Wednesday, July 16, 2014

ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர்

1944ஆம் ஆண்டு அக்டோபர் பதினாறாம் தேதி - தீபாவளித் திருநாள் - அன்று வெளியான ஹரிதாஸ் திரைப்படம் தொடர்ந்து 110 வாரங்கள் ஓடியது. அதாவது எண்பது வருட தமிழ்த் திரையுலகில் மூன்று தீபாவளிகளைக் கண்ட ஒரே படம் இது தான். மயில்கண் சரிகை வேஷ்டி, சில்க் சட்டை, ஜவ்வாது மணம், பளபளக்கும் சரீரத்துடன் அனைவரையும் வியக்க வைக்கும் சாரீரத்தையும் பெற்றிருந்த எம்.கே.தியாகராஜா பாகவதர்தான் அந்த சாதனையின் நாயகன்.





நாடகத்துறையின் மூலம் திரைத்துறையில் நுழைந்து மக்கள் மனதை வென்று 'ஏழிசை மன்னர்' என்ற பட்டம் பெற்றவர். பாகவதருக்கு நாடகங்கள் மீதும் இசையின் மீதும் ஆர்வம் ஏற்பட்டதையும் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்த பின்னணியையும் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் இவர் சிக்க நேர்ந்த விவரத்தையும் விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.

எம்.கே.தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாறு வேறு எந்தப் புத்தகத்தில் வந்திருக்கின்றன என்று தெரியவில்லை. ஆனால் இந்தப்புத்தகம் மிக சுவாரஸ்யம். மேடை நாடகங்களில் நடித்து, பின் பவளக்கொடியில் தொடங்கிய அவரது சினிமா வாழ்க்கை, கொலை வழக்கில் கைதாகி சிறை சென்றது, வழக்கு நடந்த விதம் ஆகியன பற்றி சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர் மாலதி பாலன்.

தமிழில் முதல் பேசும் படமான காளிதாஸ் 1931ஆம் ஆண்டு வெளியானது. அந்தப்படம் வெளியாகி மூன்று வருடங்கள் கழித்து பாகவதர் நடித்த 'பவளக்கொடி' வெளியானது. நாயகன் பாகவதர், நாயகி எஸ்.டி.சுப்புலட்சுமி மற்றும் இயக்குநர் கே.சுப்பிரமணியம் ஆகியோருக்கு இதுவே முதல் படம். முதல்படத்திலேயே இந்தக் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்களின் எண்ணிக்கை அறுபது. தனது இருபத்தொன்பதாவது வயதிலேயே சொந்தப்படம் எடுத்து வெற்றி கண்டவர். மேலும் சொந்தப்படம் எடுத்து கையை சுட்டுக்கொள்ளாத ஒரே நடிகர் இவர்தான்.


பாகவதரின் நாடகத்துறை அனுபவங்கள், திரைத்துறையில் நுழைந்து வெற்றிப்படங்களைக் கொடுத்தது போன்றவற்றைப் படிக்கும்போது வெகு சுவாரஸ்யம். ஒன்பது வெற்றிப் படங்களில் நடித்தது, அதன்பின் லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் சிக்கியது, சிறைவாசம், விடுதலையானபின் அவருடைய திரை வாழ்க்கை என அடுத்து வரும் பகுதிகள் மேலும் சுவாரஸ்யம். மேலும் இந்தப் புத்தகத்தின் பெருமளவு அத்தியாங்கள் இந்தக் கொலைவழக்கை சுற்றியே நகர்கிறது.

