Showing posts with label சிறு கதைகள். Show all posts
Showing posts with label சிறு கதைகள். Show all posts

Friday, March 25, 2016

ஆரஞ்சு முட்டாய் - கார்த்திக் புகழேந்தி


கார்த்திக் புகழேந்தியின் முதல் தொகுப்பான 'வற்றாநதி' ஏற்படுத்திய தாக்கத்தினால் இவரின் எழுத்துக்களை தீவிரமாக பின்தொடர ஆரம்பித்தேன். குறிப்பாக இவரின் வழக்குச் சொல் நிறைந்த எழுத்துக்கு ரசிகன். வற்றா நதிக்குப் பின் இவரின் எழுத்துலக செயற்பாடுகள் பிரமிக்கத்தக்கவை. குறிப்பிட்டு சொல்லவேண்டுமெனில், "கதை சொல்லி"யை மீண்டும் வெளிவரச் செய்தது. கடந்த டிசம்பரில் சென்னை வாசிகளுக்கு மரண பயத்தைக் காட்டிச் சென்ற தொடர் மழையில் இவரின் நேரடி களச் செயற்பாடுகளை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. வெறும் எழுத்தோடு மட்டும் நின்றுவிடாமல் இம்மாதிரியான மனித நேயமிக்க செயற்பாடுகள் காலம் கடந்தும் பெயர் சொல்லும். உனது ஈரமிக்க செயற்பாடுகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள் நண்பா.



வற்றா நதியை வாசித்துவிட்டு கா. பு. விடம் அரை மணி நேரத்துக்கு மேலாக அந்நூலைப் பற்றி உரையாடினேன். பெரும்பாலும் எழுத்தாளர்களோடு உரையாடுவதை விட அவர்களின் எழுத்துக்களோடு சிநேகம் கொள்வதைத் தான் விரும்புவேன், ஆனால் மனிதர், தன் எழுத்துக்களைப் போன்றே பழகவும் எளிமையாக இருக்கிறார். வாருங்கள் ஆரஞ்சு முட்டாயைப் பற்றி பார்ப்போம்.

'வெட்டும் பெருமாள்' கதையில், ஆரம்ப சொல்லாடல்களே நம்மை கதைக்குள் இயல்பாக ஒன்றவைத்துவிடுகிறது. கொஞ்சம் கவனம் சிதறினாலும் மீண்டும் வாசிக்க வேண்டிய கட்டமைப்பைக் கொண்டிருந்தாலும் வாசித்து முடிக்கையில் 'வெட்டும் பெருமாள்' நெஞ்சின் ஆழத்தில் குடி கொள்கிறான்.

'தேனடை' கதையில் சிறுவர்களின் இயல்பான உரையாடலோடு, தோட்டத்துக்காரனுக்கும், வாத்துக்காரிக்கும் உள்ள வரம்பு மீறிய உறவை துள்ளலாக சொல்லியிருக்கிறார், வாத்துக்காரியின் நிறத்தை வர்ணிக்கும் இடம் பட்டாசு. ஒரு நிகழ்வினை ஆழமான உள்வாங்குதல் இல்லையெனில் இம்மாதிரியான கதைகளை புனைவது வெகு சிரமம்.

அடுத்து, 'சிந்து பூந்துறை'யில் கணவனின் முன்னாள் காதலியைப் பற்றி தமது பிள்ளைகளுக்கு கூறிவிட்டு வெளியூருக்கு கிளம்பியதும் சுரீரென ஒரு திருப்பத்தைக் கொடுத்து திக்குமுக்காட வைக்கிறார் கா. பு. போகிற போக்கில் கதை நிகழும் இடங்களின் மனிதர்களின் வாழ்வியல் கூறுகளை எழுத்தில் மிக நுணுக்கமாக பதிவு செய்யவும் தவறவில்லை.

