Wednesday, July 2, 2014

குற்றப்பரம்பரை - பேரன்பும் பெருங்கோபமும்

படைப்பாக்கம் : சீனு 


அரசன் அறம் புத்தகத்தை என்னிடம் கொடுக்கும் போதேமற்றுமொரு இலவச இணைப்பாக 'வேலராம மூர்த்தியின் கதைகள்' என்ற சிறுகதைத் தொகுப்பையும் கொடுத்து 'அறம் படிக்கையோ இல்லையோ இத மொதல்ல படி' என்று கூறியிருந்தார். வேலராம மூர்த்தியின் கதைகளை முதலில் வாசிக்கத் தொடங்கினேன். அப்படி ஒன்றும் பிரமாதமாய் இல்லை. அல்லது அந்த எழுத்து எனக்குப் புரியவில்லை. சரி அப்புறம் வாசித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் ஒரு ஓரமாய் வைத்துவிட்டேன். புத்தகம் கொடுத்ததில் இருந்து சிலநாட்களுக்கு அரசன் 'யோவ் படிச்சியா படிச்சியா' கேட்டுக் கொண்டே இருந்தார். 'வாசிக்கப் பொறுமையில்லை' என்றேன். 'பரவாயில்ல, பொறுமையா படி ஒன்னும் அவசரம் இல்ல' என்றார். பதிலுக்கு புன்னகையைத் தவிர வேறு எதுவும் கூறவில்லை.



சிறிது நாட்கள் கழித்து 'தலைவரே குற்றப்பரம்பரைன்னு ஒரு நாவல் நம்மாளு வேலராம மூர்த்தி எழுதினது. பட்டாசா இருக்கும் படி' என்று கொடுத்தார். திணித்தார் என்பது கூட ஒருவகையில் சரிதான். 'தலைவரே மொத கொடுத்த புக்கே இன்னும் முடிக்கல அதுக்குள்ள இதுவா, வேணாம்யா நமக்கு செட் ஆகாது' என்றேன். 'இல்ல தலைவரே நீ படிச்சே ஆகனும். தவறவிடக் கூடாத புத்தகம்' என்றார். 

'அரவான் படம் கூடகுற்றபரம்பரை நாவலின் சில பகுதிகள் தான். அட மதயானைக் கூட்டம் படத்துல வில்லனா நடிச்சவர் கூட இவர் தான்' என்று என்னவெல்லாமோ கூறினார். மீண்டும் மறுத்தேன். 'சரி நீ படிக்க வேணாம். ஆனா புத்தகம் உன்கிட்டயே இருக்கட்டும் அப்ப தான் நீ என்னிகாது படிப்ப' என்றபடி திணித்தார். படிக்கக் கூடாது என்றில்லை. படிக்க வேண்டும் என்று வாங்கிய புத்தகங்களே க்யூவில் நிற்க இதையும் வாங்கி என்ன பண்ணவது என்ற தயக்கம்தான். போதாக்குறைக்கு இது இலக்கிய வகையறாப் புத்தகம். நாலு வெங்கயாத்தை கண்ணில் பிழியாமல் விடமாட்டார்கள். இலக்கியம் என்ற பெயரில் வந்த ரா.கா சாலையின் தாக்கமே இன்னும் என்னில் இருந்து விலகவில்லை அதற்குள் இதுவேறா. புத்தகத்தின் பக்கங்களைப் பார்த்தேன். மிகக் குறைவு தான் வெறும் நானூறு. வேறுவழியில்லை வாங்கிக் கொண்டேன். வேலராம மூர்த்தியின் கதைகள் புத்தகத்தின் அருகில் குற்றபரம்பரைக்கும் ஒரு இடம் இருந்தது. 