லட்சுமிகாந்தன் ஒரு பத்திரிகையாளர். இவர் 'இந்துநேசன்' என்ற மஞ்சள் பத்திரிகையை நடத்திவந்தார். பெரிய மனிதர்களுடைய அந்தரங்க வாழ்க்கையைப் பற்றி எழுதுபவர். 'உன்னைப்பற்றி இந்துநேசனில் எழுதுவேன்' என்று பல பெரிய புள்ளிகளை மிரட்டி பணம் பறித்ததும் உண்டு. இவர் குடியிருந்த வீட்டு தகராறில் வடிவேலு என்பவர் இவரைக் கத்தியால் குத்தியுள்ளார். ஆனால் சாட்சிகளின்படி பாகவதரும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் லட்சுமிகாந்தனைக் கொலை செய்ய வடிவேலுவுக்கு பணம் கொடுத்ததாகவும் சாட்சியங்கள் நிரூபிக்க செஷன்ஸ் கோர்ட் இவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கிறது. இவர்கள் இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவர்களும் தண்டனையை உறுதி செய்கிறார்கள். பின்னர் என்ன ஆனது, எப்படி வெளியே வந்தார்கள், வந்ததும் பாகவதருடைய திரை வாழ்க்கை எப்படி இருந்தது, எப்படி மரணம் சம்பவித்தது என்று மிக சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

பாகவதரின் மனைவி, குழந்தைகள் பற்றிய விவரங்களோ அவருடைய சொந்த வாழ்வு பற்றியோ எதுவும் இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்படவில்லை. இருந்தாலும் லட்சுமிகாந்தன் கொலைவழக்கு பற்றிய விறுவிறுப்பான தகவல்களுக்காக நிச்சயம் படிக்கலாம். 

ஆசிரியர்: மாலதி பாலன்
விகடன் பிரசுரம்
பக்கங்கள்: 200
விலை: ரூ.80

11 comments:

  1. வாவ்.. உங்க விமரிசனத்தை படித்தவுடன் அந்த புத்தகத்தை படிக்கும் ஆவல் மேலிடுகிறது..

    ReplyDelete
  2. நல்லதொரு நூல் அறிமுகத்திற்கு நன்றி... இவரது குரலுக்கும் அடிமை...!

    ReplyDelete
  3. கண்டிப்பாக வாங்கவேண்டுமென்ற ஆவலை தூண்டிவிட்டது தங்களது பதிவு நன்றி.

    ReplyDelete
  4. உங்கள் விமர்சனம் புத்தகத்தை வாங்கி படிக்கத் தூண்டுகிறது.நன்றி.

    ReplyDelete
  5. //மேலும் சொந்தப்படம் எடுத்து கையை சுட்டுக்கொள்ளாத ஒரே நடிகர் இவர்தான்.//

    இல்லை. இவர் சிறைக்குச் சென்று மீண்ட பிறகு எடுத்த ராஜமுக்தி, சியாமளா போன்ற படங்கள் ஓடவில்லை.

    எங்கள் ப்ளாக்கிலும் இந்த நூல் படித்ததன் பகிர்வு வெளியிட்டுள்ளோம்.

    ReplyDelete
    Replies
    1. படம் ஓடவில்லை என்றாலும் பாகவதருக்கு நஷ்டம் ஏற்படவில்லை சார்...

      Delete
  6. எம்.கே.டி யை பற்றி ஏற்கனவே விந்தன் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதை அடிப்படையாக வைத்துதான் சாரு நிவேதிதா "தீராக்காதலி" புத்தகத்தில் பல தகவல்களை அளித்துள்ளார். எம்.கே.டி பற்றி மேலும் விவரங்களுக்கு, மாமல்லன் அவர்களின் பதிவுகளை படிக்கலாம். தீராக்காதலி விமர்சனம் போனஸ். அனைத்து இணைப்புகளின் என் பதிவில் இருக்கின்றது

    http://rengasubramani.blogspot.in/2013/12/blog-post_19.html

    ReplyDelete
  7. அண்ணனுக்கும் ஒன்னு வாங்கி வைங்கய்யா வரும்போது வாங்கிக்குறேன்.

    ReplyDelete
  8. லட்சுமிகாந்தன் கொலைவழக்கு அன்றைய நாளில் மிக பரபரப்பை ஏற்படுதிய விவகாரம் என தெரியும் ... லட்சுமிகாந்தன் மஞ்சள் பத்திரிகையை நடத்தி வந்தாரா? .... அதற்கு 'இந்துநேசன்' என்று பெயரா? ... பார்ரா ... கைப்புள்ளைக்கு தைரியத்த ... அப்போ போட்டுற வேண்டியதுதான் .... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete

இது... உங்க ஏரியா!