'இரயிலுக்கு நேரமாச்சி' கதையில் தமிழகத்தின் இண்டிடுக்கில் ஒரு தடகள வீராங்கனை படும் இன்னல்களையும், அவளை வார்த்தெடுக்க அருணாவின் தந்தை படும் அவமானங்களையும், அதன் வலிகளையும் மிக அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறார். நிறைவான பதிவு.

அதே போல் 'தெம்மாங்கு பாட்டக் கேட்டு' கதையில் கொஞ்சம் கொஞ்சமாய் நவீனத்துக்கு மாறிக்கொண்டிருக்கும் நிகழ்வுதனை பதிவு செய்துகொண்டே ஊடாக ஒரு காதலை பதிவு செய்வதும் ஆசிரியரின் நுணுக்கமான எழுத்துக்கு சான்று. லதா - மணிகண்டன் தம்பதிகளுக்கு வாழ்த்து சொல்வதா இல்லை கண்டனம் கூறுவதா என்பதை வாசகனிடமே விட்டுவிட்டு ஒதுங்கி கொள்கிறார்.

'தோழியென்றோருத்தி" கதையில் வரும் சுஹா போன்ற தோழி நமக்கும் வாய்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது வாசித்து முடிக்கையில்.

இப்படியாக கவனம் ஈர்க்கும் கதைகள் நிறைய இத்தொகுப்பில் இருக்கிறது, சட்டென்று கவனம் ஈர்த்த கதைகளை மட்டும் இங்கு குறிப்பிட்டு சொல்லியிருக்கிறேன்.

கார்த்திக் புகழேந்தியின் கதைகள் அனைத்தும் நாம் எளிய மனிதர்களின் வாழ்வியல் கூறுகள் தான், அவற்றை மிக நேர்த்தியாய் கதையாக்கியிருக்கிறார், அதற்கு பெரிய பூங்கொத்து.

சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் இடறும் சிறு கல் போல, இவரின் பேச்சு வழக்கு எழுத்துக்கு இடையிடையே வரும் எழுத்து வழக்கு நடை. விறுவென விறுவென நகருகையில் வேகத்தடையை போட்டது போன்ற உணர்வைத் தருகிறது. வற்றா நதியோடு தொடர்பு படுத்தி பார்க்க கூடாது என்று நினைத்தாலும் தவிர்க்க முடியவில்லை. 'வற்றாநதி' நூலை வாசித்து முடிக்கையில் ஏற்படும் பூரிப்பில் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கிறது இந்த 'ஆரஞ்சு முட்டாய்'.

தொடர்ந்து ஆக்கமுடன் இயங்கும் நண்பன் கார்த்திக் புகழேந்தியிடம், விரைவில் துள்ளலும், எள்ளலும் நிறைந்த ஒரு நாவலைத் தருமாறு கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன்.

நட்புடன்

அரசன்




  

Thursday, January 7, 2016

சு. தமிழ்ச்செல்வி சிறுகதைகள் - சு. தமிழ்ச்செல்வி


சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களில் எல்லாம் ஆண் வர்க்கத்தினை திட்டித் தீர்க்கவும், வசை மொழிகளின் குவியலை தங்களது படைப்பென்று அடையாளப் படுத்திக்கொண்டிருக்கும் பல பெண் படைப்பாளிகளுக்கு மத்தியில், எவ்விதச் சத்தமுமின்றி மிக நேர்த்தியான, காலந்தாண்டியும் பேசக் கூடிய எழுத்துக்களை படைத்துக் கொண்டு வருகிறார் சு. தமிழ்ச்செல்வி. இவரின் அடையாளமாய் 'கீதாரி' நாவலைச் சொல்லலாம். 'கீதாரி' நாவலைப் படித்த பின்பு, இவரைப்பற்றி இணையத்தில் தேடினேன் சொல்லிக் கொள்ளும்படியான தரவுகள் இல்லை என்பது காலத்தின் சோகம். 

கீதாரி நாவலை வாசித்த பின், அது தந்த உந்துதலில் இவரின் இன்னொரு படைப்பான 'பொன்னாரம்' நாவலை வாங்கி வைத்திருக்கிறேன் நேரமின்மையால் வாசிக்க முடியாமல் கிடப்பில் இருக்கிறது. விரைவில் வாசித்து விட வேண்டும். 