வாரங்கள் ஓடின. ஒவ்வொரு வாரமும் அரசன் தவறாமல் 'தலைவரே படிச்சியா' என்று கேட்பதும் நான் 'ஹிஹிஹி' என்று கூறுவதுமே வழக்கமாய் இருந்தது. சமீபகாலங்களில் கேட்பதை நிறுத்தியிருந்தார். அல்லது 'இவன்ட்ட கேட்டு பிரயோசனம் இல்ல, கழுத படிக்கும் போது படிக்கட்டும்' என்று விட்டுவிட்டார். அவ்வபோது கண்ணில் படும். எடுத்துப்பார்ப்பேன். மீண்டும் எடுத்த இடத்திலேயே பத்திரமாய் வைத்து விடுவேன்.

சமீபத்தில் கொடைக்கானல் சென்றபோது எதற்கும் இருக்கட்டும் என்று எடுத்துக் கொண்டேன். எடுத்துச்சென்றது வீண் போகவில்லை. கொடைக்கானல் மலையேறும் போது மெல்ல குற்றபரம்பரையினுள் காலடி எடுத்துவைத்தேன். இது போன்ற இலக்கியப் புத்தகங்கள் படிக்கும் சில முன் தயாரிப்புகள் அவசியம். அதில் ஒன்று எவ்வளவு கொடூரமான சம்பவங்கள் வந்தாலும் மனம் தளரக்கூடாது, தொடர்ந்து முன்னேறிச் செல்ல வேண்டும் என்ற மன உறுதி தான். எளிமையாய்ச் சொல்வதென்றால் இந்தப் புத்தகங்களை பாலா படங்களோடு ஒப்பிடலாம். ஆங்காங்கு சிரிப்பு நையாண்டி சந்தோசம் போன்ற விஷயங்கள் வந்தாலும் கதை நெடுக ஒரு மெல்லிய சோகமும் நம்மோடு பயணிக்கும். (கிட்டத்தட்ட நம் வாழ்க்கையே அப்படித்தான் இருக்கிறது என்பது வேறு விஷயம்). இலக்கிய நாவல்களில் எடுத்தாளப்படும் எளிய மனிதர்களின் வாழ்வியல் அப்படித்தான் இருக்கும். அதைத் தவிர்க்க முடியாது. தவிர்க்க நினைத்தால் இலக்கியம் பிறக்காது என்பது இலக்கிய விமர்சகர்களின் கருத்து. சரி அது அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். இதற்குமேலும் குற்றப்பரம்பரையினுள் நுழையவில்லை எனில் நீங்கள் தம் அடிக்கப் போய் விடக்கூடும்.            

கள்ளர் இன மக்களின் வாழ்வை, அவர்களின் சமுதாய நிலைபாட்டை, அந்த சமுதாயத்தோடு இணக்கமாக வாழ்ந்தவர்கள் எதிர்த்து நின்றவர்கள் என வெவ்வேறு தளங்களில் வாழும் மக்களின் வாழ்வியலை குற்றபரம்பரை என்னும் நாவல் மூலமாக பதிவு செய்ய முற்பட்டுள்ளார் வேல ராமமூர்த்தி. அந்த முயற்சியில் வெற்றி பெற்றாரா என்றால்? தொடர்ந்து வாசியுங்கள்!    

யாரும் கண்டறிய முடியாத காட்டுப்பகுதியில் பதுங்கியிருக்கும் கள்ளர் கூட்டத்தை சுற்றி வளைத்துப் பிடிக்க முயலுகிறது சர்கார். சில பல உயிர்களைப் பலிகொடுத்து சர்காரின் தாக்குதலில் இருந்து தப்பி ஓடுகிறது கள்ளர் கூட்டம். தப்பியோட வழியில்லாமல் ஆர்பரித்து ஓடும் சம்பங்கி நதியில் விழுந்து எங்கோ கண்காணாத ஓரிடத்தில் குத்துயிரும் குலையுயிருமாக கரை ஒதுங்குகிறார்கள் கள்ளர் இன மக்கள். இவர்களை பெரும்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் வில்லுத்துரை காப்பாற்றுகிறான் என்றபடி ஆரம்பமாகிறது கதை. இதுவரை கொஞ்சம் மெதுவாகப் பயணிக்கும் கதை இங்கிருந்து சுவாரசியத்தின் அடுத்த கட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. 

