்சி வசப்பட்டு பந்தயமிடுகிறார் ராஜாராம். சம்பாதிப்பதற்கான நிபந்தனை - சட்டத்திற்குப் புறம்பாக ஒரு பைசாகூட சம்பாதித்திருக்கக் கூடாது என்பது.

கோடீஸ்வரனிடம் பந்தயம் போட்டுவிட்டு வந்த காந்தியின் கையில் அப்போது இருப்பது பத்துப் பைசா மட்டும்தான். ‘நீ என்ன அமிதாப்பச்சனா, மே கஸம் கர்தாஹும்னு சவால் விட்டு ஜெயிக்கறதுக்கு’ என்று கேலி செய்யும் லக்ஷ்மி அவனுக்கு துணை செய்கிறாள். சம்பாதிக்கத் துவங்குகிறான். அந்தக் கடினமான போராட்டத்தில் பணம் அவனுக்கு வசப்பட்டு பணக்காரனாகும் நேரம். பரபமபத பாம்பு கடித்தாற் போன்று நஷ்டம் தாக்கி மீண்டும் பழைய நிலையை அடைகிறான். பின்னே... அவனை ஜெயிக்கவிட்டு  மகளைத்தர ராஜாராம் முட்டாளா என்ன.... அவர் செய்த திட்டம் (சூழ்ச்சி?)யின் விளைவுதான் அது.

அப்போது பந்தயம் விட்டு நான்காண்டுகள் நிறைந்திருக்கின்றன. எஞ்சிய ஓராண்டு தீர்மானிக்கப் போகிறது அவன் வெற்றியாளனா இல்லை தோற்றவனா என்று. அந்த சுவாரஸ்யமான போட்டியில் ராஜாராமை மீறி காந்தி எப்படி சாதித்தான்? லக்ஷ்மி அவனை விரும்ப, ஹாரிகா வெளியே காட்டிக் கொள்ளாமல் மனதிலேயே அவனை விரும்பி அவனுக்கு மறைமுக உதவிகள் செய்ய. இருவரில் யாரை அடைந்தான் அவன்? அவன் பெற்ற வெற்றி உண்மையில் வெற்றிதானா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையை பரபரப்பாக பக்கங்களைப் புரட்ட வைக்கும் ‘பணம்’ புத்தகம் உங்களுக்குப் பகரும்.

மிக சீரியஸான, கனமான ஒரு விஷயத்தைக் கையாளும் போது நிறையத் தகவல்களும் தரவேண்டியிருப்பதால் படிப்பதற்கு விறுவிறுப்பிருக்காது என்ற பொதுக்கருத்தைத் தகர்க்கிற புத்தகம் இது.  அடுத்தடுத்த சம்பவங்களும், துரோகங்களும் சேர்ந்து கதையை விறுவிறுப்பாகப் படிக்கச்  செய்வதுடன் நிறைய விஷயங்களை நமக்கு அதனுனூடாகப் பரிமாறியிருக்கிறார் எ.மூ.வீ.நாத். எப்படி சில  தொழிலதிபர்கள் அந்தத் துறையில் அவர்கள் அறியாமல் ஒரு துரும்பும் அசையாது என்கிற அளவில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதில் துவங்கி பங்குச் சந்தை, ஷேர்கள் போன்ற பணம் சம்பாதிப்பதற்கான ஆதார வழிகளை அலசி, படிப்பவர்களுக்குள் சற்றேனும் விஷயஞானத்தை ஏற்றி விடுகிறார் எ.மூ.வீ.நாத். 

364 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தை சென்னை உஸ்மான் சாலையில் உள்ள பாரதி பதிப்பகம் வெளியிட்டிருந்தது. 1985ம் ஆண்டில் வெளியான பதிப்பு (விலை உள்ள பக்கம் இல்லாததால் தெரியவில்லை). இப்போது கௌரி கிருபாநந்தன் மொழிபெயர்ப்பில் அல்லயன்ஸ் பதிப்பம் வெளியிட்டுள்ளது இந்தப் புத்தகத்தை.

டெய்ல் பீஸ் :  இந்தப் படம் சிரம்சீவி ச்சே... சிரஞ்சீவி, சுஹாசினி நடிக்க படமாக வெளிவந்து தமிழிலும் ‘டப்’பப்பட்டது.  நாவல் நமக்குள் உருவகப்படுத்தும் காந்தி திரையில் இல்லை. சிரஞ்சீவிக்காக சண்டைக் காட்சி, டூயட் காட்சிகள் என்றெல்லாம் வைத்து படுத்தியிருந்தது படம். எ.மூ.வீ.நாத் பார்த்திருந்தால் நிச்சயம் கதறி அழுதிருப்பார்.