சென்ற மாதத்தில் 'டிஸ்கவரி' புக் பேலஸில் உயிரெழுத்து பதிப்பக புத்தகங்களை ஐம்பது சதவிகிதத் தள்ளுபடியில் விற்பனை செய்கிறோம் என்ற தகவலைப் பார்த்ததும் கடைக்குச் சென்றேன். ஆச்சர்யமாக அந்தத் தொகுப்பில் சு. தமிழ்ச்செல்வி அவர்களின் சில நூல்களும் இருந்தன. அதில் இந்த நூலை வாங்கினேன். வாங்கிய கையோடு வாசித்தும் முடித்துவிட்டேன். 

கூலி வேலைக்குச் சென்று, அதில் வரும் வருமானத்தில் வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கும் அன்றாடங்காய்ச்சிகளை முன் வைத்தே தனது கதைகளை கூறுகிறார். எந்தக் கஷ்டத்திலும் மனம் சோர்ந்து முடங்கி விடாமல் தங்களது கடின உழைப்பை முன்வைத்து வாழத் துடிக்கும் கடைநிலைப் பெண்மணிகளின் வியர்வை நிரம்பிய உவர் சுவைகளை கதையின் மூலம் சுவைக்கத் தருகிறார். அவர்களின் வலி நிரம்பிய, கண்ணீரை ஆவணப் படுத்தியிருக்கிறார் என்று சொன்னால் மிகையாகாது. 

"தொம்பா" எனும் கதையில் கட்டிவந்த கணவனும் ஊதாரித் தனமாக குடித்துத் திரிகையில், அதே ஊரிலிருக்கும் அப்பனும் ஆத்தாளும் இவளை சுமையென்று கருத, சுயமரியாதையை இழக்காமல் தனக்குச் சீதனமாய் வந்த மாடுகளை மேய்த்து, அதனைப் பெருக்கி அதன் மூலம் கிடைக்கும் கணிச வருவாயில் கடைக்குழியில் கிடக்கும் குடும்பத்தினை உயர்த்த நினைக்கையில், அவள் கணவன், மேய்ச்சலுக்குப் போயிருந்த மாடுகளை தொம்பாவிற்கு தெரியாமல் ஒட்டிக்கொண்டு போய் விற்று விட்டு அதை வைத்து சாராயக் கடையை துவக்க போவதாய் முடித்திருப்பார். தொம்பா நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அழும் காட்சி கண் முன் விரிவது போலிருக்கும் அவ்வளவு ஈரமான எழுத்து. 

இது இப்படியென்றால், "யதார்த்தம்" என்றக் கதையில் வேலைக்கு போனாத்தான் சோறு என்ற குடும்ப நிலையில் காய்ச்சல் வந்த மகனுக்கு வைத்தியம் பாக்க நேரமில்லாமல் ஊர்க்கடையில் மாத்திர வாங்கி கொடுத்து படுக்க வைத்துவிட்டு,  புருசனும் பொஞ்சாதியும் வேலைக்குப் போய்விட்டு வீடு திரும்பினால், காய்ச்சல் அதிகமாகி ஜன்னி வந்து கிடக்கும் மகனைத் தூக்கி கொண்டு ஆஸ்பத்திரிக்கு போயி வைத்தியம் பார்த்தும் பலனில்லாமல் இறந்து போகிறான். இறந்த புள்ளையை வூட்டுக்கு எடுத்து வர காசில்லாமல் புருசனும் பொஞ்சாதியும் யாருக்கும் தெரியாமல் இறந்த மகனை பேருந்தில் உட்கார வைத்துக்கொண்டு வருகையில் தன்னிலை தாளாமல் வெடித்து அழுவாள் மகனைப் பறிக்கொடுத்த தாய். அந்த ஏழைத்தாயின் பரித்தவிப்பை, கண்ணீரின் பிசுபிசுப்பை நமக்கும் உணர்த்துகிறது அந்தக் கதை.