கொம்பூதி என்னும் மலைக்கிராமத்தில் தங்கள் மறுவாழ்வைத் தொடங்குகிறார்கள் கள்ளர் இன மக்கள். இவர்களை தலைவனாக நின்று வழி நடத்துகிறார் மிஸ்டர் வேயன்னா. கொம்பூதி கிராமத்தின் அருகில் இருக்கும் பெரும்பச்சேரி மக்கள் அனைவரும் பெருநாழி கிராமத்து மக்களுக்கு கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் தலித் மக்கள். கிட்டத்தட்ட கள்ளர் இன மக்களும் தலித்துக்களாகவே பார்க்கப்படுகின்றனர். இருந்தாலும் கள்ளர்கள் அனைவரும் பார்ப்பதற்கும் செயலில் இறங்குவதிலும் முரடர்களாக இருப்பதால் அவர்களிடம் யாரும் நெருங்கிப் பழகுவதில்லை. அவர்கள் விசயத்தில் தலையிடுவதும் இல்லை. ஆனால் பெரும்பச்சேரி மக்களை கிட்டத்தட்ட அடிமைகளைப் போலவே நடத்துகின்றனர் பெருநாழி மக்கள்.

சுற்றுவட்டாரத்தில் எங்குமே இல்லாத நல்ல தண்ணீர்க் கிணறு பெருநாழி கிராமத்தில் மட்டுமே இருக்கிறது. இங்கு தலித் மக்கள் நீர் இறைக்கத் தடை. வேண்டுமானால் பெருநாழி மக்கள் ஆளுகொரு வாளி இறைத்து பெரும்பச்சேரி மக்களின் பாத்திரத்தில் ஊற்றலாம். இப்படி ஒவ்வொரு வாளியாக நிறைவதற்கு எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் ஆகலாம். இந்தக் கிணற்றில் இருந்துதான் பிரச்சனையே ஆரம்பமாகிறது. 

பத்துநாள் கைக்குழந்தை வைத்திருக்கும் பச்ச உடம்புகாரி ராக்கு ஒரு இக்கட்டான சூழலில் தன்னுடைய வாளிபோட்டு பெருநாழிக் கிணற்றில் இருந்து நீர்ந இறைத்து விடுகிறாள். இதை பார்த்த பெருநாழி கிராம மக்கள் ராக்கின் கணவன் துருவனுக்கு மிகக் கொடூரமான தண்டனையை வழங்குகிறார்கள். அதாவது துருவனின் உடல் முழுக்க சர்க்கரைப் பாகை ஊற்றி அவனை எறும்புகள் நிறைந்திருக்கும் மரத்தில் கட்டி வைத்து விடுகிறார்கள். 

பெருநாழிக்கு வேலைக்குப் போன புருஷன் வீட்டிற்கு வராததை நினைத்து பதறும் ராக்கு கொம்பூதி வேயன்னாவிடம் சென்று முறையிடுருகிறாள். விஷயமறிந்த வேயன்னா பெருநாழி நோக்கிக் கிளம்புகிறார். அங்கே இரண்டு நாட்களாக எறும்புகளுக்கு மத்தியில் கட்டிவைக்கப்பட்டு துன்புறுத்தபட்ட துருவன் சாகக்கிடக்கிறான். இதைப் பார்த்து கொதித்தெழும் வேயன்னா இன்றிலிருந்து பெரும்பச்சேரி  மக்கள் பெருநாழி கிணத்தில் தன் வாளி போட்டுத்தான் நீர் இரைப்பார்கள் உன்னால் ஆனதைப் பார்த்துக்கொள் என்று சவால் விட்டுச் செல்கிறார். அடுத்தநாளே வேயன்னா தலைமையில் பெரும்பச்சேரி கிராமமே நீர் இரைக்க வருகிறது. இந்நேரத்தில் பெருநாழி வேறு ஒரு கணக்கு போடுகிறது. 

