Thursday, March 26, 2015

மாங்கொட்ட சாமி - புகழ்




எவ்வித திட்டமிடுதலும் இல்லாமல் வாங்கிய சில புத்தகங்கள் பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளன அப்படி ஒன்று தான் இந்த மாங்கொட்ட சாமி. வழக்கம்போல் ஒரு ஞாயிறின் அந்தியில் டிஸ்கவரி புக் பேலசின் புத்தக வரிசைகளை மேய்ந்து கொண்டிருக்கையில் கண்ணில் சிக்கியது இந்நூல். உண்மையில் இந்த மாதிரி புத்தகத்தைத் தான் வெகு நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன், முதல் பக்க எழுத்து நடை அப்படியே மனசில் ஒட்டிக்கொள்ள வாங்கி வந்த கையோட படித்தும் முடித்தாயிற்று. 

மொத்தம் பதிமூன்று கதைகளைக் கொண்ட இந்நூல் பழைய பாக்கெட் நாவல் சைசில் இருக்கிறது. எவ்வித அலங்காரமும், புனைவுமற்ற எழுத்து நடை. ஒவ்வொரு கதையும் தனித்தன்மையுடன் இருக்கிறது. இக்கதைகள் ஒவ்வொன்றையும் வாசித்து முடிக்கையில் அருகில் அமர்ந்து கொண்டு யாரோ ஒருவர் கதையாக சொன்ன உணர்வை தருகிறது. பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களின் மனிதர்களோடு சில காலம் பழகிய மன நிறைவை தருகின்றன இக்கதைகள். வாழ்ந்து சலித்த கிராமத்து மனிதர்களின் வாழ்வியலை எந்த சலிப்புமில்லாமல் சொல்லுவதில் மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும்  இந்நூலின் ஆசிரியர் திரு. புகழ்.

கிராமங்களில் முன்னோர்கள் சொல்லும் செவி வழி கதைகளை கூர்ந்து கவனித்தால் அதிலொரு நேர்த்தி இருக்காது. அங்குமிங்கும் அலைபாயும் தன்மை கொண்டவைகளாக இருக்கும். கதை சொல்லிகள் தங்களின் விருப்பத்திற்கு தகுந்த மாதிரி கதை மாந்தர்களை உருவகப்படுத்தி உயர்த்திச் சொல்வர். புகழின் கதைகளைனைத்தையும் செவி வழி கதைகளின் அச்சுப் பதிவாக காண்கிறேன். இதிலொரு நேர்த்தி இருக்கிறது. இவரின் கதை மாந்தர்கள் அவ்வளவு வலுவாக புனையப்பட்டிருக்கின்றனர். இக்கதைகளைனைத்தையும் புனைவு என்று எளிதில் கடந்து விட முடியாது, உதாரணமாக,  "செங்காட்டு ஜோசியன்", "தொங்கட்டான் கெழவி" என்ற இரண்டு கதைகளையும் சொல்லலாம்.

தொங்கட்டான் கெழவி எனும் கதையில், இளம் வயதிலேயே கணவனை பறிகொடுத்த பெண்ணொருத்தி தனது கைக்குழந்தையை வைத்துக் கொண்டு காடுகரையில் கூலி வேலைசெய்து அவனை வாத்தியார் வேலைக்கும் படிக்க வைத்து விட்டதாகவும், பிறகு அந்தப் பையன் சம்பாத்தியத்தில் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து வைத்து கிராமத்தில் நிலபுலன்களை வாங்கி, சொந்தங்களில் பெண் தருவதாக சொல்லியும், தனக்கு தெரிந்த பக்கத்தூரில் வறுமை நிறைந்த குடும்பத்திலிருந்த பெண்ணை பையனுக்கு கட்டி வைத்திருக்கிறாள். இறுதியாக, முப்பது நாளுக்கும் மேலாக இழுத்துக் கொண்டிருந்த கெழவி தன் மகனின் முகத்தை பார்த்ததும் உயிர் பிரிந்ததாக கதையை எளிதாக முடித்திருக்கிறார். வழமையான கதைதானே, இதிலென்ன இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? கதையில் ஒரு நாவலுக்குண்டான விசயங்களை அடக்கி சொல்லியிருக்கிறார். கிராமப்புற இழவு வீடுகளில் ஒப்பாரி வைப்பதையும், ஒப்பாரி வைக்கத் தெரியாத இளம் பெண்களுக்கு எப்படி ஒப்பாரி என்று வகுப்பெடுப்பதையும், பேருந்து நடத்துனரின் தில்லு முல்லுகளையும் அதற்கு கெழவி செய்த அறிவுக் கூர்மையான செயல்களையும் ;தொகுத்து சொன்னால் ஒரு நாவலே எழுதலாம். அந்த அளவிற்கு விசயங்களை உள்ளடக்கி குறுங்கதையாக்கியிருக்கும் எழுத்தாற்றல்.