அடுத்து கொடும்பாவி கதையில், பக்கவாதம் வந்த கணவனை வைத்துக் கொண்டு, மகன் வீட்டுப் பேரப்பிள்ளைகளை வளர்த்துக்கொண்டு வரும் அம்மணி, எங்காவது வேலை கிடைக்காதா? என்று காடு காடா, ஊரு ஊரா அலைகையில் வறட்சியினால் எங்கும் வேலையில்லை என்று எல்லோரும் கைவிரிக்கையில், மனம் நொந்து எல்லோரும் சேர்ந்து ஒப்பாரி வைச்சு கொடும்பாவி இழுத்தால் மழை வருமென்று ஒப்பாரி வைக்கும் நிகழ்வைப் பேசுகிறது. 

ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு வலியை கூறியிருக்கிறார். ஓடாய் தேய்ந்து தமது குடும்பங்களை, முதுகில் சுமக்கும் பெண்களின் வாழ்வியல் துயரங்களை, அவர்களின் இன்னல் மொழியினை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். எங்கும் எதிலும் பசப்பு வார்த்தைகளில்லை. வலிகளை வலிகளாகவே பதிவு செய்திருக்கிறார். 

இவரின் எழுத்துக்களின் சிறப்பம்சம் என்று நான் கருதுவது, மொழியாளுமை தான். எந்தக் கதையிலும் சோகத்தைப் பிழிந்து வாசிப்பவர்களை பாரிதாபம் கொள்ள வைக்காமல் கடை நிலை மாந்தர்களின் கண்ணீரை அப்படியே காட்சி படுத்தியிருக்கிறார். சொல்லாமல் கிடக்கும் இன்னும் இன்னும் எத்தனையோ கதைகளை அவர் எழுதித் தீர்க்க வேண்டும் என்பதைத் தவிர்த்து வேறெந்த வேண்டுதலுமில்லை அவரிடத்தில்.



========================================================================

பதிப்பகம் : உயிர் எழுத்து 

வெளியான ஆண்டு : 2010

பக்கங்கள் : 149

விலை : 95/-

========================================================================

கீதாரி நாவல் பற்றி அறிந்து கொள்ள: இங்கு கிளிக்குங்கள்

Thursday, March 26, 2015

மாங்கொட்ட சாமி - புகழ்




எவ்வித திட்டமிடுதலும் இல்லாமல் வாங்கிய சில புத்தகங்கள் பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளன அப்படி ஒன்று தான் இந்த மாங்கொட்ட சாமி. வழக்கம்போல் ஒரு ஞாயிறின் அந்தியில் டிஸ்கவரி புக் பேலசின் புத்தக வரிசைகளை மேய்ந்து கொண்டிருக்கையில் கண்ணில் சிக்கியது இந்நூல். உண்மையில் இந்த மாதிரி புத்தகத்தைத் தான் வெகு நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன், முதல் பக்க எழுத்து நடை அப்படியே மனசில் ஒட்டிக்கொள்ள வாங்கி வந்த கையோட படித்தும் முடித்தாயிற்று. 

மொத்தம் பதிமூன்று கதைகளைக் கொண்ட இந்நூல் பழைய பாக்கெட் நாவல் சைசில் இருக்கிறது. எவ்வித அலங்காரமும், புனைவுமற்ற எழுத்து நடை. ஒவ்வொரு கதையும் தனித்தன்மையுடன் இருக்கிறது. இக்கதைகள் ஒவ்வொன்றையும் வாசித்து முடிக்கையில் அருகில் அமர்ந்து கொண்டு யாரோ ஒருவர் கதையாக சொன்ன உணர்வை தருகிறது. பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களின் மனிதர்களோடு சில காலம் பழகிய மன நிறைவை தருகின்றன இக்கதைகள். வாழ்ந்து சலித்த கிராமத்து மனிதர்களின் வாழ்வியலை எந்த சலிப்புமில்லாமல் சொல்லுவதில் மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும்  இந்நூலின் ஆசிரியர் திரு. புகழ்.