ஆவலோடு நீர் இரைக்க வந்த பெரும்பச்சேரி மக்களுக்கு மிகபெரிய அதிர்ச்சி காத்துள்ளது. தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவன் தன் கிணற்றில் நீர் எடுப்பதா, இதைவிட பெரிய அசிங்கம் வேறு இல்லை என்று பொருமி, நல்ல தண்ணீர்க் கிணறு முழுக்க மனித மலத்தால் நிரப்புகிறது பெருநாழி. இதைப் பார்த்த வேயன்னாவின் கோபம் இன்னும் பல மடங்கு அதிகரிக்க, தனது கூட்டத்தோடு சேர்ந்து ஒட்டு மொத்த பெருநாழியையும் அடித்து நாசமாக்குறார். 



வேயன்னாவை அடக்க ஒரே வழி ஆங்கிலேய சர்க்காரை தன் ஊரில் போலீஸ் கச்சேரி தொடங்க அனுமதியளிப்பது தான் என்று பெருநாழி முடிவு செய்கிறது. வேயன்னாவைப் பற்றி ஏற்கனவே கேள்வி பட்டிருந்த போலீஸ் கச்சேரி வேயன்னா கையில் விலங்கு மாட்டியே தீருவது என்ற சூளுரையுடன் பெருநாழியில் காலடி எடுத்துவைக்கிறது. அப்படி நுழைந்த முதல் போலீஸ் அதிகாரியை வேயன்னாவின் கூட்டம் ஊரைவிட்டே துரத்துகிறது. இரண்டாவது உயரதிகாரியை உலகத்தை விட்டே துரத்துகிறது. மூன்றாவதாக சேது என்னும் இளைஞன் வருகிறான். பல வருடங்களுக்கு முன் சர்கார் துரத்திய போது காட்டுபகுதியில் இருந்து வேயன்னா மற்றும் அவர் கூட்டத்தார் தப்பிப் பிழைக்கும் போது தனது ஒரு மகனை தொலைத்திருந்தார். அந்த மகன் தான் தற்போது தன் கூட்டத்தை வேரறுக்க போலீஸ் அதிகாரியாக பொறுப்பேற்று இருக்கும் சேது.

இந்தவிசயம் சேதுவிற்க்கும் தெரியும். சேதுவின் வளர்ப்புப் பெற்றோர்கள் ஆங்கிலேயர்கள். கள்ளர்களை திருத்தி நல்வழிபடுத்த வேண்டும் என்ற அக்கறையுள்ளவர் சேதுவின் வளர்ப்புத் தந்தை. அதற்காகவே சேதுவை போலீஸ் அதிகாரியாக மாற்றியிருப்பவர். இந்நேரத்தில் சேது பதவி ஏற்றதும் கள்ளர் கூட்டம் திருந்தியதா இல்லை வேரோடு அழிந்ததா? வேயன்னா என்ன ஆனார்? என்பதே மீதிக் கதை. இக்கதையில்  வைரப் புதையல் தேடும் நாகமுனி, அதற்காக அவன் பலி கொடுக்க வேண்டும் என்றே வளர்க்கும் கன்னி கழியா அழகுப் பதுமை வஜ்ராயினி. அந்த வஜ்ராயினி மேல் மையல் கொள்ளும் வேயன்னாவின் புதல்வன் வில்லாயுதம். இந்தக் காதலை அறிந்த நாகமுனி வில்லாயுதத்தை சொக்கபனையினுள் வைத்து கொளுத்தி பலியாக்கும் கொடூர சம்பவம் என்று மற்றொரு கிளைக்கதையும் உண்டு.

குற்றப்பரம்பரை நாவலானது கள்ளர்களை மையமாக வைத்து பல கிளைக் கதைகளுடன் பின்னப்பட்ட சற்றே சிக்கலான கதை. இருந்தும் கதையின் மையக் கருவை மட்டும் கூற முயன்றுள்ளேன். மையக்கருவே இவ்வளவு பெரிதா என நினைக்க வேண்டும். இது நாவலின் மையக்கருவின் ஒரு சதவீதத்தின் ஒரு சதவீதம் அவ்வளவே. 