அடுத்து செங்காட்டு ஜோசியன் என்னும் கதை, செமத்தியான தீனி. கிராமப் புற மக்கள் இன்னும் ஜாதகம் ஜோசியம் ன்னு திரிந்து கொண்டிருக்கிறார்கள். செங்காட்டில் ஜோசியன் ஒருத்தன் உள்ளது உள்ளபடி அப்படியே சொல்வதகாவும் அதனால் பலரின் அந்தரங்கள் வெளிப்பட்டு மனைவி மார்களிடம் விளக்கு மாறு அடிவாங்குவதாக சொல்கிறார். கல்யாணம் பண்ணி நாலு மாசம் கூட இருந்துவிட்டு வெளிநாடு போன ஒருத்தன் நாலு வருஷம் கழிச்சி வந்து மனைவி குழந்தையோடு வந்து ஜோசியம் பாக்க சென்றிருக்கையில் இது உன் புள்ளையே இல்லை எப்படிப்பா நான் ஜாதகம் பார்ப்பது என்று உண்மையை போட்டு உடைக்க, மிரண்டு போனவன் ஆத்திரத்தில் ஜோசியக்காரனை அடிக்கப் போக, ஜோசியன் மீண்டும் ஆணித்தரமாக சொல்ல, வெளிய எழுந்து வந்து மனைவியை போட்டு மிதிக்க, அவள் வலி தாங்காமல், நாலு மாசம் கூட படுத்துவிட்டு நீ வெளிநாடு போய்டுவே, நாலு வருஷம் நான் சும்மா இருப்பதா ? எங்க நீ இருந்து பாரேன் ன்னு காட்டுக் கத்தலா கத்தியதாக சொல்லியிருக்கிறார். ஒலச்சான் எனும் பாத்திரம் ஜாதகம் நீட்ட, நீ என்னைக்கு உன் கள்ளத்தொடர்பை விடுறியோ அன்னைக்கு நல்லா இருப்பே ன்னு போட்டு உடைக்க அது ஓலச்சானின் பொண்டாட்டி தெரிஞ்சி குடும்பத்தில் சண்டையாகிப் போக கடுப்பில் மறு வாரம் வேறொரு ஜாதகத்தை தூக்கி கொண்டு போயி அவனிடம் இது என் மகள் ஜாதகம் எப்ப கல்யாணம் நடக்கும்னு பாரு என்று சொல்லிருக்கார் ஓலச்சான். செங்காட்டு ஜோசியன் வாங்கிய ஒடனே, இந்த புள்ளையோட அம்மாக்காரி எப்படி எவன் கூடவோ ஓடிப்போயி மூணு மாசம் கழிச்சி திரும்பி வந்து நல்லபடியா குடும்பம் நடத்துறாளோ, அப்படித்தான் இந்தப் புள்ளையும் கல்யாணத்துக்கு முந்தி யார் கூடவோ ஓடிப்போயி ஆறு மாசம் கழிச்சி மீண்டும் வந்து நல்ல படியா கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பம் நடத்தும் னு சொல்லிட்டு ஜாதகத்தை மூடி கீழ வைச்ச ஜோசியனை பார்த்து இது எம்மகள் ஜாதகம் இல்ல உன் மகள் ஜாதகம் டா ன்னு சொல்லிட்டு இன்னொரு ஜாதகமும் இருக்கு பாக்குறியா ? ன்னு சொல்லிட்டு ஒரு நூறு ரூபா தாளை எடுத்து அவன் மூஞ்சியில் வீசிவிட்டு வெளிய வருவதாகவும், அதிலிருந்து ஜோசியன் தன் தொழிலை விட்டதாக  கதை முடியும். ஒவ்வொரு கதையின் முடிவில் செம சுவையான முடிவு காத்திருக்கிறது.

இதுமாத்திரமில்லாமல் இதிலிருக்கும் கதைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சுவையில் மனதை தைக்க கூடிய விஷயம் அடங்கியிருக்கும். கொடுக்கும் காசிற்கு நிச்சயம் மன நிறைவை அடைவீர்கள்.

பக்கங்கள் : 152

பதிப்பகம் : க்ரியா 

வெளியீடு : 2009

விலை : ரூபாய் 125/-   


படித்துச் சொன்னது 

அரசன் 
http://www.karaiseraaalai.com/
   

 

2 comments:

  1. "செங்காட்டு ஜோசியன்", "மாங்கொட்டசாமி", "தொங்கட்டான் கெழவி" பெயெரெல்லாம் நல்லா இருக்கே ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete

இது... உங்க ஏரியா!