கிராமங்களில் முன்னோர்கள் சொல்லும் செவி வழி கதைகளை கூர்ந்து கவனித்தால் அதிலொரு நேர்த்தி இருக்காது. அங்குமிங்கும் அலைபாயும் தன்மை கொண்டவைகளாக இருக்கும். கதை சொல்லிகள் தங்களின் விருப்பத்திற்கு தகுந்த மாதிரி கதை மாந்தர்களை உருவகப்படுத்தி உயர்த்திச் சொல்வர். புகழின் கதைகளைனைத்தையும் செவி வழி கதைகளின் அச்சுப் பதிவாக காண்கிறேன். இதிலொரு நேர்த்தி இருக்கிறது. இவரின் கதை மாந்தர்கள் அவ்வளவு வலுவாக புனையப்பட்டிருக்கின்றனர். இக்கதைகளைனைத்தையும் புனைவு என்று எளிதில் கடந்து விட முடியாது, உதாரணமாக,  "செங்காட்டு ஜோசியன்", "தொங்கட்டான் கெழவி" என்ற இரண்டு கதைகளையும் சொல்லலாம்.

தொங்கட்டான் கெழவி எனும் கதையில், இளம் வயதிலேயே கணவனை பறிகொடுத்த பெண்ணொருத்தி தனது கைக்குழந்தையை வைத்துக் கொண்டு காடுகரையில் கூலி வேலைசெய்து அவனை வாத்தியார் வேலைக்கும் படிக்க வைத்து விட்டதாகவும், பிறகு அந்தப் பையன் சம்பாத்தியத்தில் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து வைத்து கிராமத்தில் நிலபுலன்களை வாங்கி, சொந்தங்களில் பெண் தருவதாக சொல்லியும், தனக்கு தெரிந்த பக்கத்தூரில் வறுமை நிறைந்த குடும்பத்திலிருந்த பெண்ணை பையனுக்கு கட்டி வைத்திருக்கிறாள். இறுதியாக, முப்பது நாளுக்கும் மேலாக இழுத்துக் கொண்டிருந்த கெழவி தன் மகனின் முகத்தை பார்த்ததும் உயிர் பிரிந்ததாக கதையை எளிதாக முடித்திருக்கிறார். வழமையான கதைதானே, இதிலென்ன இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? கதையில் ஒரு நாவலுக்குண்டான விசயங்களை அடக்கி சொல்லியிருக்கிறார். கிராமப்புற இழவு வீடுகளில் ஒப்பாரி வைப்பதையும், ஒப்பாரி வைக்கத் தெரியாத இளம் பெண்களுக்கு எப்படி ஒப்பாரி என்று வகுப்பெடுப்பதையும், பேருந்து நடத்துனரின் தில்லு முல்லுகளையும் அதற்கு கெழவி செய்த அறிவுக் கூர்மையான செயல்களையும் ;தொகுத்து சொன்னால் ஒரு நாவலே எழுதலாம். அந்த அளவிற்கு விசயங்களை உள்ளடக்கி குறுங்கதையாக்கியிருக்கும் எழுத்தாற்றல்.