நாவலை வாசிக்கத் தொடங்கும் போது முதல் ஐம்பது பக்கங்கள் மிக மெதுவாக சென்றபோதிலும் அதற்கு அடுத்த பக்கங்கள் மிக மிக விறுவிறுப்பாக நகர்ந்தன. நாவலின் கடைசி இருநூறு பக்கங்களை அலுவலகம் முடித்து வந்த ஒரு நள்ளிரவில் ஆரம்பித்து அடுத்தநாள் அதிகாலையில் முழுவதுமாக வாசித்து முடித்த பின்பே தூங்கச் சென்றேன். அத்தனை விறுவிறுப்பான நாவல். 

ஒருவேளை பிடிவாதமாக குற்றபரம்பரை நாவலை நான் வாங்காது போயிருந்தாலோ இல்லை அரசன் பிடிவாதமாக இந்த நாவலை என்னிடம் கொடுக்காமல் இருந்தாலோ தமிழின் மிக முக்கியமான நாவலை வாசிக்கக் கிடைத்த வாய்ப்பை இழந்திருப்பேன். நல்லவேளை அப்படியெல்லாம் நடந்து விடவில்லை. குறித்து வைத்துக்கொள்ளுங்கள் நீங்கள் தவற விடக்கூடாத நாவலில் ஒன்று குற்றபப்ரம்பரை. கதை கிட்டத்தட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடப்பது போல் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாம் பார்க்காத ஒரு நூற்றாண்டை, நாம் பார்க்காத ஒரு சமுதாயத்தை கற்பனை செய்து பார்ப்பதென்பதே கொஞ்சம் சுவாரசியம் தரக்கூடிய சவால் தான். அந்த சுவாரசியத்திற்காகவே இந்த நாவலை நிச்சயம் படிக்கலாம். 

ஜூனியர் விகடனில் கூட்டாஞ்சோறு என்ற பெயரில் தொடர்கதையாக வந்து பின் குற்றபரம்பரை என்ற நாவல் வடிவம் பெற்றுள்ளது. 

பதிப்பகம் காவ்யா
விலை 200

23 comments:

  1. ஆங்காங்கே சிறு தத்துவங்கள் தூவி, மெல்லிய நகைச்சுவையுடன் எழுதி இருக்கிறீர்கள் சீனு! 400 பக்கங்கள் கம்மி என்ற அர்த்தத்தில் எழுதி இருக்கிறீர்கள்!!

    அரவான் கதை காவல்கோட்டம் நாவலில் வரும் ஒரு பகுதி என்று படித்திருக்கிறேனே... நான் காவல் கோட்டமும் படித்திருக்கிறேன். அதுவும் கிட்டத்தட்ட இதே கதை போல சம்பவங்கள் நிறைந்ததுதான்.

    எந்தக் படைப்பும் முதலில் மனதுக்குள் ஏறும்வரை கொஞ்சம் வெளியே நின்றாலும் பின்னர் நாம் அதில் அமிழ்ந்து போனதும் மனதில் நின்று விடுகிறது என்பது என் சமீபத்திய அவதானிப்பு! (அப்பாடி... இந்த வார்த்தையை நானும் உபயோகிக்கும் ஒரு வாய்ப்பு வந்தது!)

    ReplyDelete
    Replies
    1. நீங்கெல்லாம் பலமுறை இந்த வார்த்தையை உபயோகித்திருப்பீங்க ங்கறது என் அவதானிப்பா இருந்ததே ஸ்ரீராம் சார் ..!

      Delete
  2. ரைட்டு நானும் வாங்கிப் படிச்சிடறேன் அவசியம் -உன்கிட்ட வாங்கி - ஹி... ஹி... ஹி...

    ReplyDelete
    Replies
    1. உங்க கதைக்கான கதையும், கதையை பற்றிய விமர்சனமும் ரெண்டுமே சூப்பர்..