அடுத்து செங்காட்டு ஜோசியன் என்னும் கதை, செமத்தியான தீனி. கிராமப் புற மக்கள் இன்னும் ஜாதகம் ஜோசியம் ன்னு திரிந்து கொண்டிருக்கிறார்கள். செங்காட்டில் ஜோசியன் ஒருத்தன் உள்ளது உள்ளபடி அப்படியே சொல்வதகாவும் அதனால் பலரின் அந்தரங்கள் வெளிப்பட்டு மனைவி மார்களிடம் விளக்கு மாறு அடிவாங்குவதாக சொல்கிறார். கல்யாணம் பண்ணி நாலு மாசம் கூட இருந்துவிட்டு வெளிநாடு போன ஒருத்தன் நாலு வருஷம் கழிச்சி வந்து மனைவி குழந்தையோடு வந்து ஜோசியம் பாக்க சென்றிருக்கையில் இது உன் புள்ளையே இல்லை எப்படிப்பா நான் ஜாதகம் பார்ப்பது என்று உண்மையை போட்டு உடைக்க, மிரண்டு போனவன் ஆத்திரத்தில் ஜோசியக்காரனை அடிக்கப் போக, ஜோசியன் மீண்டும் ஆணித்தரமாக சொல்ல, வெளிய எழுந்து வந்து மனைவியை போட்டு மிதிக்க, அவள் வலி தாங்காமல், நாலு மாசம் கூட படுத்துவிட்டு நீ வெளிநாடு போய்டுவே, நாலு வருஷம் நான் சும்மா இருப்பதா ? எங்க நீ இருந்து பாரேன் ன்னு காட்டுக் கத்தலா கத்தியதாக சொல்லியிருக்கிறார். ஒலச்சான் எனும் பாத்திரம் ஜாதகம் நீட்ட, நீ என்னைக்கு உன் கள்ளத்தொடர்பை விடுறியோ அன்னைக்கு நல்லா இருப்பே ன்னு போட்டு உடைக்க அது ஓலச்சானின் பொண்டாட்டி தெரிஞ்சி குடும்பத்தில் சண்டையாகிப் போக கடுப்பில் மறு வாரம் வேறொரு ஜாதகத்தை தூக்கி கொண்டு போயி அவனிடம் இது என் மகள் ஜாதகம் எப்ப கல்யாணம் நடக்கும்னு பாரு என்று சொல்லிருக்கார் ஓலச்சான். செங்காட்டு ஜோசியன் வாங்கிய ஒடனே, இந்த புள்ளையோட அம்மாக்காரி எப்படி எவன் கூடவோ ஓடிப்போயி மூணு மாசம் கழிச்சி திரும்பி வந்து நல்லபடியா குடும்பம் நடத்துறாளோ, அப்படித்தான் இந்தப் புள்ளையும் கல்யாணத்துக்கு முந்தி யார் கூடவோ ஓடிப்போயி ஆறு மாசம் கழிச்சி மீண்டும் வந்து நல்ல படியா கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பம் நடத்தும் னு சொல்லிட்டு ஜாதகத்தை மூடி கீழ வைச்ச ஜோசியனை பார்த்து இது எம்மகள் ஜாதகம் இல்ல உன் மகள் ஜாதகம் டா ன்னு சொல்லிட்டு இன்னொரு ஜாதகமும் இருக்கு பாக்குறியா ? ன்னு சொல்லிட்டு ஒரு நூறு ரூபா தாளை எடுத்து அவன் மூஞ்சியில் வீசிவிட்டு வெளிய வருவதாகவும், அதிலிருந்து ஜோசியன் தன் தொழிலை விட்டதாக  கதை முடியும். ஒவ்வொரு கதையின் முடிவில் செம சுவையான முடிவு காத்திருக்கிறது.

இதுமாத்திரமில்லாமல் இதிலிருக்கும் கதைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சுவையில் மனதை தைக்க கூடிய விஷயம் அடங்கியிருக்கும். கொடுக்கும் காசிற்கு நிச்சயம் மன நிறைவை அடைவீர்கள்.

பக்கங்கள் : 152

பதிப்பகம் : க்ரியா 

வெளியீடு : 2009

விலை : ரூபாய் 125/-   


படித்துச் சொன்னது 

அரசன் 
http://www.karaiseraaalai.com/
   

 

Thursday, February 27, 2014

குடி முந்திரி - தங்கர் பச்சான்


பொதுவாக திறமை இருப்பவர்கள்  பொது வெளியில் அதிகம் பேச மாட்டார்கள், அப்படி பேசினாலும் ஒன்றிரண்டு வார்த்தைகளோடு நழுவுகின்ற திறமைசாலிகளுக்கு மத்தியில், நேர் எதிர் குணம் கொண்டவர் தான் இந்நூலின் ஆசிரியர் திரு. தங்கர் பச்சான். அதிகம் பேச மாட்டார், மீறி பேசினால் "அதிகம் பேசப்படுவார்!"

பன்முகம் கொண்ட திறமைசாலி, திரைத்துறையில் இவரைப்பற்றிய பிம்பங்கள் எப்படி இருந்தாலும், தமிழ் எழுத்துலகில் இவருக்கென தனி இடம் இருக்கிறது! உணர்வுகளை மையப் படுத்தியே படைப்புகளை உருவாக்குவார்!


கற்பனைக் கலவைகளை தவிர்த்து, வாழ்வியலை பதிவு செய்வதில் பெரும் ஆர்வம் மிகுந்தவர். வாசித்து முடிக்கையில் நிச்சயம் அதிர்வை ஏற்படுத்தும் இவரின் எழுத்துக்கள்! அதற்கு சான்று இந்த குடி முந்திரி எனும் சிறுகதை தொகுப்பு.                                            


1) குடி முந்திரி 

2) பெரு வழியில் 
ஒரு கூத்து மேடை 

3) வளர்க தமிழ்!

4) பசு 

5) வக்கிரம் 

6) சக மானுடங்களும், 
தரச் சான்றிதழ் 
கிட்டாத அறவாழி 
என்கிற ஒரு 
தமிழ் எழுத்தாளனும்!







மேற் சொன்ன தலைப்புகளில் ஆறு சிறுகதைகள் உள்ளடங்கி இருக்கின்றன, ஒவ்வொன்றும் தனி இரகம்! வாழ்ந்த வாழ்வியலை, பழகிய மக்களின் பழக்க முறைகளை, மக்களின் மொழியிலே கொடுத்திருப்பது தான் இந்நூலின் கூடுதல் அழகு! இதில் சிறப்பு என்னவெனில் கதையின் மையக்கருவோடு, கதை நடைபெறும் சூழலையும் போகிறப் போக்கில்  பொட்டில் அறைந்த மாதிரி சொல்லியிருப்பதும் தான்!  

முதல் கதையான "குடி முந்திரியில்" படிப்பறிவு இல்லா தன் வம்சத்தில் தன் மகன் வாங்கப் போகும் பட்டத்திற்காக/ மகனின் ஆசைக்காக, குல சொத்தான குடி முந்திரியை விற்பதை எத்தனை நுணுக்கமுடன் பதிவு செய்திருக்கிறார் என்பதை அந்த சூழலில் வளர்ந்தவன் என்கிற முறையில் நன்கு உணர முடிந்தது, படித்துப் பாருங்கள் நீங்களும் உணர்வீர்கள்!

அடுத்து "பசு" எனும் தலைப்பில், மனித உணர்வுகளை, எண்ணங்களை மிக அற்புதமாய் பதிவு செய்திருக்கிறார்! ஏதோ ஒரு சூழ்நிலையில் தவறு செய்த ஒருவனின் தவிப்பை,  மன ஓட்டங்களை மிக துல்லியமாக எழுத்தில் கொண்டு வந்திருக்கும் இந்த தொகுப்பில் உள்ள அனைத்தும், நினைவில் பதியும் தன்மை கொண்ட அழகிய படைப்புகள்! ஒரு பானைக்கு இந்த இரண்டு பருக்கைகளே போதுமென்று நம்புகிறேன்! வாய்ப்பு கிட்டும்போது வாங்கி வாசித்துப் பாருங்கள், கொடுக்கும் காசுக்கு மனம் நிறைவடையலாம்!
வெளியீடு :



செம்புலம் 
50, 5வது தெரு, அச்சுதன் நகர்,
ஈக்காட்டுதாங்கல், சென்னை - 97.
மின் அஞ்சல் : sempulam @ yahoo.com   




வெளிவந்த ஆண்டு : 2003, விலை : 75