      Delete
  3. DNC Denotified communities பற்றி கேள்வி பட்டிருக்கிறேனே தவிர அவர்களைப் பற்றிய வரலாறை அறிந்ததில்லை. இதற்கு அந்த நூல் உதவும் என்றுநினைக்கிறேன்.
    நிச்சயம் படிக்கவேண்டிய நூல்களின் பட்டியலில் சேர்த்துவிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. படியுங்கள் எங்கள் ரத்த வரலாறை

      Delete
  4. உங்கள் பொறுமை பாராட்டுக்குரியது.
    இப்படிக்கு
    ஹிஹி.. விமரிசனத்தையே மேலோட்டமாகப் படிக்கிற கள்ளன்.

    ReplyDelete
  5. நல்ல விமர்சனம் சீனு! வாசிக்க வேண்டும்!

    2011 ல் சாகித்திய அகாடமி விருது பெற்ற "காவல் கோட்டம்"...வெங்கடேசன் எழுதியது. ஆறு நூற்றாண்டுகால மதுரையின் வரலாற்றைப் பின்னணியில் எழுதப்பட்டது! கனடா தமிழ் சங்க விருதும் பெற்றது....வாசித்துக் கொண்டிருக்கின்றோம்! வாசித்திருப்பீர்கள் என்று நினைக்கின்றோம்.. இல்லை என்றால் வாசித்துப் பாருங்களேன்!

    பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  6. உங்கள் எழுத்து நடையில் அருமையான விமர்சனம். இந்த சம்பவங்களை படிக்கும் போதே மனம் பதைபதைக்கிறது.

    ReplyDelete
  7. வேலு ராமமூர்த்தியின் எழுத்து வாசிக்க வைக்கிறதோ இல்லையோ நீங்கள் அப்புத்தகத்தை பற்றி எழுதிய எழுத்து அந்த புத்தகத்தை வாங்கத் தூண்டுகிறது! பார்ப்போம்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  8. புத்தக அறிமுகத்திற்கு நன்றி சீனு. வாசிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது!

    ReplyDelete
  9. வெங்கடேசன் எழுதிய குற்றப்பரம்பரையை படிக்காமல் இருப்பதே இன்னமும் குற்ற உணர்ச்சியாக உள்ளது. எங்கள் மாவட்டத்தோடு பின்னிப் பினைந்த வரலாற்று சம்பவம் என்பதால் அதிக ஆர்வம் செலுத்தினேன். நிச்சயம் படிப்பேன்.

    ReplyDelete
  10. படிக்கவேண்டிய நூல். பகிர்ந்தமைக்கு நன்றி.
    www.drbjambulingam.blogspot.com
    www.ponnibuddha.blogspot.in

    ReplyDelete
  11. இந்த நாவலை பற்றி நிறைய கேள்விப்பட்டேன். உங்களின் விமர்சனம் இன்னும் ஆவலை தூண்டுகிறது.

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
  12. முடிந்தால் இவரின் ”இருளப்பசாமியும் 21 கிடாயும்” என்ற சிறுகதையை படித்துப்பாருங்கள்.சிறந்த சிறுகதை அது.

    ReplyDelete
  13. மிக அருமையான விமர்சனம் குரு



    படிக்க முயற்சிக்கிறேன்





    ReplyDelete
  14. இந்த நாவலை பற்றி இன்று தான் கேள்விபட்டேன்.சரித்திர நாவல்களில் மட்டுமே நாட்டம் கொண்ட நான் படிக்கபோகும் முதல் மனித ஓட்டத்துடன் கூடிய ஒரு நாவல் நன்றி ஐயா

    ReplyDelete
  15. இந்த நாவலை பற்றி இன்று தான் கேள்விபட்டேன்.சரித்திர நாவல்களில் மட்டுமே நாட்டம் கொண்ட நான் படிக்கபோகும் முதல் மனித ஓட்டத்துடன் கூடிய ஒரு நாவல் நன்றி ஐயா

    ReplyDelete
  16. "அவ்வபோது கண்ணில் படும். எடுத்துப்பார்ப்பேன். மீண்டும் எடுத்த இடத்திலேயே பத்திரமாய் வைத்து விடுவேன்".... ஹஹா .....ஹஹா... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete
  17. Very interested Super.I always write a book review blog.. Please visit my blog https://www.jaimuruganwriter.com

    ReplyDelete

இது... உங்க ஏரியா!